ஓலா, உபேருக்கு ஆப்பு வைத்த முதல்வர்... ஓட்டுநர்களுக்கே மொத்த பணமும் கிடைக்க புதிய திட்டம் ரெடி...
கோவா மாநிலத்தில் ஓலா, உபேர் போல பிரத்தியேகமாக தனியாக ஆப் ஒன்றை உருவாக்கி வருகின்றனர். தனியார் நிறுவனங்களால் ஓட்டுநர்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் அரசே இப்படியான ஆப்பை உருவாக்கியுள்ளது.

இந்திய மக்கள் தற்போது கார்பரேட் கால் டாக்ஸிகளை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்த துறையில் ஓலா மற்றும் உபேர் ஆகிய நிறுவனங்கள் அதிகமான மக்களால் பயன்படுத்தப்படுகிறது. இப்படியாகத் தனியார் கார்பரேட் நிறுவனங்கள் கால்டாக்ஸிகளை நடத்தி வருவது பல பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகிறது. இதில் அதிகமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அந்த பகுதியில் உள்ள ஓட்டுநர்களின் வருமானத்தைப் பாதிக்கிறது, எனப் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.

இப்படியாக வாடகை வாகனங்கள் ஓட்டுபவர்களுக்கு மாநில அரசு கட்டணம் நிர்ணயம் என்ற ஒரு விஷயத்தை வைத்திருக்கிறது. ஆனால் இந்த கட்டண நிர்ணயத்தை இப்படியான ஆப்கள் மூலம் கால் டாக்ஸிகள் நடத்தும் நிறுவனங்கள் பின்பற்றுவது இல்லை. அதை விட அதிகமாகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் மக்களுக்கு இருக்கும் இடத்திலேயே பிக்கப் கிடைக்கிறது. பணம் செலுத்தும் முறையும் முழுவதுமாக டிஜிட்டலில் இருக்கிறது. உள்ளிட்ட பல வசதிகள் கிடைப்பதால் மக்கள் இதைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பல்வேறு மாநிலத்தில் உள்ள வாடகை வாகன ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் சங்கத்தினர் இது குறித்து மாநில அரசுகளிடம் தங்கள் புகார்களை அளித்து வருகின்றனர். இதே போலக் கோவா அரசிடமும் உள்ளூர் ஓட்டுநர்களுக்கான வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. மற்றும் வருமானம் குறைகிறது என்று வந்த புகாரை அடுத்து இது குறித்து பேச்சு வார்த்தை நடத்த அம்மாநில அரசு வாடகை ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தினருடன் ஒரு கூட்டம் ஒன்றை நடத்தினர்.

அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த், மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் ரோஹன் காவுன்டே,மற்றும் மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் மவ்வின் கோடின்ஹோ ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கோவா பகுதியில் டாக்ஸி தொழிலில் உளு்ள பலர் கலந்து கொண்டனர். அம்மாநிலத்தில் பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகள் மூலமே பிஸ்னஸ் நடப்பதால், வெளியூரிலிருந்து வருபவர்கள் ஆப் மூலம் இயங்கும் டாக்ஸியை விருப்புகின்றனர். இதனால் இவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது புகார்கள் எழுந்தது.

இதையடுத்து அந்த கூட்டத்தில் கோவா மாநில அரசு சார்பில் அம்மாநிலத்தில் இயங்கும் கால் டாக்ஸிகளுக்கு பிரத்தியேகமாக ஆப் ஒன்றை உருவாக்க முடிவு செய்துள்ளனர். இந்த ஆப்பை பயன்படுத்தி மக்களும் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்குக் காரை புக் செய்யலாம். இந்த செயல்பாட்டில் பெரும்பான்மையான பணம் வாகன உரிமையாளர்களுக்கே செல்லும், ஆப்பை நடத்துவதற்காகக் குறைந்த பட்ச கமிஷன் மட்டும் எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல கர்நாடக மாநிலத்திலும் நம்ம யாத்திரீ என்ற ஒரு ஆப்பை ஆட்டோ உரிமையாளர்களுக்காக அம்மாநில அரசு உருவாக்கியுள்ளது. இந்த ஆப்பை நந்தன் நீலகேனியின் தலைமையின் கீழ் நடத்தி வரும் பெக்கின் என்ற நிறுவனத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒருவர் வாடகை வாகனத்தை புக் செய்கிறார் என்றால் பிக்கப் பாயிண்டிற்கு அருகில் உள்ள ஓட்டுநருக்குத் தான் அந்த வேலை முதலில் அசைன் செய்யப்படும். அவர் நிராகரித்தால் அடுத்த அருகில் உள்ளவர் என்று செல்லும்.

மேலும் இதற்காக வசூலிக்கப்படும் பணமும் ஒளிவு மறைவின்றி அரசின் கட்டணங்கள் இவ்வளவு, தொழிற்நுட்ப பயன்பாட்டுக் கட்டணம் இவ்வளவு, வரிகள் இவ்வளவு என தனித்தனியாகப் பிரித்து வாடிக்கையாளர்களுக்கும், ஓட்டுநர்களுக்கும் வழங்கப்படும்.

இதனால் வாடகை வாகன உரிமையாளருக்கே பணப்பலன் சென்று சேரும் எனச் சொல்லப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை தற்போது கர்நாடக அரசுக்குப் பிறகு கோவா அரசும் செய்ய முன்வந்துள்ளது. விரைவில் மற்ற மாநில அரசுகளும் இதே போல ஒரு ஆப்பை உருவாக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








