இவர்களை காட்டி கொடுத்தால் பரிசு... போலீசாரின் அதிரடி அறிவிப்புக்கு காரணம் இதுதான்...
போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை காட்டி கொடுப்பவர்களுக்கு பரிசு வழங்கும் திட்டத்தை போலீசார் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் சாலை விபத்துக்களின் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழந்து வருவதாக, உலக சுகாதார நிறுவனம் (WHO-World Health Organization) சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது. இதுதவிர பல லட்சக்கணக்கான பேர் படுகாயம் அடைந்து வருகின்றனர்.

செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது, குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களை இயக்குவது என போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதே பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு மிக முக்கியமான காரணமாக உள்ளது.

எனவே சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பதற்காக, போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி, போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனால் போலீசார் ஆங்காங்கே வாகன தணிக்கை பணிகளை துரிதப்படுத்தியுள்ளனர். இதில், ஒரு சில போலீசார் வசூல் வேட்டையில் ஈடுபடுகின்றனர் என்பது தனிக்கதை. இருந்தாலும் போலீசார் இல்லாத இடங்களில் பெரும்பாலான வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பதே கிடையாது.

இதன் காரணமாகவும் சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. தற்போது இந்த பிரச்னைக்கு போலீசார் நூதன முறையில் முடிவு கட்டியுள்ளனர்.

அதாவது சாலையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளின் புகைப்படம், வீடியோ போன்றவற்றை யார் வேண்டுமானாலும் எடுத்து போலீசாருக்கு அனுப்பலாம். இத்தகைய புகைப்படம் மற்றும் வீடியோக்களை அனுப்பும் நபர்களுக்கு புள்ளிகள் கிடைக்கும்.

அதாவது இரு சக்கர வாகனங்களில் மூன்று பேர் பயணிப்பதை புகைப்படம் எடுத்து அனுப்பினால், 10 புள்ளிகள் கிடைக்கும். கார்களில் சீட் பெல்ட் அணியாமலும், இரு சக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமலும் பயணிப்பதை புகைப்படம் எடுத்து அனுப்பினால் தலா 7 புள்ளிகள் கிடைக்கும்.

இவ்வாறு 100 புள்ளிகள் சேர்க்கும் நபருக்கு ஆயிரம் ரூபாய் பரிசாக கிடைக்கும். ஆனால் ஒரு சில விதி மீறல்களுக்கு வீடியோ மட்டுமே ஆதாரமாக எடுத்து கொள்ளப்படும். அதாவது சிகப்பு விளக்கை மதிக்காமல் சிக்னலை யாரேனும் கடந்தால் அதனை வீடியோவாக மட்டுமே அனுப்ப இயலும்.

கோவா மாநில போலீசார்தான் இந்த அதிரடி திட்டத்தை அமலுக்கு கொண்டு வந்துள்ளனர். இதற்கென பிரத்யேகமாக வாட்ஸ் அப் எண் மற்றும் இ-மெயில் முகவரியை அம்மாநில போலீசார் வெளியிட்டுள்ளனர். புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இந்த முகவரிக்கு அனுப்பலாம்.

அல்லது கோவா போக்குவரத்து போலீசாரின் பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றலாம். கோவா மாநில போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு தற்போது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. முன்னதாக டெல்லி மாநில போலீசாரும் இதே போன்றதொரு திட்டத்தை செயல்படுத்தினர்.

அதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் மூலம் சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறையும் என போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications








