வீட்டுக்கே டீசல் வருது! அதுவும் இலவசமா! இந்த ஊர்க்காரங்களுக்கு ஒடம்பெல்லாம் மச்சம்!
தற்போதெல்லாம் பெட்ரோல் பங்க்குகளுக்கு சென்று வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவது என்பது சற்று கடினமான ஒரு விஷயமாக மாறி விட்டது. முதலில் பெட்ரோல் பங்க்கை நீங்கள் கண்டறிய வேண்டும். அதன் பின்னர் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டும். அதற்கு பிறகுதான், உங்கள் வாகனத்திற்கு எரிபொருள் கிடைக்கும்.
ஆனால் இந்த பிரச்னைகள் எதுவும் இல்லாமல், உங்கள் வீட்டிற்கே எரிபொருள் வந்து சேர்ந்தால் எப்படி இருக்கும்? நன்றாக இருக்கும்தானே! ஆனால் இதற்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படும் என நீங்கள் நினைக்கலாம். எனினும் அப்படியான கூடுதல் கட்டணம் எதுவும் இல்லாமல், இலவசமாகவே உங்கள் வீட்டிற்கு எரிபொருள் வந்து சேர்ந்தால், உண்மையிலேயே அது மிகவும் சிறப்பான ஒரு திட்டமாக இருக்கும் அல்லவா?

இந்த சிறப்பான திட்டம் ஐதராபாத் (Hyderabad) நகரில் தற்போது அமலுக்கு வந்துள்ளது. food_hud என்ற இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில், இது தொடர்பான வைரல் வீடியோ (Viral Video) வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதிவில், எந்தவிதமான கூடுதல் கட்டணமும் இல்லாமல், உங்கள் வீட்டிற்கே டீசல் டெலிவரி செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.
நீங்கள் டீசலுக்கான கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும். இதற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், அந்த இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனிடைம் டீசல் (Anytime Diesel) என்ற செல்போன் செயலியை டவுன்லோடு செய்து, உங்கள் வீட்டிற்கே நீங்கள் டீசலை வரவழைத்து கொள்ள முடியும்.

தற்போது நாம் உணவு மற்றும் மளிகை பொருட்களை, செல்போன் செயலி மூலம் ஆர்டர் செய்து, வீட்டிற்கே வரவழைக்கிறோம் அல்லவா? எனிடைம் டீசல் செல்போன் செயலியும் இதேபோலதான் செயல்படும். இதில், நீங்கள் ஆர்டர் செய்து விட்டால், உங்கள் வீட்டிற்கே டீசல் வந்து விடும். ஆனால் குறைந்தபட்சம் 2 லிட்டர் டீசலை நீங்கள் ஆர்டர் செய்ய வேண்டும்.
அதிகபட்சமாக 6 ஆயிரம் லிட்டர் வரை ஆர்டர் செய்யலாம். உணவு மற்றும் மளிகை பொருட்களை ஆர்டர் செய்யும் செல்போன் செயலிகளை போல், எனிடைம் டீசல் செல்போன் செயலிலும், டீசல் எப்போது வீட்டிற்கு வந்து சேரும்? என்பதை 'டிராக்' செய்து கொள்ளலாம். அத்துடன் டெபிட்/கிரெடிட் கார்டுகள், யுபிஐ மற்றும் டிஜிட்டல் வாலட்கள் மூலமாக நீங்கள் பணம் செலுத்தலாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கூடுதல் கட்டணம் எதுவும் இல்லாமல், இலவசமாகவே வீடுகளுக்கு வந்து டீசலை டெலிவரி செய்வது சிறப்பானது. இது போன்ற திட்டங்கள் இந்தியாவின் மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என நாங்கள் கருதுகிறோம். அதேபோல் டீசல் மட்டுமல்லாது, பெட்ரோலும் டெலிவரி செய்யப்பட வேண்டும். இது போன்ற திட்டங்கள் மூலமாக பெட்ரோல் பங்க்குகளை தேடும் நேரத்தையும், அங்கு வீணாக காத்து கொண்டிருக்கும் நேரத்தை நம்மால் வெகுவாக குறைக்க முடியும்.
ஆனால் புதுமையான திட்டங்கள் நடைமுறைக்கு வரும் அதே நேரத்தில், பாதுகாப்பையும் உறுதி செய்வது அவசியமானது. ஏனெனில் பெட்ரோல் மற்றும் டீசல் போன்றவை எளிதில் தீப்பற்றக்கூடிய எரிபொருட்கள் ஆகும். எனவே அவற்றை இடமாற்றம் செய்யும்போதும், டெலிவரி செய்யும்போதும், மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது.


Click it and Unblock the Notifications








