Full Tank Petrol போட்டா வண்டி வெடிக்கும், தீபிடிக்கும்ன்னு சொல்றது எல்லாம் புரளிங்க! உண்மை இது தான்!
கோடைக் காலங்களில் வாகனங்களில் முழு டேங்க் பெட்ரோல்/ டீசல் போடலாமா? அப்படி நிரப்பினால் வாகனம் வெடிக்குமா? சமீபகாலமாகக் கிளம்பி வரும் புரளி குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
சமீப ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் கோடைக் காலம் வரும் போது ஒரு புரளி ஒன்று கிளம்பி வருகிறது. கோடைக் காலத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும். இதனால் வாகனங்களில் முழு டேங்க் பெட்ரோல் அடைக்க வேண்டாம். அதிக வெப்பம் காரணமாக பெட்ரோல் டேங்கிற்குள் காற்று இல்லாமல் வெப்பம் அதிகமாகி வெடித்துச் சிதற வாய்ப்பு இருக்கிறது எனப் புரளி கிளம்பி வருகிறது.

சில பெட்ரோல் பங்க்களிலேயே கூட இது குறித்து அறிவிப்புப் பலகைகள் விழிப்புணர்வு என்ற பெயரில் வைக்கப்பட்டிருக்கும். உண்மையில் இப்படி வெளியில் காலங்களில் டேங்க் முழுவதும் பெட்ரோலை/டீசலை நிரப்பினால் வாகனம் தீ பிடிக்க வாய்ப்பு இருக்கிறதா என்று தேடிப்பார்த்தோம். இதற்கான அறிவியல் ஆதாரங்கள் அல்லது ஏதாவது சம்பவங்கள் நடந்துள்ளதா எனத் தேடிப் பார்த்தோம்.
இந்த விவகாரம் இப்பொழுது இல்லை 5 ஆண்டுகளுக்கு முன்பே 2018லேயே கோடைக் காலத்தில் பெரும் புரளியாக இருந்துள்ளது. இதற்கு இந்தியன் ஆயில் நிறுவனமே நேரடியாக விளக்கமும் அளித்துள்ளது. அவர்கள் அளித்த விளக்கத்தின் படி இந்தியாவில் தயாரிக்கப்படும் வாகனங்கள் எல்லாம் தன் முழு கொள்ளளவு பெட்ரோல் இருக்கும் போதும் பாதுகாப்பாக இருக்கும்படி தான் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

பெட்ரோல் முழு டேங்க் இருக்கும் காரணத்தால் மட்டுமே வெப்பம் அதிகமாகி பெட்ரோல்/டீசல் டேங்க் வெடிக்க வாய்ப்புகள் இல்லை. கோடைக் காலமாக இருந்தாலும் சரி, குளிர் காலமாக இருந்தாலும் சரி பெட்ரோல்/டீசல் நேரடியாக தீயுடன் தொடர்பிற்கு வந்தால் மட்டுமே தீ பிடிக்க வாய்ப்புள்ளது.வெப்பம் காரணமாக தீ பிடிக்க வாய்ப்பில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
என்னதான் விளக்கமளித்தாலும் ஒவ்வொரு ஆண்டும் இவ்வாறான புரளிகள் கிளம்பிக்கொண்டே தான் இருக்கிறது. பலர் இதை நம்பி பெட்ரோல் பங்க்களில் முழு டேங்க் பெட்ரோல்/டீசல் போடுவதைத் தவிர்த்து வருகின்றனர். குறிப்பாகக் கோடைக் காலங்களில் தான் வெப்பம் அதிகமாக இருக்கும் காலம் என்பதைப் பயன்படுத்தி இவ்வாறான புரளிகள் அதிகம் கிளம்பி வருகிறது.

இதை நம்பி நீங்கள் ஏமாற வேண்டாம். நீங்கள் உங்கள் வாகனத்திற்கு முழு டேங்க் பெட்ரோல் போட விரும்பினால் தாராளமாகப் போடலாம். இதற்கு எந்த வித பயமும் தேவையில்லை. யாராவது வாகனம் வெடித்துவிடும் எனச் சொன்னால் நம்ப வேண்டாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒவ்வொரு ஆண்டும் கோடைக் காலத்தில் இப்படியான புரளிகள் அதிகம் கிளம்பி வருகிறது. இதற்குப் பின்னணியில் யார் இருக்கிறார்கள். இந்த புரளியால் யார் லாபமடைவார்கள் என எந்த கணக்கும் தெரியவில்லை. இது வெறும் வெப்பம் மீது மக்களுக்கு இருக்கும் பயத்தைப் பயன்படுத்திக் கிளம்பி வரும் புரளிகள் தான். இப்படியான புரளிகள் வரும் போது மக்கள் கவனமாக இதைக் கையாள வேண்டும். இதைப் பரப்ப முயற்சி செய்யக் கூடாது. முக்கியமான பெட்ரோல் பங்க் உரிமையாளர்களே இந்த புரளி பரவ உதவி செய்யக் கூடாது.


Click it and Unblock the Notifications









