கிரிக்கெட் போட்டியின் ஆட்ட நாயகனுக்கு அடித்த அதிர்ஷ்டம்... விஷயத்தை கேட்டு பொறாமைபடாதீங்க...
கிரிக்கெட் போட்டியின் ஆட்ட நாயகனுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் சமீப காலமாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சில நகரங்களில் பெட்ரோலின் விலை 100 ரூபாயை கடந்து, வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் தற்போது போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த சூழலில் மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரில் ருசிகரமான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. அங்கு நடந்த கிரிக்கெட் போட்டி ஒன்றில், ஆட்ட நாயகன் விருது வென்றவருக்கு 5 லிட்டர் பெட்ரோலை பரிசாக வழங்கியுள்ளனர். இந்த போட்டி கடந்த ஞாயிற்று கிழமை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில், சலாவுதீன் அப்பாஸி என்ற வீரர் ஆட்ட நாயகன் விருது வென்றுள்ளார். இதற்கு பரிசாக 5 லிட்டர் பெட்ரோலை தட்டி சென்றுள்ளார். இந்தியாவில் எரிபொருள் விலை மிக கடுமையாக உயர்ந்து வருவதை எடுத்துக்காட்டும் வகையிலும், எரிபொருள் விலை உயர்வை கிண்டல் அடிக்கும் வகையிலும் இந்த நிகழ்வு அமைந்துள்ளது.

ஆனால் இந்தியாவில் இதுபோன்ற வித்தியாசமான சம்பவங்கள் நடைபெறுவது இது முதல் முறை கிடையாது. கடந்த காலங்களில் திருமண மேடைகளில் புதுமண தம்பதிகளுக்கு, உறவினர்களும், நண்பர்களும் பெட்ரோலை பரிசாக வழங்கியுள்ளனர். அத்துடன் கேக் வாங்கினால் பெட்ரோல் இலவசம் போன்ற அறிவிப்புகளை பேக்கரி கடைகள் வெளியிட்ட நிகழ்வுகளும் கூட நடந்தது உண்டு.

இதுபோன்ற நிகழ்வுகளை வேடிக்கையாக பார்த்தாலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் தற்போது வாகன ஓட்டிகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை மறுக்க முடியாது. அத்துடன் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வதற்கும் எரிபொருள் விலை உயர்வு மிக முக்கியமான காரணமாக இருந்து வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்னை காரணமாக எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் சிஎன்ஜி போன்ற மாற்று எரிபொருள் வாகனங்களுக்கு பலர் மாறி வருகின்றனர். இது சிறந்த தீர்வாக இருக்கும் என்பதால், இன்னும் பலர் தற்போது அதைப்பற்றி யோசித்து கொண்டுள்ளனர். எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பல்வேறு சலுகைகளும் கிடைப்பதால், மக்களின் கவனம் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீது திரும்பி வருகிறது.

ஆனால் உடனடியாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற முடியாதவர்கள், இருக்கின்ற வாகனத்தின் மைலேஜை அதிகரிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக சில பகுதிகளில் ஒர்க் ஷாப்கள் மிகவும் பிஸியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் நல்ல மைலேஜ் கிடைக்க கூடிய சாதாரண கம்யூட்டர் ரக பைக்குகளின் விற்பனையும் உயர்ந்து வருகிறது.

இதற்கிடையே குளிர்காலம் முடிவடைவதால், எரிபொருள் விலை சற்று குறையலாம் என மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சமீபத்தில் கூறியிருந்தார். அத்துடன் இந்தியாவின் 5 மாநிலங்களுக்கு விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால், வரும் நாட்களில் பெட்ரோல், டீசல் விலை குறைவதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக உள்ளன.


Click it and Unblock the Notifications








