கம்மியான ரேட்டுக்கு பெட்ரோல் வேணும்னா இதை பண்ணுங்க... பாஜக தலைவரின் ஐடியாவை கேட்டு கடுப்பான மக்கள்!
பெட்ரோல் விலை உயர்வு பிரச்னை தொடர்பான கேள்விக்கு பாஜக தலைவர் ஒருவர் அளித்துள்ள பதில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்னை வாகன ஓட்டிகளை வாட்டி வதைத்து கொண்டுள்ளது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாய்க்கும் மேலான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப முடியாமல், வாகன ஓட்டிகள் விழி பிதுங்கி போய் உள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்கு ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படுவதற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை. எனவே இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்காததால் ஒன்றிய அரசு மீது மக்கள் அதிருப்தியில் இருந்து வரும் நிலையில், பாஜகவை சேர்ந்த ஒரு சிலரின் பேச்சுக்கள் எரிகின்ற தீயில் எண்ணெய்யை ஊற்றுவது போல் அமைந்து விடுகிறது. ஆம், சில சமயங்களில் பாஜக தலைவர் பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்னை குறித்த கேள்விக்கு சர்ச்சையான முறையில் பதில் அளிக்கின்றனர்.

இந்த வரிசையில் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த பாஜக பிரமுகர் ஒருவர் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் காட்னி மாவட்ட பாஜக தலைவராக இருப்பவர் ராம்ரத்தன் பாயல். சமீபத்தில் நடைபெற்ற மரக்கன்று நடும் நிகழ்ச்சியில், ராம்ரத்தன் பாயல் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் எரிபொருள் விலை உயர்வு பிரச்னை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு ராம்ரத்தன் பாயல், ''குறைவான விலையில் பெட்ரோல் வேண்டும் என ஆசைப்பட்டால், ஆப்கானிஸ்தானுக்கு சென்று விடுங்கள். அங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் 50 ரூபாய்க்கு கிடைக்கும்'' என சர்ச்சைக்குரிய முறையில் பதில் அளித்தார். இந்த பதில் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ராம்ரத்தன் பாயல் மேலும் கூறுகையில், ''தலிபான்கள் ஆளும் ஆப்கானிஸ்தானுக்கு சென்று விடுங்கள். அங்கு ஒரு லிட்டர் பெட்ரோலை வெறும் 50 ரூபாய்க்கே வாங்கி கொள்ளலாம். ஆனால் அதனால் ஒரு பயனும் ஏற்பட போவதில்லை. இந்தியாவில் அனைவரும் பாதுகாப்பாக உள்ளீர்கள். இந்தியாவில் கொரோனா வைரஸ் மூன்றாவது அலை பிரச்னை ஏற்பட போகிறது.

மீண்டும் ஒரு முறை இக்கட்டான காலகட்டத்தை எதிர்கொண்டாக வேண்டிய சூழ்நிலையில் இந்தியா உள்ளது. ஆனால் நீங்களோ பெட்ரோல் விலையை பற்றி பேசி கொண்டுள்ளீர்கள்'' என பதில் அளித்துள்ளார். ஆனால் ராம்ரத்தன் பாயலின், ''ஆப்கானிஸ்தானுக்கு செல்லுங்கள்'' என்ற பேச்சு பொறுப்பற்ற முறையில் இருப்பதாக பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் பாஜகவை சேர்ந்தவர்கள் இதுபோல் சர்ச்சையான முறையில் பேசுவது இது முதல் முறையல்ல. கடந்த காலங்களிலும் பலர் இப்படி பொறுப்பற்ற பதில்களை அளித்துள்ளனர். இதுபோன்ற பேச்சுக்களை தவிர்த்து விட்டு, பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்கு தேவையான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதுதான் வாகன ஓட்டிகளின் கோரிக்கை.

தமிழ்நாட்டை பொறுத்தவரை மாநில அரசு சமீபத்தில் பெட்ரோலின் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்தது. இதனால் தமிழ்நாட்டை சேர்ந்த வாகன ஓட்டிகள் சற்றே நிம்மியடைந்துள்ளனர். குறிப்பாக இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தும் பலர் இந்த விலை குறைப்பால் பலன் அடைந்துள்ளனர். இதேபோல் ஒன்றிய அரசும் விலையை குறைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

ஆனால் அது நடக்குமா? என்பது மிகப்பெரிய சந்தேகம்தான். பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள்ளாவது கொண்டு வர வேண்டும் என வாகன ஓட்டிகள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இந்த கோரிக்கையும் தற்போது வரை நிறைவேறவில்லை. பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வந்தால், விலை வெகுவாக குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ஆனால் வருவாய் இழப்பை சந்திக்க நேரிடும் என்பதால், பல்வேறு மாநில அரசுகளுக்கு இதில் பெரிய அளவில் ஆர்வம் இல்லை. எனவே பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டி வரம்பிற்குள் வருவதும் சந்தேகம்தான். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் பலர் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி கொண்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications








