2 நாட்களாக எரியும் சரக்கு கப்பல்!! உள்ளே இவ்வளவு பெரிய மேட்டரு இருக்கா - கடலிலேயே மூழ்கடிக்க திட்டம்!
நெதர்லாந்துக்கு அருகே வடக்கு கடலில் சுமார் 3,000 வாகனங்களை ஏற்றிச் சென்ற சரக்கு கப்பலில் தீப்பிடித்துள்ளது. பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ் என விலையுயர்ந்த கார்கள் இந்த கப்பலில் எரிந்து தீக்கு இரையாகி உள்ள நிலையில், கப்பலில் பணியாற்றி வந்த இந்தியாவை சேர்ந்த பணியாளர் ஒருவர் இந்த தீ விபத்தில் இறந்துள்ளதாக அதிர்ச்சிக்கர தகவல் வெளியாகியுள்ளது.
கப்பல் பயணங்கள் எப்போதுமே மகிழ்ச்சியானவை மற்றும் சுவாரஸ்யமானவை. சில கப்பல்கள் மாதக்கணக்கில் கூட கடலில் பயணம் செய்கின்றன. கப்பல் பயணத்தில் உள்ள பிரச்சனையும் இதுதான். ஏனெனில் பல மாதங்களுக்கு பயணம் செய்ய வேண்டும் எனும்போது, அதற்கேற்ப தயாராகுவதும் சிரமமானதாக அமைந்து விடுகிறது.

குறிப்பாக, கடலில் பல மாதங்களுக்கு பயணிக்கும் சரக்கு கப்பல்களில் பயணத்தை துவங்குவதற்கு முன்பு பல்வேறு சோதனைகளும், சரிப்பார்ப்புகளும் நடத்தப்படும். அதுமட்டுமின்றி, இவ்வாறான நீண்ட மாத கால பயணங்களை பெரும்பாலும் நிலத்தில் இருந்து உடனே உதவி கிடைக்கும் தூரத்திலேயே மேற்கொள்வர். அப்படி இருந்தும், சில சமயங்களில் தீ விபத்து போன்ற அசம்பாவித சம்பவங்கள் கப்பல்களில் ஏற்படுகின்றன.
அவ்வாறு டச்சு கடல் பகுதியில், 3,000 வாகனங்களை ஏற்றி சென்ற கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம். நெதர்லாந்து நாட்டின் நேரப்படி, கடந்த ஜூலை 25ஆம் தேதி நள்ளிரவில் ஃப்ரேமண்டில் ஹைவே (Fremantle Highway) என பெயர் கொண்ட இந்த சரக்கு கப்பலில் தீ பிடித்துள்ளது. தீ பிடித்த சமயத்தில் கப்பலில் 23 பேர் பராமரிப்பு உள்ளிட்ட பணிகளுக்காக இருந்துள்ளனர்.

கப்பலில் தீ பிடித்ததை அறிந்ததும் ஆரம்பத்தில் தீயை அணைக்க முயன்றவர்கள், பின்னர் அது முடியாது என தெரிந்ததும் கப்பலில் இருந்த உயிர் பாதுகாப்பு படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்களில் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர். இருப்பினும், கப்பலில் இருந்த மாலுமி ஒருவர் தீயில் கருகி உயிரிழந்து விட்டதாகவும், அவர் நமது இந்தியாவை சேர்ந்தவர் எனவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய நிலவரப்படி, ப்ரேமண்டில் ஹைவே கப்பலில் தீ இன்னமும் எரிந்து கொண்டுத்தான் இருக்கிறது. தீ முழுவதுமாக அணைந்த பின் கப்பலை வேறொரு கப்பலின் உதவியுடன் அழைத்து வருவதோ அல்லது கப்பலை அங்கேயே கடலில் மூழ்கடிக்க செய்யவோ மட்டுமே முடியும், மற்றப்படி கப்பலை இயக்க முடியாது என நெதர்லாந்து நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் நீர்வளத்துறை அமைச்சம் தெரிவித்துள்ளது.
தீயை அணைப்பதில் உள்ள பிரச்சனை என்னவென்றால், கப்பலில் தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. அத்துடன், தீ கொளுந்துவிட்டு எரிவதினால் எவரொருவரையும் விபத்திற்குள்ளான கப்பலில் ஏற்ற முடியாது. கஷ்டப்பட்டு தீயை அணைத்தாலும் பிரச்சனை உள்ளது. ஏனெனில், கப்பலில் பல்வேறு பயன்பாடுகளுக்காக அதிகளவில் நீர் உள்ளது. தீயில் எரிந்து கப்பலின் சில பாகங்கள் சாம்பலாகி விட்டன.

ஆதலால், தீயை அணைத்தாலும் கப்பல் கடலில் மிதப்பதற்கு எந்த அளவிற்கு நிலைத்தன்மை உடன் இருக்கும் என்பது தெரியாது. இதன் காரணமாகவே, தீயை அணைத்தாலும் கப்பலை இயக்க முடியாது, கப்பலை அங்கேயே கடலுக்குள் விட்டு விட்டு வர வேண்டிய நிலைமை கூட ஏற்படலாம் என கூறும் நெதர்லாந்து நாட்டு அரசாங்கம், ஆட்களை பாதிக்கப்பட்ட கப்பலில் ஏற்றவும் தயங்குகிறது.
பனாமா நாட்டு கொடியுடன் இருக்கும் இந்த சரக்கு கப்பல் எகிப்தில் இருக்கும் சைடு துறைமுகத்தை நோக்கி சென்று கொண்டிருந்துள்ளது. இதற்கிடையில், ஜெர்மனியின் பிரேமெர்ஹவென் துறைமுகத்தில் கடைசியாக நிறுத்தப்பட்டது. பின்னர் பயணத்தை மீண்டும் துவங்கிய நிலையில், நெதர்லாந்து நாட்டை கடக்கும் போது இந்த தீ விபத்து நடந்துள்ளது. தீயில் சிக்கி இருக்கும் ஃப்ரேமண்டில் ஹைவே கப்பலில் மொத்தம் 2,857 கார்கள் உள்ளதாகவும், இதில் 25 எலக்ட்ரிக் கார்கள் அடங்குகின்றன எனவும் செய்திகள் கூறுகின்றன.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: தீப்பிடித்த கப்பலை மீட்பது என்பது நாம் நினைப்பதை விட சிரமமான காரியம் ஆகும். கடந்த ஆண்டில் கூட அமெரிக்காவுக்கு ஏறக்குறைய 4,000 ஃபோக்ஸ்வேகன் கார்களை ஏற்றி கொண்டு சென்ற சரக்கு கப்பல் தீப்பிடித்து எரிந்தது. தீயை அணைத்து, அந்த கப்பலை வேறொரு கப்பலின் உதவியுடன் கரைக்கு கொண்டுவருவதற்குள் 1 வாரத்திற்கு மேல் ஆகிவிட்டது. ஃப்ரேமண்டில் ஹைவே கப்பலை கடலில் மூழ்க விடாமல் குறைந்தது அவ்வாறாவது மீட்க வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பம்.


Click it and Unblock the Notifications









