பெட்ரோல் விலை விரைவில் ரூ.100ஐ கடக்கிறது.. எண்ணெய் நிறுவனங்களின் திடீர் நடவடிக்கைகளால் மக்கள் பீதி
பெட்ரோல் விலை வெகு விரைவில் 100 ரூபாயை கடக்கலாம் என்ற அச்சம் வாகன ஓட்டிகள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது. ஏனெனில் எண்ணெய் நிறுவனங்களின் செயல்பாடுகள் அதனை உறுதிபடுத்துவது போல் உள்ளன.
பெட்ரோல் விலை வெகு விரைவில் 100 ரூபாயை கடக்கலாம் என்ற அச்சம் வாகன ஓட்டிகள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது. ஏனெனில் எண்ணெய் நிறுவனங்களின் செயல்பாடுகள் அதனை உறுதிபடுத்துவது போல் உள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. இதனால் நடுத்தர வர்க்க மக்கள் மிக மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையையும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு இதுவரை எடுத்ததாக தெரியவில்லை. இதனால் மத்திய அரசு கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது.

குறைந்தபட்சம் ஜிஎஸ்டி வரம்பிற்குள்ளாவது பெட்ரோல், டீசலை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. ஏனெனில் ஜிஎஸ்டி வரம்பிற்குள் வரும் பட்சத்தில், பெட்ரோல், டீசலின் விலை சற்றே குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இந்த கோரிக்கைக்கும் மத்திய அரசு இன்னும் செவி மடுக்கவில்லை. இதனால் தற்போது மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு வரிகள் பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விலையில் பெட்ரோல், டீசல் விற்பனையாகி வருகிறது.

தமிழக தலைநகர் சென்னையில் இன்றைய நிலவரப்படி (செப்.26) ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 86.13 ரூபாய். அதே சமயம் சென்னையில் இன்று, ஒரு லிட்டர் டீசல் 78.36 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையின் நிலைமை இப்படி இருக்க, இந்தியாவின் பல்வேறு நகரங்களில் பெட்ரோல் விலை ஏற்கனவே 90 ரூபாயை கடந்து விட்டது. உதாரணமாக மும்பையை எடுத்து கொள்ளலாம். மும்பையில் இன்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.90.22க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.78.69க்கும் விற்பனையாகிறது.

இதன் காரணமாக பெட்ரோல் விலை விரைவில் 100 ரூபாயை கடக்கலாம் என்ற அச்சம் வாகன ஓட்டிகள் மத்தியில் நிலவி வருகிறது. ஆனால் வாகன ஓட்டிகளுக்கு ஆறுதலான ஒரு செய்தி கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது.

பெட்ரோல் விலை தற்போதைக்கு 100 ரூபாயை கடப்பதற்கு வாய்ப்பு இல்லை என்பதுதான் அந்த செய்தி. இந்தியாவில் உள்ள பெட்ரோல் வினியோகம் செய்யும் இயந்திரங்களின் அமைப்புதான் அதற்கு காரணம் என வெளியான தகவல்களால் வாகன ஓட்டிகள் சற்றே நிம்மதி அடைந்தனர்.

அதாவது பெட்ரோல் வினியோகிக்கும் இயந்திரங்களில் இன்டிகேட்டர் ஒன்று இருக்கும். அன்றைய தினத்தில் பெட்ரோல் விலை எவ்வளவு? என்பதை இந்த இன்டிகேட்டர்கள் காட்டும். உங்கள் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்புவதற்காக பங்க்குகளுக்கு செல்லும்போது நீங்கள் இதை கவனித்திருக்கலாம்.

இந்தியாவில் பெட்ரோல் விலையானது, தினசரி அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. எனவே பெட்ரோல் வினியோகிக்கும் இயந்திரங்களில், விலை எவ்வளவு? என்பது நாள்தோறும் மாற்றி அமைக்கப்படும். ஆனால் தற்போதைய நிலவரப்படி 99.99 ரூபாய்க்கு மேல் மாற்றியமைக்க முடியாது.

அதாவது 99.99 ரூபாய் வரையிலான விலை ஏற்றத்தை மட்டுமே, பெட்ரோல் வினியோகம் செய்யும் இயந்திரங்களில் 'செட்' செய்ய முடியும். ஒரு வேளை பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்தால், அந்த இயந்திரங்களால் விலையை காட்ட முடியாது. எனவே மேன்யூவலாக மட்டுமே பில்களை கணக்கிட முடியும்.

ஆனால் மேன்யூவலாக பில்களை கணக்கிடுவது என்பது மிகவும் சவால் நிறைந்த பணியாகும். அத்துடன் தசம புள்ளிக்கு முன்பாக மூன்று இலக்க விலையை காட்டும் வகையில் இயந்திரங்களை மாற்றியமைக்க வேண்டும் என்றாலும், நீண்ட காலம் பிடிக்கும் என கூறப்பட்டது.

எனவேதான் பெட்ரோல் விலை தற்போதைக்கு சதம் அடிக்க வாய்ப்பே இல்லை என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் சற்றே நிம்மதி அடைந்திருந்தனர். ஆனால் அந்த நிம்மதிக்கு வேட்டு வைக்கும் வகையிலான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

ஆம், எண்ணெய் நிறுவனங்களும், பெட்ரோல் பங்க் நிர்வாகங்களும் தற்போதே சுதாரித்து கொண்டுள்ளன. மூன்று இலக்க விலையை டிஸ்ப்ளே செய்யும் வகையில், பெட்ரோல் வினியோகிக்கும் இயந்திரங்களை அப்கிரேட் செய்யும் பணிகளை அவர்கள் தற்போது தொடங்கியுள்ளனர்.

பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்தால், சரியான விலையை காட்டும் வகையில், பெட்ரோல் வினியோகம் செய்யும் இயந்திரங்கள் தற்போது வேக வேகமாக அப்கிரேட் செய்யப்பட்டு வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் கலக்கமடைந்துள்ளனர்.

நாட்டில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும் இதை செய்ய வேண்டிய தேவை தற்போது இல்லை. ஏனெனில் சில புதிய இயந்திரங்கள் 99.99 ரூபாய்க்கும் மேலான விலையை டிஸ்ப்ளே செய்யும் வகையில்தான் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஆனால் ஒரு சில பெட்ரோல் பங்க்குகளில் பழைய இயந்திரங்களே இன்றளவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த இயந்திரங்கள், தசம புள்ளிக்கு முன்பாக 2 இலக்க விலையை மட்டுமே டிஸ்ப்ளே செய்யும். அத்தகைய பழைய இயந்திரங்கள்தான் வேக வேகமாக அப்கிரேட் செய்யப்பட்டு வருகின்றன.

ஆனால் பெட்ரோல் வினியோகிக்கும் இயந்திரங்களை அப்கிரேட் செய்ய எந்த வகையான நடவடிக்கைகளை எண்ணெய் நிறுவனங்கள் எடுத்து வருகின்றன என்பது குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை.

அதாவது பழைய இயந்திரங்களுக்கு பதிலாக புதிய இயந்திரங்கள் நிறுவப்படுகின்றனவா? அல்லது தசம புள்ளிக்கு முன்பாக மூன்று இலக்க விலையை டிஸ்ப்ளே செய்யும் வகையில், சாப்ட்வேர் அப்டேட் மட்டும் செய்யப்படுகிறதா? என்பது குறித்த உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.
More from DriveSpark
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மாற்றாக கருதப்படுவது எலெக்ட்ரிக் வாகனங்கள்தான். எனவே மக்கள் வேக வேகமாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி வருகின்றனர். இந்த சூழலில், இந்தியாவின் முதல் ஸ்மார்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான ஏத்தர் 450 சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் புகைப்பட ஆல்பத்தை இங்கே காணலாம்.


Click it and Unblock the Notifications








