கொரோனாவால் அதிர்ஷ்டம்... ஒரு கார் வாங்கினால் ஒரு கார் இலவசம்... முன்பணம் வெறும் ரூ.1,500 மட்டும்தான்
கொரோனா பிரச்னையால் சரிந்த விற்பனையை சீராக்குவதற்காக, ஒரு கார் வாங்கினால் ஒரு கார் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் (கோவிட்-19) உலகையே ஆட்டி படைத்து வருகிறது. கொத்து கொத்தாக மனித உயிர்கள் பலியாகி கொண்டிருக்கும் அதே நேரத்தில், பல்வேறு தொழில்களும் கொரோனா வைரஸால் நலிவடைந்து வருகின்றன. இதில், ஆட்டோமொபைல் துறை முக்கியமானது. உலகின் பல்வேறு நாடுகளிலும் தற்போது வாகன விற்பனை வரலாறு காணாத அளவிற்கு சரிவடைந்து வருகிறது.

இதில், பிலிப்பைன்சும் ஒன்று. பிலிப்பைன்ஸில் கடந்த மே மாதத்தில் வெறும் 4,788 வாகனங்கள் மட்டும்தான் விற்பனையாகியுள்ளன. கடந்த 2019ம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 85 சதவீதம் குறைவாகும். அதற்கு முந்தைய ஏப்ரல் மாதத்திலோ பிலிப்பைன்ஸில் வெறும் 133 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட மிக கடுமையான ஊரடங்கு உத்தரவுகளே இதற்கு காரணம். பிலிப்பைன்ஸில் கடந்த மார்ச் மாத மத்தியில் இருந்து மிகவும் கடுமையான ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால் பலர் வேலையிழந்துள்ளனர். இதன் எதிரொலியாக வாகனங்களின் விற்பனை சரிவடைந்துள்ளது.

இதனால் வாகன விற்பனையை அதிகரிப்பதற்காக பிலிப்பைன்ஸில் தற்போது வாடிக்கையாளர்களுக்கு மிக கவர்ச்சிகரமான சலுகைகளை கார் நிறுவனங்களும், டீலர்களும் வழங்கி வருகின்றனர். இதில், ஒரு கார் வாங்கினால் இன்னொரு கார் இலவசம் என்ற அறிவிப்புதான் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பிலிப்பைன்ஸ் தலைநகரான மணிலாவில் உள்ள ஒரு ஹூண்டாய் டீலர்ஷிப், சாண்டா ஃபீ (Santa Fe) கார் வாங்கும் அனைவருக்கும், அசெண்ட் அல்லது ரெய்ன்னா கார்களில் ஒன்றை இலவசமாக வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சாண்டா ஃபீ எஸ்யூவி ரக கார் ஆகும். பிலிப்பைன்ஸில் 2.5 மில்லியன் பெசோக்களுக்கு சாண்டா ஃபீ விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பெசோ என்பது பிலிப்பைன்ஸ் பணம் ஆகும். இந்திய மதிப்பில் 2.5 மில்லியன் பெசோக்கள் என்பது சுமாராக 37 லட்ச ரூபாய். இந்த காரை வாங்கினால், 6.83 லட்சம் பெசோக்கள் மதிப்புடைய அசெண்ட் அல்லது ரெய்ன்னா கார் இலவசமாக வழங்கப்படுகிறது. 6.83 லட்சம் பெசோக்கள் என்பது இந்திய மதிப்பில் தோராயமாக 10.37 லட்ச ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

பிலிப்பைன்ஸில் இருந்து வெளியாகும் ஆன்லைன் ஆட்டோமொபைல் மேகசின் ஒன்று இந்த செய்தியை தற்போது வெளியிட்டுள்ளது. அதே சமயத்தில் வெறும் 1,000 பெசோக்களை (18 டாலர்கள்) முன் பணமாக செலுத்தினால், கியா பிக்காண்டோ காரை வீட்டிற்கு ஓட்டி வரலாம் எனவும் பிலிப்பைன்ஸில் இருந்து வெளிவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய மதிப்பில் பார்த்தால், இது வெறும் 1,500 ரூபாய் மட்டும்தான். இதுபோன்ற அறிவிப்புகள் மூலமாக கார் விற்பனையை அதிகரிக்க முடியும் என ஆட்டோமொபைல் நிறுவனங்கள் நம்புகின்றன. இந்தியாவிலும் கூட தற்போது வாகன விற்பனை மிகவும் மந்தமாகதான் இருந்து வருகிறது. ஆனால் இதே கொரோனா பிரச்னையால், எதிர்காலத்தில் வாகன விற்பனை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, பஸ், ஆட்டோ, டாக்ஸி போன்ற பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்ய மக்கள் தயங்குகின்றனர். அதற்கு பதிலாக சொந்த வாகனங்களில் பயணிப்பதைதான் பாதுகாப்பானதாக கருதுகின்றனர். இதன் காரணமாக வரும் மாதங்களில், ஆட்டோமொபைல் துறை இயல்பு நிலைக்கு திரும்பும் என நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications








