யாருய்யா நீங்க... ரயில் இன்ஜினை சாக்கு மூட்டையில் திருடிய கும்பல்... பீகாரில் நடந்த விசித்திர சம்பவம்!
பீகார் மாநிலத்தில் முழு ரயில் இன்ஜினையே சாக்குப் பையில் போட்டு ஒரு கும்பல் திருடிய சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. இவர் ரயில் பாலம், ரயில் இன்ஜின் ஆகியவற்றையும் திருடி விற்பனை செய்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது குறித்த விரிவான செய்தியை இங்கே காணலாம்.
பீகார் மாநிலத்தில் அடிக்கடி நூதனமான திருட்டுகள் நடப்பது வழக்கம். இப்படியாகக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அங்கு ஒரு கும்பல் பட்ட பகலில் ஒரு ரயில்வே பாலத்தையே ஜேசிபி உள்ளிட்ட வாகனங்களைக் கொண்டு வந்து திருடிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கடந்த வாரமும் இதுபோன்ற ஒரு நூதனமான சம்பவம் நடந்துள்ளது. அங்கு ரயில் இன்ஜின் ஒன்றையே ஒரு திருட்டு கும்பல் சாக்குப் பையில் அடைத்துத் திருடிச் சென்றுள்ளது.

அது எப்படி ரயில் இன்ஜினை சாக்குப் பைக்குள் அடைக்க முடியும் என நீங்கள் கேட்கலாம். அதாவது அவர்கள் ஒரு கும்பலாக வந்து ரயில் இன்ஜினை அக்குவேறு ஆணிவேராகக் கழற்றி அதன் உதிரிப் பாகங்களைச் சாக்குப் பையில் போட்டுத் திருடிச் சென்றுள்ளனர். ரயிலை ஓட்டிச்செல்ல வேண்டும் என்றால் கார், பஸ் போல சாலைகளில் எல்லாம் ஓட்டிச்செல்ல முடியாது ரயில் தண்டவாளத்தில் தான் கடத்தி செல்லமுடியும். ஆனால் தண்டவாளம் இருக்கும் பகுதி எல்லாம் ரயில்வே கட்டுப்பாட்டில் தான் இருக்கும்.
அதனால் தான் இந்த திருட்டு கும்பல் ரயிலை பார்ட் பார்ட்டாக கழட்டித் திருடியுள்ளனர். இதுமட்டுமல்ல இதே கும்பல் இந்த ரயில் இன்ஜினை திருடிய இடத்திற்கு அருகே ஒரு ரயில் பாலம் உள்ளது. அதில் உள்ள சில ஆங்கிள் மற்றும் முக்கியமான உதிரிப் பாகங்களையும் திருடியுள்ளனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் இந்த திருட்டு கும்பலைச் சேர்ந்த 3 பேரைக் கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் திருடிய ரயில் இன்ஜின் பாகங்களைச் சாக்கு மூட்டையில் கட்டி ஒரு குடோனில் வைத்திருப்பதாக அறிந்தனர். அதன் அடிப்படையில் அங்கு சென்று சோதனை செய்த அங்கிருந்த 13 சாக்குகளில் காணாமல் போன ரயில் இன்ஜினின் உதிரிப் பாகங்கள் இருந்தது தெரியவந்தது. பின்னர் அவர்கள் 3 பேரையும் கைது செய்து இந்த திருட்டில் ஈடுபட்ட மற்றவர்களையும்,இதற்கு மூளையாகச் செயல்பட்டவர்களையும் யார் எனக் கண்டுபிடிக்க போலீசார் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்.
இந்த செய்தியின் மூலம் நாம் அறிந்து கொள்ள வேண்டியது என்னதான் தொழினுட்ப வசதிகள் எல்லாம் வந்தாலும் வாகன திருட்டு என்பது தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. பெரிய ரயில் இன்ஜினிற்கே இந்த கதி என்றால் நீங்கள் கார் வைத்திருந்தால் அது திருடு போகாமல் இருக்கும் என்பதற்கு என்ன கேரண்டி இருக்கிறது. அதனால் நீங்கள் உங்கள் காரை பத்திரமாகப் பாதுகாத்துக்கொள்ளவேண்டியது அவசியம், அதற்காக தொழிற்நுட்பங்களை நம்ப வேண்டாம் எனச் சொல்லவில்லை. அஜாக்கிரதையாக இருக்காதீர்கள் என்றே சொல்கிறோம்.
உங்கள் கார் திருடு போகாமல் இருக்க வேண்டும் என்றால் நீங்கள் இரவு நேரங்களில் காரை சாலையோரங்களில் நிறுத்தாமல் உங்களுக்கான தனிப்பட்ட இடம் அல்லது பார்க்கிங் பகுதியில் நிறுத்தினால் கார் திருடு போக வாய்ப்பு குறைவு, அதே போல காரை நிறுத்திச் செல்லும் போது அனைத்து ஜன்னல்களும் அடைக்கப்பட்டுள்ளதா? காரின் கதவுகள் எல்லாம் லாக் ஆகிவிட்டதா? குறிப்பாக பானட் அல்லது பூட் பகுதியில் உள்ள கதவுகள் லாக் ஆகியுள்ளதா என்பதை செக் செய்த பின்பே செல்லுங்கள்.
கார் திருட்டைத் தடுக்க அலாரம் ஃபிட் செய்து வைத்திருப்பது மேலும் சிறப்பு, ஒரு வேளை உங்கள் கார் திருட்டிற்குள்ளானாலும் அலாரம் மூலம் எச்சரிக்கும். இதனால் திருட்டைத் தடுக்க முடியும். இது போக காரில் ஜிபிஎஸ் கருவியைப் பொருத்துவது கார் திருடப்பட்டாலும் அதை மீட்க உதவும். இப்படியாக நீங்கள் உங்கள் கார்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள். கார் திருடப்பட்டு அதன் உதிரிபாகங்கள் கழட்டி விற்பனை செய்யும் சம்பவங்கள் அதிகமாக நடந்து வருகிறது.


Click it and Unblock the Notifications








