இவங்க யாருன்னு பார்க்க தான் இந்தியாவே காத்து கிடந்துச்சு! பிரதமர் மோடியே நேர்ல அறிமுகப்படுத்தி வச்சிட்டாரு!
இஸ்ரோவின் அடுத்த மிகப்பெரிய திட்டமான ககன்யான் திட்டத்திற்காக நான்கு விண்வெளி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தற்போது பிரதமர் மோடி அந்த நான்கு விண்வெளி வீரர்களையும் பொது வெளியில் அறிமுகப்படுத்தியுள்ளார். இவர்கள்தான் இந்தியாவில் இருந்து முதல் முதலாக விண்வெளிக்கு செல்லப் போகும் வீரர்களாக இருக்கப் போகிறார்கள். இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
நிலவில் இந்தியா தரை இறங்குவது என்பது மிகப்பெரிய சாதனையாக நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 2023-ம் ஆண்டு சந்திரயான் 3 விண்கலம் மூலம் இந்தியா அதை சாத்தியமாக்கியது. நிலவின் தென் துருவ பகுதியில் பத்திரமாக சந்திரயான் 3 விண்கலம் தரையிறங்கி வெற்றிகரமாக ஆய்வுகளை எல்லாம் செய்து முடித்தது. இந்நிலையில் இந்தியாவின் அடுத்த மிகப் பெரிய கனவு திட்டமாக ககன்யான் திட்டம் தான் இருக்கிறது.

ககன்யான் திட்டத்தின் படி பூமியிலிருந்து சுமார் 400 கிலோ மீட்டர் உயரத்திற்கு விண்வெளி வீரர்கள் அழைத்து செல்லப்பட்டு அவர்கள் மூன்று நாட்கள் தங்கு வைக்கப்பட்டு அங்கு ஆய்வுகளை மேற்கொண்டு மீண்டும் அவர்களை பத்திரமாக பூமிக்கு கொண்டு வருவது தான் இந்த திட்டமாக இருக்கிறது. இதன்படி இந்தியா முதன்முதலாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப தயாராகி வருகிறது. இந்த திட்டத்திற்கான ஏற்பாடுகள் எல்லாம் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ககன்யான் திட்டத்திற்கான முதற்கட்ட சோதனை என்பது நடைபெற்றது. அதன்படி இந்த சோதனையின் போது ககன்யான் திட்டம் ஏவுதலில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அவர்கள் பத்திரமாக மீண்டும் பூமிக்கு திரும்புவார்களா என சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்த நிலையை தற்போது இரண்டாம் கட்ட சோதனைக்காக இஸ்ரோ தயாராகி வருகிறது.

இதற்கிடையில் இந்த ககன்யான் திட்டத்திற்காக பூமியிலிருந்து விண்வெளிக்கு செல்லும் மனிதர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இந்தியாவிலுள்ள பல்வேறு பிரிவுகளில் இருந்து ஆட்களை தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பணி நடந்தது. இப்படியாக பயிற்சி பெற்றவர்களை சோதனை செய்து அதில் தகுதியான நபர்களை தேர்வு செய்வதற்கான பணிகள் எல்லாம் நடந்து முடிந்து தற்போது நான்கு வீரர்கள் இறுதிக்கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தில் வைத்து இந்த நான்கு நபர்களையும் வெளியுலகிற்கு பிரதமர் மோடி அறிமுகப்படுத்தி வைத்தால். அதன் படி குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன், குரூப் கேப்டன் அங்கித் பிரதாப், விங் கமெண்டர் சுபான்ஷூ சுக்லா ஆகியோர் இந்த விண்வெளி பயணத்திற்காக விண்வெளி வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த திட்டத்தின் படி மூன்று விண்வெளி வீரர்கள் மூன்று நாட்கள் விண்வெளியில் ஆய்வு செய்ய உள்ளனர். தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள நான்கு பேரில் இருந்து 3பேர் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளனர். இதில் யார் யாரெல்லாம் விண்வெளிக்கு அனுப்பப்படுவார்கள் என்ற தகவல் பின்னர் தெரிவிக்கப்படும். மூன்று பேர் தான் தேவை என்ற நிலையில் நான்காவது ஒரு நபர் கூடுதலாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த விண்வெளி வீரர்களை அறிமுகப்படுத்தி வைத்த பிரதமர் மோடி கூறும் போது: " தற்போது இந்திய நாட்டிற்கு ககன்யான் திட்டத்திற்கு பயணம் செய்யும் நான்கு பயணிகள் குறித்த தகவல்கள் எல்லாம் தெரியவந்துள்ளது. இவர்கள் நான்கு பேரும் வெறும் 4 மனிதர்கள் இல்லை. இவர்கள் 140 கோடி இந்தியர்களின் கனவுகளை சுமந்து விண்வெளிக்கு பயணிக்ககூடிய வீரர்கள் 40 ஆண்டு கனவு என்பது நமக்கு தற்போது நினைவாக போகிறது.
40 ஆண்டுகளுக்கு முன்னர் நாம் சோவியத் யூனியன் ராக்கெட்டில் இந்தியர் ஒருவரை அனுப்பி வைத்தோம். ஆனால் இப்பொழுது நாம் சொந்தமாக ராக்கெட்டை செய்து அதில் முற்றிலும் இந்தியாவே இந்திய வீரர்களை விண்வெளிக்கு அனுப்புகிறது. இது நமக்கு ஒரு பெருமையான தருணம்" என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் விண்வெளி வீரர்கள் குறித்த அறிவிப்பு பலரை ஆச்சரியப்படுத்தியும் பலரை எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாகவும் அமைந்திருந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் அடுத்த மிகப்பெரிய கனவு திட்டமாக இந்த ககன்யான் திட்டம் தான் இருக்கிறது. இந்த ககன்யான் திட்டத்தின்படி விண்வெளி வீரர்கள் பத்திரமாக விண்வெளிக்கு சென்று விட்டு மீண்டும் பூமிக்கு திரும்பி விட்டால் அடுத்து மிகப்பெரிய திட்டங்களான நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் இந்தியா களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








