கொரோனா வைரஸின் தாக்கம்... இந்தியாவின் எரிபொருள் தேவை பாதியாக குறைந்தது...
கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவின் எரிபொருள் தேவை ஏப்ரல் முதல் பாதியில் 50 சதவீதமாக குறைந்துள்ளது. இதுகுறித்த முழுமையான தகவல்களை இந்த செய்தியில் காண்போம்.

கொரோனா தாக்கத்தினால் நாடு முழுவதும் கொண்டுவரப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் போக்குவரத்தும், தொழிற்சாலை செயல்பாடுகளும் முடங்கியுள்ளன. இதன் காரணமாக கடந்த ஆண்டை காட்டிலும் நடைபெற்றுவரும் ஏப்ரல் மாதத்தின் முதல் இரு வாரங்களில் 50 சதவீதம் குறைவான எரிபொருள் விற்பனையை இந்தியன் ஸ்டேட் சில்லறை விற்பனையாளர்கள் பதிவு செய்துள்ளனர்.

இந்தியாவில் எரிபொருள் சில்லரை வணிகத்தை இந்தியன் ஆயில்கார்ப், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப் மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனங்களே 90 சதவீதம் மேற்கொண்டு வருகின்றன. இந்த ஏப்ரல் மாத முதல் 15 நாட்களில் இந்தியாவில் பெட்ரோல் விற்பனை, இந்த ஆண்டின் துவக்க மாதங்களில் விற்பனையானதை காட்டிலும் 61 சதவீதம் குறைந்துள்ளது.

இதில் பெட்ரோல் விற்பனை 64 சதவீதமும், விமான எரிபொருளின் விற்பனை சுமார் 94 சதவீதமும் குறைந்துள்ளதாக பெயர் வெளியிட விரும்பாத இரு நிறுவனங்கள் கூறியுள்ளன. இந்தியாவின் எரிபொருள் தேவையில் கச்சா எண்ணெய், நிலக்கரி மற்றும் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு (எல்பிஜி) உள்ளிட்டவை அடங்கும்.

எல்பிஜி சிலிண்டர் விற்பனையை பொறுத்தவரையில் விற்பனையாளர்கள் இந்த ஆண்டின் முந்தைய மாதங்களை காட்டிலும் 21 சதவீதம் அதிகமான விற்பனையை பெற்றுள்ளனர். ஏனெனில் ஊரடங்கினால் ஏழை எளியோர் பயன்பெறும் வகையில் இந்திய அரசாங்கம் ஏப்ரலில் இருந்து அடுத்த மூன்று மாதங்களுக்கு இலவச சிலிண்டர்களை வழங்கவுள்ளது.

இதன் காரணமாக எல்பிஜி சிலிண்டரின் தேவை நாடு முழுவதும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் ஊரடங்கு அடுத்த மாதம் 3ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டாலும், சரிவை கண்டுவரும் பொருளாதாரத்தை மீட்கும் முயற்சியாக கொரோனா வைரஸ் ஹாட்ஸ்பாட் அல்லாத பகுதிகளில் ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பிறகு தொழிற்சாலைகளை திறந்து கொள்ளலாம் என அரசாங்கம் அனுமதித்துள்ளது.

சர்வதேச எரிசக்தி நிறுவனம் (ஐஇஏ) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில், கச்சா எண்ணெய் தேவை கடந்த மார்ச் மாதத்தில் 2.4 சதவீதம் அதிகரித்து இருந்தாலும், மொத்த 2020ஆம் ஆண்டில் 5.6 சதவீதம் குறையும் என கூறப்பட்டுள்ளது. இதன்படி இந்தியாவில் பெட்ரோல் தேவை 9 சதவீதமும், டீசல் தேவை 6.1 சதவீதமும் குறையவுள்ளன.

எரிபொருள் தேவை இவ்வாறு தொடர்ந்து சரிந்து வருவதால் சில கச்சா எண்ணெய் சுத்திகரிப்பாளர்கள் கச்சா எண்ணெய் செயலாக்கத்தை பாதியாகவும், வெளிநாடுகளுக்கு ஏற்ற்மதி செய்யப்படும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கான வரியையும் ஏற்கனவே அதிகரித்துவிட்டனர்.

இதற்கிடையில் உள்நாட்டு விமான சேவைகள் அடுத்த மாதத்தில் இருந்தும் வெளிநாட்டு விமான சேவை ஜூன் மாதத்தில் இருந்தும் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. ஒருவேளை இவ்வாறு விமான சேவைகள் விரைவாக துவங்கப்பட்டால் விமான எரிபொருளின் தேவை வரும் மாதங்களில் அதிகரிக்க வாய்ப்புண்டு.


Click it and Unblock the Notifications








