கடத்தப்பட்ட லாரி ஒரு சில மணி நேரத்தில் மீட்பு! உள்ளே இருந்த பல கோடி ரூபாய் மேட்டர் என்னனு தெரியுமா?
துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட கண்டெய்னர் லாரியை, ஒரு சில மணி நேரங்களில் மீட்டு, காவல் துறையினர் அதிரடி காட்டியுள்ளனர்.

தேசிய நெடுஞ்சாலைகளின் வழியாக செல்லும் வாகன ஓட்டிகளிடம் கொள்ளையர்கள் கைவரிசை காட்டி வருவதாக நீண்ட காலமாக புகார்கள் உள்ளன. குறிப்பாக போக்குவரத்து அதிகம் இல்லாத பகுதிகளில் செல்லும் வாகனங்களை மடக்கி கொள்ளையர்கள் கைவரிசை காட்டுகின்றனர். இதற்காக பல்வேறு தந்திரங்களையும் அவர்கள் கையாள்கின்றனர்.

உதாரணத்திற்கு உதவி கேட்பது போல் நடித்து கார்களை நிறுத்துகின்றனர். உதவி செய்வதற்காக காரின் ஓட்டுனர் கீழே இறங்கினால், அவரிடம் இருந்து பணம், பொருட்களை கொள்ளையடிப்பதுடன், காரின் பாகங்களையும் கொள்ளையர்கள் திருடி செல்கின்றனர். கடந்த காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் பலமுறை அரங்கேறியுள்ளன.

கார் ஓட்டுனர்களை போன்றே லாரி ஓட்டுனர்களும், கொள்ளையர்களால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். லாரிகளில் கண்டெய்னர் மூலமாக மிகவும் விலை உயர்ந்த பொருட்கள், ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது. அதனை குறி வைத்து, லாரியுடன் கண்டெய்னரை திருடி செல்லும் சம்பவங்கள் அவ்வப்போது தொடர்ச்சியாக நடந்து வருகின்றன.

இந்த வகையில் ஹரியானா மாநிலத்தில் தற்போது அரங்கேறியுள்ள ஒரு சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலத்தில் உள்ள நுஹ் மாவட்டத்தில், ஒரு கண்டெய்னர் லாரி, 5 மெர்சிடிஸ் பென்ஸ் கார்களுடன் சென்று கொண்டிருந்தது. மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் மதிப்பு மட்டும் 3.50 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.

சினிமா பாணியில் அந்த லாரியை வழிமறித்த மர்ம கும்பல், ஓட்டுனரை மிரட்டி லாரியை கடத்தி சென்றது. ஆனால் சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே, கொள்ளையடிக்கப்பட்ட கார்களுடன் லாரியை மீட்டு, ஹரியானா காவல் துறையினர் அதிரடி காட்டியுள்ளனர். அத்துடன் இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் ஒருவரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கடந்த ஞாயிற்று கிழமை (அக்டோபர் 4) இரவு இந்த சம்பவம் அரங்கேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தன்று ஒரு கும்பல், துப்பாக்கி முனையில் லாரி ஓட்டுனரை இடைமறித்தது. அதன்பின் ஓட்டுரை கயிற்றால் கட்டி போட்டு விட்டு, லாரியுடன் அந்த கும்பல் தப்பி சென்றது. இந்த சம்பவத்தை ஒரு சிலர் பார்த்ததாக கூறப்படுகிறது.

எனவே அவர்கள் உடனடியாக காவல் துறையினரை எச்சரிக்கை செய்தனர். இதன் பேரில் மெர்சிடிஸ் பென்ஸ் கார்களுடன் லாரியை மீட்பதற்காக உடனடியாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக காவல் துறையினர் அதிரடி ரெய்டுகளை நடத்தியதுடன், வாகன தணிக்கையையும் தீவிரப்படுத்தினர்.

இந்த முயற்சிகளின் பலனாக ஒரு எரிபொருள் நிலையத்திற்கு அருகே, ரஸாக் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். இவர் நுஹ் மாவட்டத்தில் இருக்கும் நய் என்னும் நகரை சேர்ந்தவர். லாரியை கடத்திய புகாரில், காவல் துறையினர் அவரை கைது செய்துள்ளனர். அத்துடன் மெர்சிடிஸ் பென்ஸ் கார்களுடன் லாரியையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், ''இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களை கைது செய்வதற்காக, பிடிபட்டுள்ள ரஸாக்கிடம் தற்போது தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது'' என்றனர். லாரி ஓட்டுனர்கள் மத்தியில் இந்த சம்பவம் தற்போது அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

விலை உயர்ந்த பொருட்களுடன் தொலை தூர பயணங்களை மேற்கொள்ளும் வாகன ஓட்டிகள், குறிப்பாக லாரி ஓட்டுனர்கள், மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை இந்த சம்பவம் தற்போது உணர்த்தியுள்ளது. லாரி, கார் போன்ற வாகனங்களில், டிராக்கிங் டிவைஸ்களை பொருத்தி கொள்வது சிறந்தது.

ஒரு வேளை வாகனம் கொள்ளையடிக்கப்பட்டால், அதன் இருப்பிடத்தை எளிதாக கண்டறிவதற்கு, டிராக்கிங் டிவைஸ்கள் உதவி செய்யும். இவ்வாறான டிராக்கிங் டிவைஸ்கள், சந்தையில் மிகவும் குறைவான விலையில் எளிதாக கிடைக்கின்றன என்பதால், வாகன உரிமையாளர்கள் அவற்றை பொருத்துவது குறித்து பரிசீலிக்கலாம்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








