விபத்தில் காயமடைந்த பெண்ணுக்கு ஓடி வந்து உதவிய முதல்வர்... காரை கொடுத்து மருத்துவமனைக்கு அனுப்பினார்
விபத்தில் காயமடைந்த பெண்ணுக்கு உதவிய முதல்வருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சாலை விபத்துக்கள் எப்போது நடக்கும்? என்று கணிக்கவே முடியாது. யார் வேண்டுமானாலும் சாலை விபத்துக்களில் சிக்கலாம். இது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். சாலை விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு உடனடியாக தேவைப்படுவது நமது உதவிதான். ஆனால் இந்தியாவில் பெரும்பாலானோருக்கு அந்த உதவி உடனடியாக கிடைப்பதில்லை.

சாலை விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு உதவி செய்ய பெரும்பாலானோர் தயக்கம் காட்டி வருகின்றனர். போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் என வீணாக அலைய வேண்டியது வருமே என்ற பயம்தான் இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. ஆனால் சாலை விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு உதவி செய்யும் நபர்களை எவ்விதத்திலும் துன்புறுத்த கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

இருந்தபோதும் கூட இந்த விஷயத்தில் பலருக்கு இன்னமும் தயக்கம் இருக்கவே செய்கிறது. ஆனால் சினிமா நடிகர்கள், அரசியல்வாதிகள் போன்ற பிரபல மனிதர்கள், சாலை விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு தாமாக முன் வந்து உதவி செய்து மற்றவர்களுக்கு முன் உதாரணமாக மாறி வருகின்றனர். இந்த வரிசையில் சமீபத்தில் இணைந்துள்ளார் கோவா முதல்வர் பிரமோத் சவந்த்.

டெல்லியில் நடைபெற்ற அரசியல் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட பின்பு முதல்வர் பிரமோத் சவந்த் கோவா திரும்பியிருந்தார். ஜுவாரி பாலத்தில் அவரது கான்வாய் வாகனங்கள் அணிவகுத்து சென்று கொண்டிருந்த நிலையில், அங்கு சாலை விபத்து ஒன்று நடைபெற்றிருப்பதை பிரமோத் சவந்த் கண்டார். இது எந்நேரமும் பிஸியாகவே இருக்கும் பாலம் ஆகும்.

தெற்கு கோவா மற்றும் வட கோவாவை இணைக்கும் முக்கியமான பாலமாக இது திகழ்கிறது. ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை ஓட்டி வந்த பெண் ஒருவர் துரதிருஷ்டவசமாக நடைபெற்ற விபத்தில் சிக்கியிருந்தார். இதை பார்த்ததும் காரை நிறுத்தும்படி தனது டிரைவருக்கு பிரமோத் சவந்த் உத்தரவிட்டார். பின்னர் காரில் இருந்து இறங்கி சென்று, அந்த பெண்ணின் நிலையை பார்வையிட்டார்.

பின்னர் தனது கான்வாயில் இருந்து ஒரு காரை கொடுத்து அந்த பெண் மருத்துவமனைக்கு செல்லவும் கோவா முதல்வர் பிரமோத் சவந்த் உதவினார். சம்பவ இடத்தில் ஆம்புலன்ஸ் இல்லாத நேரத்தில் செய்த இந்த உதவிக்காக முதல்வர் பிரமோத் சவந்த்திற்கு அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

சாலை விபத்துக்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய தயங்காமல் முன் வர வேண்டும் என்ற முன் உதாரணத்தை இதன் மூலமாக கோவா முதல்வர் பிரமோத் சவந்த் ஏற்படுத்தியுள்ளார். சாலை விபத்தில் சிக்கியவர்களை பார்த்தால், உடனடியாக வாகனத்தை நிறுத்தி விட்டு அவர்களுக்கு உதவி செய்ய அனைவரும் முன்வர வேண்டும்.

சாலை விபத்துக்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி அவர்களை தேற்றுவதுடன் உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்து அவர்கள் மருத்துவமனைக்கு செல்லவும் உதவி செய்ய வேண்டும். தக்க நேரத்தில் நீங்கள் செய்யும் இந்த சிறு உதவி அவர்களின் உயிரை காப்பாற்றுவதாக அமையும். உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காததன் காரணமாகவே ஏராளமான உயிரிழப்புகள் நிகழ்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








