சூரிய வெளிச்சத்திலேயே சார்ஜ் ஆகி விடும்... குறைந்த செலவில் சூப்பரான எலெக்ட்ரிக் சைக்கிளை உருவாக்கிய மாணவர்கள்!
சூரிய சக்தியில் இயங்கும் எலெக்ட்ரிக் சைக்கிளை மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் தற்போது பெட்ரோல், டீசல் விலை மிகவும் அதிகமாக உள்ளது. எனவே எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவதற்கு பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். எலெக்ட்ரிக் வாகனங்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாது என்பதால், அரசும் அவற்றின் பயன்பாட்டை ஊக்குவித்து வருகிறது.

இந்த சூழலில், கோவாவை சேர்ந்த பொறியியல் மாணவர்கள் 5 பேர் சூரிய சக்தியில் இயங்கும் எலெக்ட்ரிக் சைக்கிள் ஒன்றை தயாரித்துள்ளனர். Agnel Institute of Technology and Design கல்வி நிறுவனத்தை சேர்ந்த 5 மாணவர்கள்தான், சூரிய சக்தியில் இயங்க கூடிய இந்த எலெக்ட்ரிக் சைக்கிளை தற்போது உருவாக்கியுள்ளனர்.

இந்த எலெக்ட்ரிக் சைக்கிளை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், பனாஜியில் இருந்து வாஸ்கோடகாமாவிற்கு எளிமையாக சென்று விட முடியும். இந்த இரண்டு பகுதிகளுக்கு இடைப்பட்ட தொலைவு சுமார் 30 கிலோ மீட்டர்கள் ஆகும். இந்த எலெக்ட்ரிக் சைக்கிளில் லித்தியம் அயான் பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இதனை சைக்கிளிலேயே இருக்கும் 2 சோலார் பேனல்கள் மூலம் சார்ஜ் செய்து கொள்ளலாம். அல்லது வீட்டில் உள்ள வழக்கமான மின்சார சப்ளை மூலமாகவும் சார்ஜ் செய்யலாம். வாகனங்களால் ஏற்படும் கார்பன் உமிழ்வை குறைக்க வேண்டும் என்பது இந்த 5 மாணவர்களின் கனவாகும். அதற்கேற்ப அவர்கள் உருவாக்கியுள்ள இந்த எலெக்ட்ரிக் சைக்கிளை சுற்றுச்சூழலை எந்த வகையிலும் பாதிக்காது.

Veloy Fernandes, Beniston Ribeiro, Annal Prabhu Ajgaonkar, Hrishikesh Mandrekar, Rohan Naik ஆகிய 5 மாணவர்கள்தான் சூரிய சக்தியில் இயங்கும் இந்த எலெக்ட்ரிக் சைக்கிளை உருவாக்கியுள்ளனர். இவர்கள் கடந்த ஜூலை மாத தொடக்கத்தில், Stainless Steel மூலம் சைக்கிள் ஃப்ரேமை தயாரித்தனர்.

இதன்பின் லித்தியம் அயான் பேட்டரிகளை சார்ஜ் செய்வதற்காக, இரண்டு சோலார் பேனல்களையும் அவர்கள் சைக்கிளில் பொருத்தினர். இந்த திட்டத்தில் பணியாற்றிய 5 மாணவர்களில் ஒருவரான Beniston Ribeiro இதுகுறித்து கூறுகையில், ''தற்போதைய நிலையில் இந்த எலெக்ட்ரிக் சைக்கிளின் எடை 29 கிலோ ஆகும்.

சைக்கிளின் எடையை குறைப்பதற்கு அலுமினியம் ஃப்ரேம் அல்லது கார்பன் ஃபைபரை பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் அதற்கு அதிக செலவு ஆகும்'' என்றார். இந்த எலெக்ட்ரிக் சைக்கிள் குறித்து விளக்கம் அளிக்கையில் மாணவர்கள் கூறுகையில், ''சூரிய ஆற்றல் போன்றவற்றின் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்தால், உமிழ்வு இன்னும் குறையும்.

வழக்கமாக பயன்படுத்தும் எரிபொருள் (பெட்ரோல், டீசல்) உடன் ஒப்பிடுகையில், இந்த ஆற்றல்கள் சுற்றுச்சூழலுக்கு நட்பானவை. வழக்கமான எரிபொருளால் சுற்றுச்சூழலுக்கு மிக கடுமையான பிரச்னைகள் ஏற்படுகிறது'' என்றனர். அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் சைக்கிளின் எடையான 29 கிலோ என்பது அதிகம்தான் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

எலெக்ட்ரிக் சைக்கிளின் எடை இன்னும் குறையும் பட்சத்தில், பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் பயணம் செய்யும் தூரம் (ரேஞ்ச்) நன்றாக அதிகரிக்கும் எனவும் மாணவர்கள் கூறியுள்ளனர். எனினும் செலவை கணக்கில் கொண்டு, சற்று அதிக எடையுடன் மாணவர்கள் இந்த எலெக்ட்ரிக் சைக்கிளை உருவாக்கியுள்ளனர்.

இதற்காக அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. ஆனால் இந்திய மாணவ, மாணவிகள் இதுபோன்ற எலெக்ட்ரிக் சைக்கிள்களை உருவாக்குவது இது முதல் முறை கிடையாது. கடந்த காலங்களிலும் பலர் இதுபோன்ற எலெக்ட்ரிக் சைக்கிள்களை உருவாக்கி, பொதுமக்களின் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ளனர்.

நாங்கள் ஏற்கனவே கூறியபடி பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் காற்று மாசுபாடு உள்ளிட்ட காரணங்களால் எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவதற்கு இந்திய மக்கள் தற்போது அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே நிறைய முன்னணி நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை தொடர்ச்சியாக இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றன.


Click it and Unblock the Notifications








