இந்தியாவின் அதிவேக ரயில் கட்டிமான் எக்ஸ்பிரஸ் பற்றிய சிறப்புத் தகவல்கள்!
மணிக்கு 160 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய நாட்டின் அதிவேக ரயில் சேவையை பிரதமர் மோடி வரும் 9ந் தேதி தொடங்கி வைக்கிறார்.
டெல்லி- ஆக்ரா இடையில் அமைக்கப்பட்டிருக்கும் விசேஷ தண்டவாளம் மற்றும் சிறப்பு பாதுகாப்பு கட்டமைப்பு கொண்ட வழித்தடத்தில் இந்த அதிவேக ரயில் இயக்கப்பட உள்ளது. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

சோதனை ஓட்டம்
கட்டிமான் எக்ஸ்பிரஸ் என்று இந்த ரயிலுக்கு பெயரிடப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு முதல் இந்த வழித்தடத்தில் அதிவேக ரயிலை இயக்கி சோதனைகள் செய்யப்பட்டு வந்தன. ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தெரிவித்திருந்த சில குறைகளும் இப்போது நிவர்த்தி செய்யப்பட்டுவிட்டதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்த வாரம் இந்த வழித்தடத்தில் முறைப்படி அதிவேக ரயில் இயக்கப்பட உள்ளது.

விசேஷ ரயில்பெட்டிகள்
கபூர்தலாவிலுள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில், இந்தியாவின் அதிவேக ரயிலுக்கான பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஒரு ரயில் பெட்டி ரூ.2 கோடி முதல் ரூ.2.5 கோடி மதிப்பில் தயாரிக்கப்பட்டுள்ளது. இவை அதிவேகத்தில் செல்வதற்கான விசேஷ பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

பயண நேரம் குறையும்
இறுதிகட்ட சோதனையின்போது டெல்லி- ஆக்ரா இடையிலான 200 கிமீ தூரத்தை இந்த ரயில் 115 நிமிடங்களில் கடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், டெல்லி- ஆக்ரா இடையிலான பயண நேரம் 30 நிமிடங்கள் வரை குறையும். பாதுகாப்பை உறுதி செய்யும் விதத்தில், வளைவுகளில் தண்டவாளங்களின் வலு கூட்டப்பட்டிருக்கிறது. அத்துடன், தண்டவாளத்தின் பக்கவாட்டில் வேலிகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன.

சக்திவாய்ந்த எஞ்சின்
இந்த ரயிலில் 5400 குதிரைசக்தி திறன் கொண்ட மின்சார எஞ்சின் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த எஞ்சின் மூலமாக அதிகபட்சம் 160 கிமீ வேகம் வரை அந்த ரயில் இயக்கப்படும்.

சிறப்பு வசதிகள்
தீப்பிடிப்பதை தானாக எச்சரிக்கும் கருவி, அவசர கால பிரேக் சிஸ்டம் மற்றும் பயணிகளுக்கு தகவல் தெரிவிப்பதற்கான சிறப்பு வசதிகளை இந்த ரயில் கொண்டிருக்கும்.

கட்டணம் அதிகம்
சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களை விட இந்த ரயிலுக்கான பயணக் கட்டணம் 25 சதவீதம் வரை கூடுதலாக இருக்கும்.


Click it and Unblock the Notifications