ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் அறிவித்த சூப்பர் அறிவிப்பு!! இலவசமாக பயணக்கலாமாம்
நடந்து முடிந்துள்ள ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர்களை கௌரவப்படுத்தும் விதமாக சூப்பர் சலுகை ஒன்றினை அவர்களுக்கு 2 ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அவற்றை பற்றிய கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக கிட்டத்தட்ட 1 வருடம் தாமதமாக, கடந்த ஜூலை 23ஆம் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் துவங்கப்பட்ட 2020 ஒலிம்பிக் போட்டி கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி உடன் நிறைவு பெற்றது.

கொரோனா பரவலின் காரணமாக வெற்றிக்கரமாக நடத்தி முடிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்புடன் நடத்தப்பட்ட இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கான போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி, சனிக்கிழமையுடன் முடிவடைந்தன. இந்தியா சார்பில் இந்த ஒலிம்பிக்கில் 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்கள் பெறப்பட்டுள்ளன.

மொத்தம் 7 பதக்கங்கள் பெற்ற இந்தியா பதக்கப் பட்டியலில் 48வது இடத்துடன் நிறைவு செய்துள்ளது. ஈட்டி எறிதலில் 23 வயதான இளம் வீரர் நீரஜ் சோப்ரா தங்க பதக்கம் வென்றுள்ளார். இதன்மூலம் கிட்டத்தட்ட சுமார் 120 வருடங்களுக்கு பிறகு தடகளத்தில் தங்க பதக்கம் வென்று இந்தியா வரலாறு படைத்தது.

ஆண்கள் மல்யுத்த போட்டியில் (57 கிலோ எடை பிரிவு) ரவிக்குமார் தாஹியாவும், மகளிர் பளு தூக்குதலில் (49 கிலோ எடை பிரிவு) மீராபாய் சானுவும் வெள்ளிப்பதக்கம் வென்றனர். இந்தியாவிற்கு வெண்கல பதக்கங்கள் பேட்மிண்டனில் பிவி.சிந்து, குத்துச்சண்டையில் லவ்லினா பர்கொஹெயின், மல்யுத்தத்தில் பஜ்ரங் புனியா மற்றும் ஆண்கள் ஹாக்கி அணியினர் மூலம் கிடைத்துள்ளன.

2020 ஒலிம்பிக்கில் இந்தியா பெற்றுள்ள இந்த பதக்கங்கள் தான் தற்சமயம் நாடு முழுவதும் ஹாட் டாபிக்காக பேசப்பட்டு வருகிறது. நெட்டிசன்கள் இணையத்தில் பதக்கம் வென்றவர்களுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டிருக்க, வசதி படைத்த பணக்காரர்கள் அவர்களுக்கு சில பரிசு பொருட்களை அறிவித்து வருகின்றனர்.

இந்த வகையில் ஒலிம்பிக்கில் இந்தியாவிற்காக பதக்கம் வென்ற வீரர்களுக்கு இலவச விமான சேவை அளிப்பதாக கோ ஃபர்ஸ்ட் (Go first) மற்றும் ஸ்டார் ஏர் (Star Air) என்ற ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.

இதில் கோ ஏர் என முன்பு அறியப்பட்டுவந்த கோ ஃபர்ஸ்ட் விமான சேவை நிறுவனம் 2020 ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு இலவச டிக்கெட்களை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

அதேநேரம் மற்றொரு விமான சேவை நிறுவனமான ஸ்டார் ஏர் நடைபெற்று முடிந்த ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்கள் வாழ்நாள் முழுவதும் தங்களது விமானங்களில் இலவசமாக பயணிக்கலாம் என அறிவித்துள்ளது. ஸ்டார் ஏர், உள்நாட்டு விமான சேவை நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்கள் இந்திய ஹாக்கி அணிக்காக விளையாடிய அனைவருக்கும் இலவசமாக சேவையினை வழங்கவுள்ளதாகவும் ஸ்டார் ஏர் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மேலும் இந்த உள்ளூர் விமான சேவை நிறுவனம் கூறுகையில், டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு இலவச பயண சேவை வழங்குவது தங்களுக்கு கௌரவமாக உள்ளது என்றது.

இந்த இரு நிறுவனங்கள் மட்டுமின்றி இண்டிகோ விமான சேவை நிறுவனமும் இந்தியாவின் தங்கமகன் நீரஜ் சோப்ரா, அடுத்த ஆண்டு வரையில் தங்களது விமானங்களில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவித்துள்ளது. இவ்வாறு ஒவ்வொரு துறையை சேர்ந்த நிறுவனங்களும் தங்களால் இயன்ற பரிசுகளை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு வழங்கி வருகின்றன.

அதேநேரம் ஒரு சில பரிசுகள் கிடைக்காமலும் போகியுள்ளன. குறிப்பாக, 2020 ஒலிக்பிக் போட்டியில் பதக்கம் வென்றால் இந்திய மகளிர் ஹாக்கி அணியினர் ஒவ்வொருவருக்கும் அவர்கள் கனவு வீட்டை கட்டிக்கொள்ளும் அளவிற்கு பணம் வழங்கப்படும் என சூரத்தை சேர்ந்த வைர வியாபாரி ஒருவர் தெரிவித்து இருந்தார்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த ஒலிம்பிக்கில் மகளிர் ஹாக்கி அணியினர் எந்த பதக்கத்தையும் பெறவில்லை. கால் இறுதியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை தோற்றகடித்த இந்திய மகளிர் அணி அரையிறுதியில் அர்ஜெண்டினாவிடம் தோல்வியை தழுவியது.

இருப்பினும் வெண்கல பதக்கத்திற்கான போட்டி இருப்பதால் இந்திய ரசிகர்கள் நம்பிக்கையாக காத்திருந்தனர். கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெற்ற இந்த போட்டியில் பிரிட்டன் மகளிர் ஹாக்கி அணி நமது இந்திய அணியை தோற்கடித்து வெண்கல பதக்கத்தை தட்டி சென்றது. அதுமட்டுமல்லாமல் சூரத் வைர வியாபாரி சாவ்ஜி தொலகியா அறிவித்த பரிசும் கிடைக்காமல் போனது.


Click it and Unblock the Notifications