பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்ததால் இளைஞர் செய்த காரியம்... என்னனு தெரிஞ்சா வயிறு வலிக்க சிரிப்பீங்க...
பெட்ரோல் விலை சதம் அடித்த காரணத்தால், இளைஞர் ஒருவர் மிகவும் வித்தியாசமான போராட்டத்தை நடத்தியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில், வரலாற்றில் முதல் முறையாக பிரீமியம் பெட்ரோலின் விலை, கடந்த சனிக்கிழமை 100 ரூபாயை கடந்தது. அங்கு பவர் பெட்ரோலின் விலை ஒரு லிட்டருக்கு 100.04 ரூபாயாக உயர்ந்ததால், வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இந்த விலை உயர்வை கண்டித்து, இளைஞர் ஒருவர் மிகவும் வித்தியாசமான முறையில் போராட்டம் நடத்தியுள்ளார்.

பெட்ரோல் பங்க் ஒன்றின் முன்பாக கையில் கிரிக்கெட் பேட் மற்றும் ஹெல்மெட்டுடன் நின்று அவர் இந்த வித்தியாசமான போராட்டத்தை நடத்தியுள்ளார். பெட்ரோல் விலை சதம் அடித்து விட்டது என்பதை குறிக்கும் விதமாக, கிரிக்கெட்டில் சதம் அடித்தால் பேட்ஸ்மேன்கள் எப்படி கொண்டாடுவார்களோ, அதைப்போன்று அவர் போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சம்பந்தப்பட்ட இளைஞர், இளைஞர் காங்கிரஸை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. இந்தியாவில் சமீப காலமாக பெட்ரோல், டீசல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் இன்னும் ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வரப்படவில்லை. மத்திய, மாநில அரசுகள் தனித்தனியாக வரிகளை விதித்து வருகின்றன. இந்த வரிகள் மிகவும் அதிகமாக இருப்பதால்தான், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையும் மிகவும் அதிகமாக இருக்கிறது. எனவே வரிகளை குறைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை தற்போதைக்கு குறைக்கும் எண்ணம் இல்லை என கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார். இது வாகன ஓட்டிகளை இன்னும் கவலையடைய செய்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், மக்களின் கவனம் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் மீது திரும்பி வருகிறது.

பெட்ரோல், டீசல் மீது அதிகப்படியான வரி விதித்தாலும், இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன. இதில், மானியம், சாலை வரி மற்றும் பதிவு கட்டணத்தில் இருந்து விலக்கு போன்றவை அடங்கும். இதன் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவது ஓரளவிற்கு எளிமையாக்கப்பட்டுள்ளது.

எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக, மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து வரும் காலங்களில் இன்னும் பல்வேறு சலுகைகளை எதிர்பார்க்கலாம். மத்திய, மாநில அரசுகள் வழங்கி வரும் ஆதரவு காரணமாக இந்தியாவில் தற்போது ஏராளமான எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனைக்கு வர தொடங்கியுள்ளன.

நீங்கள் எலெக்ட்ரிக் கார்களை வாங்குவதாக இருந்தால், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி, எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி, ஹூண்டாய் கோனா ஆகியவற்றை பரிசீலிக்கலாம். இவை மூன்றும் நடைமுறை பயன்பாட்டிற்கு உகந்த வகையில் உள்ளன. இந்தியாவில் கிடைக்கும் எலெக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள் அதிகமாக கிடைக்கின்றன.


Click it and Unblock the Notifications








