தேர்தல் முடிஞ்ச உடனே மறுபடியும் வேலையை காட்ட ஆரம்பிச்சுட்டாங்க... கரண்ட் ஷாக் அடித்த நிலையில் மக்கள்...
5 மாநிலங்களுக்கான தேர்தல் முடிந்த நிலையில், மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் நிகழ்வு மீண்டும் அரங்கேற தொடங்கியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் சுமார் 9 வார காலமாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. ஆனால் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியான நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் தற்போது மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த தொடங்கியுள்ளன.

இந்தியாவில் கடந்த பிப்ரவரி 23ம் தேதி எரிபொருள் விலை உயர்த்தப்பட்டிருந்தது. அதன்பின் 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தலை மனதில் வைத்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதை எண்ணெய் நிறுவனங்கள் தவிர்த்து வந்தன. தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியான நிலையில், பெட்ரோல், டீசல் விலை நேற்று (மே 4) முதல் முறையாக உயர்த்தப்பட்டது.

இதை தொடர்ந்து இன்றும் (மே 5) பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நேற்றைய விலை உயர்வை விட இன்றைய விலை உயர்வு பெரிதாக உள்ளது. இன்று ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 19 பைசாவும், ஒரு லிட்டர் டீசலின் விலை 21 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 15 பைசாவும், ஒரு லிட்டர் டீசலின் விலை 18 பைசாவும் உயர்த்தப்பட்டிருந்தது. தமிழக தலைநகர் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 92.71 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 86.10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தேர்தல் முடிந்து விட்டதால், இனி வரும் நாட்களில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் சுமார் 9 வார காலமாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாத காரணத்தால் ஏற்பட்ட வருவாய் இழப்பை இனி வரும் நாட்களில் விலையை உயர்த்துவதன் மூலமாக எண்ணெய் நிறுவனங்கள் ஈடுகட்ட முயற்சி செய்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இதனால் தினசரி வாகனங்களை பயன்படுத்துவோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஆனால் தேர்தல் சமயத்தில் விலையை உயர்த்தாமல் இருப்பது, தேர்தல் முடிந்த உடன் விலையை உயர்த்துவது என்ற பாணியை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடிப்பது இது முதல் முறை கிடையாது. இந்தியாவில் கடந்த காலங்களில் நடைபெற்ற பல்வேறு தேர்தல்களின்போதும் எண்ணெய் நிறுவனங்கள் இதே பாணியை கையாண்டுள்ளன.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்னை தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதால் இந்த பாணியை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் மட்டுமல்லாது, நடுத்தர வர்க்க மக்கள் அனைவரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து விடும் என்பதுதான் இதற்கு காரணம்.

எனவே பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் வகையில் அதனை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. இந்த கோரிக்கையை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயலாற்றுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








