கோடை காலத்தில் முழுமையாக எரிபொருள் நிரப்பினால் வாகனம் தீப்பிடிக்குமா? வைரலாகும் அதிர்ச்சி தகவல்
கோடை காலத்தில் வாகனங்களில் முழுமையாக எரிபொருள் நிரப்ப வேண்டாம் என்ற செய்தி ஒன்று சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது உண்மையா? என்பது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் தற்போது கோடை வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து கொண்டுள்ளது. அதிகபட்ச டெம்ப்ரேச்சர் காரணமாக ஏற்படும் 'ஹீட் ஸ்ட்ரோக்' உள்ளிட்ட பிரச்னைகளில் இருந்து தப்புவதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் எடுத்து வருகின்றனர்.

கோடை காலத்தில் சுட்டெரிக்கும் சூரியனிடம் இருந்து மிகவும் எச்சரிக்கையாக இருப்பது எப்படி? என்பது தொடர்பாக பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் பொதுமக்களுக்கு பலர் அறிவுரைகளை கூறி வருகின்றனர்.

இந்த வகையில், வாகன ஓட்டிகளுக்கு பயன் அளிக்கும் தகவல் எனக்கூறும் மெசேஜ் ஒன்று தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதில், கூறப்பட்டுள்ள தகவல்கள் அதிர்ச்சிகரமானவையாக உள்ளன.

''வெயில் சுட்டெரிக்கும் கோடை காலங்களில், உங்கள் வாகனத்தின் எரிபொருள் டேங்க்கை முழுமையாக நிரப்ப வேண்டாம். அவ்வாறு முழுமையாக நிரப்பினால் எரிபொருள் டேங்க் தீப்பிடித்து, வாகனம் எரிந்து விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன'' என அந்த மெசேஜில் கூறப்பட்டுள்ளது.

இதனுடன் தீயில் எரிந்து நாசமாகி கிடக்கும் ராயல் என்பீல்டு பைக்கின் புகைப்படம் ஒன்றும் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த பைக்கில் எரிபொருள் டேங்க் முழுமையாக இருந்ததாகவும், அதன் காரணமாக பைக் எரிந்து விட்டதாகவும் அந்த மெசேஜில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த பைக்கை ஓட்டி சென்று கொண்டிருந்த நபர் தீயில் கருகி விட்டதாகவும் சில மெசேஜ்களில் கூறப்படுகிறது. இதனை உண்மை என நம்பி நெட்டிசன்கள் பலரும் அவசர அவசரமாக ஷேர் செய்து வருகின்றனர்.

சமூக வலை தளங்களில் தினசரி பல்வேறு போலி செய்திகள் பரவி வருகின்றன. அதன் நம்பகத்தன்மையை கொஞ்சம் கூட ஆராயாமல் நெட்டிசன்களும் உடனடியாக பகிர்ந்து விடுகின்றனர். அந்த வகையில் காட்டு தீயாய் பரவி வரும் போலி செய்திகளில் ஒன்றுதான் இதுவும்.

கோடை காலத்தில் வாகனங்களில் முழுமையாக எரிபொருள் நிரப்பினால், டேங்க் வெடித்து விடும் என்ற குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. வாகன ஓட்டிகள் யாரும் இதனை சீரியஸாக எடுத்து கொள்ள வேண்டிய அவசியமே இல்லை.

ஆனால் இப்படி ஒரு தகவல் சமூக வலை தளங்களில் பரவுவது இது முதல் முறையல்ல. ஒவ்வொரு கோடை காலத்திலும், இந்த தகவல் பரவி கொண்டுதான் உள்ளது. ஆனால் இதுபோன்ற தகவல்கள் ஏன் வைரல் ஆகின்றன? என்பது தெரியவில்லை.

அதேபோல் இந்த தகவல்களை எல்லாம் வைரல் ஆக்குவதின் பின்னணியில் யார் உள்ளார்கள்? என்பதும் தெரியவில்லை. இந்த சூழலில் இந்த தகவல் வைரலாக பரவியதால், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கம் வாயிலாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.
இதில், ''கோடை காலம் அல்லது குளிர் காலம் எதுவாயினும், வாகன உற்பத்தியாளர்கள் குறிப்பிட்டுள்ள அளவிற்கு (அதிகபட்ச அளவு) தாராளமாக எரிபொருள் நிரப்பலாம். இது பாதுகாப்பானதுதான்'' என கூறப்பட்டுள்ளது.

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இந்த ட்விட் கடந்த 2017ம் ஆண்டு கோடை காலத்தில் வெளியிடப்பட்டது. ஆனால் இன்னமும் கூட வதந்திகள் நின்றபாடில்லை. எனவேதான் தற்போது வாகன ஓட்டிகளின் விழிப்புணர்விற்காக இந்த பதிவை வெளியிட்டுள்ளோம்.

கோடை காலங்களில் பாதி அளவிற்கு மட்டும் எரிபொருள் டேங்க்கை நிரப்புங்கள் எனவும் வைரலாக பரவும் அந்த போலி செய்தியில் குறிப்பிடப்படுகிறது. ஆனால் அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. உங்கள் தேவை மற்றும் சூழ்நிலையை பொறுத்து எவ்வளவு வேண்டுமானாலும் எரிபொருள் நிரப்பலாம்.

முன்னதாக கோடை காலத்தில் முழுமையாக எரிபொருள் நிரப்பியதால் தீப்பிடித்ததாக கூறப்படும் ராயல் என்பீல்டு பைக்கின் புகைப்படம் எங்கே எடுக்கப்பட்டது? என்பது தெரியவில்லை. வேறு ஏதேனும் ஒரு சம்பவத்தில் அந்த பைக் தீயில் கருகியிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அந்த புகைப்படத்தை இந்த தகவலுடன் இணைத்து போலி செய்தியை சமூக வலை தளங்களில் பரவ விட்டுள்ளனர். அதேபோல் அந்த ராயல் என்பீல்டு ரைடருக்கு என்ன ஆனது? என்பதும் உறுதியாக தெரியவில்லை.

ஆனால் இவை அனைத்தும் போலி செய்திதான். எனவே வாகன ஓட்டிகள் யாரும் இவற்றை வீணாக நம்ப தேவையில்லை. இந்த நேரத்தில் சமூக வலை தளங்களில் ஒரு தகவலை பகிரும் முன்பாக அதன் உண்மை தன்மையை ஒரு முறை பரிசோதித்து பார்ப்பதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். இதன் மூலம் வீண் வதந்திகள் கிளம்புவது தவிர்க்கப்படும்.


Click it and Unblock the Notifications