எரிபொருளை தண்ணியாக செலவழித்தால் சிக்கல்தான்... டிரைவிங் லைசென்ஸ் விஷயத்தில் அதிரடி நடைமுறை...
வாகனம் ஓட்ட தெரிந்தால் மட்டும் போதாது. எரிபொருளை சிக்கனமாகவும் பயன்படுத்த தெரிய வேண்டும். இல்லாவிட்டால் டிரைவர்களுக்கு சிக்கல்தான். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பெட்ரோல், டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய் வளம் இல்லாத நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால் இந்தியாவில் மக்கள் தொகை மிக அதிகம். அதற்கேற்ப வாகனங்களின் எண்ணிக்கையும் மிக அதிகமாக உள்ளது. எனவே இந்தியாவிற்கு மிக அதிக அளவில் பெட்ரோல், டீசல் தேவைப்படுகிறது.

ஆனால் கச்சா எண்ணெய் வளம் இல்லாததால், சவுதி அரேபியா மற்றும் குவைத் போன்ற நாடுகளில் இருந்து செய்யப்படும் இறக்குமதியைதான் இந்தியா பெரிதும் நம்பியுள்ளது. நமது நாட்டின் கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 85 சதவீதம் இறக்குமதியின் மூலமாக மட்டுமே பூர்த்தி செய்யப்படுகிறது.

இதற்காக இந்தியா ஒரு ஆண்டுக்கு பல லட்சம் கோடி ரூபாய்களை செலவிட்டு வருகிறது. இது இந்தியாவின் பொருளாதாரத்தில் மிக கடுமையான பாதிப்புகளை உண்டாக்கி விடுகிறது. எனவே நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க மத்திய அரசு விரும்புகிறது.

கடந்த 2014ம் ஆண்டு முதல் முறையாக பிரதமர் பொறுப்பை ஏற்றபோதே, கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க வேண்டும் என நரேந்திர மோடி பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்பின் அரியணையில் அமர்ந்ததும் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க தேவையான நடவடிக்கைகளை அவர் துரிதப்படுத்தினார்.

பொதுவாக கனரக வர்த்தக வாகனங்கள்தான் அதிகப்படியான எரிபொருளை குடிக்கின்றன. ஆனால் அதன் டிரைவர்கள் மனது வைத்தால், கணிசமான அளவில் எரிபொருளை அதிகம் சேமிக்க முடியும். எனவே கனரக வர்த்தக வாகனங்களை இயக்கும் டிரைவர்களின் ''டிரைவிங் ஸ்டைல்'' மேம்பட வேண்டும் என அரசு விரும்புகிறது. இதன் மூலம் எரிபொருளை மிச்சம் பிடிக்க முடியும் என அரசு நினைக்கிறது.

எனவே லைசென்ஸை புதுப்பிக்க விரும்பும் கனரக வர்த்தக வாகனங்களின் டிரைவர்களுக்கு எரிபொருள் சிக்கன தேர்வு தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில், ஓட்டுனர்களின் டிரைவிங் ஸ்டைல் மற்றும் எரிபொருள் சிக்கனத்தில் அவர்களுக்கு உள்ள திறன்கள் குறித்து விரிவாக பரிசோதனை செய்து பார்க்கப்படும்.

இதில் தோல்வியடைந்தால், சம்பந்தப்பட்ட டிரைவரின் லைசென்ஸ் புதுப்பிக்கப்படாது. அந்த நபர் மீண்டும் தேர்வில் பங்கேற்று தேர்ச்சியடைந்தால் மட்டுமே அவரது டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிக்கப்படும். இந்த தேர்வின் போது, குறிப்பிட்ட அளவிலான எரிபொருளை மட்டுமே சம்பந்தப்பட்ட டிரைவர் பயன்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை சரியாக செய்து விட்டால், அவர் தேர்ச்சி பெற்றவராக கருதப்படுவார். ஒருவேளை எதிர்பார்க்கும் அளவிற்கும் மேலாக எரிபொருளை பயன்படுத்தினால், அவர் தோல்வியடைந்தவராக கருதப்படுவார். தோல்வியடைந்து விட்டால், மீண்டும் தேர்வில் பங்கேற்க வேண்டும். மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரில்தான் இந்த திட்டம் தற்போது அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆனால் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதலே இந்த தேர்வு கட்டாயமாக்கப்பட்டு விட்டதாக நாசிக் ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தேர்வு லாரி மற்றும் பஸ் டிரைவர்களுக்கு மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே குறிப்பிட்டதைபோல் லாரி, பஸ் போன்ற கனரக வர்த்தக வாகனங்கள்தான் அதிக எரிபொருளை செலவு செய்கின்றன.

இந்த தேர்வை நடத்துவதற்கு என 5 கிலோ மீட்டர் சாலை ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், வளைவுகள், சரிவுகள் மற்றும் நேரான பாதை என அனைத்தும் அடங்கியிருக்கும். இங்குதான் கனரக வர்த்தக வாகனங்களின் டிரைவர்கள், வாகனத்தை இயக்க வேண்டும். அப்போது எரிபொருள் நுகர்வு உபகரணம் மூலமாக சம்பந்தப்பட்ட டிரைவர் பரிசோதிக்கப்படுவார்.

இதில் சம்பந்தப்பட்ட டிரைவர் குறிப்பிட்ட அளவு எரிபொருளை மட்டுமே பயன்படுத்தியுள்ளாரா? அல்லது அதற்கும் அதிகமாக உபயோகித்துள்ளாரா? என்பது தெளிவாக தெரிந்து விடும். பின்னர் இது தொடர்பான அச்சிடப்பட்ட அறிக்கை ஆர்டிஓ அதிகாரிகளுக்கு வழங்கப்படும். இதனை அடிப்படையாக வைத்து இறுதி முடிவை அவர்கள் எடுப்பார்கள்.


Click it and Unblock the Notifications