போக்குவரத்து விதிகளை மீறினால் இனி போலீசாரிடம் பணம் கொடுக்க தேவையில்லை.. வசூல் ராஜாக்கள் திண்டாட்டம்!
போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் போலீசார் லஞ்சம் பெறும் சம்பவங்கள் எதிரொலியாக, தமிழகம் உள்பட நாடு முழுவதும் படிப்படியாக டிஜிட்டல் முறை அமலாக்கப்பட்டு வருகிறது.
போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் போலீசார் லஞ்சம் பெறும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இதன் எதிரொலியாக, தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் படிப்படியாக டிஜிட்டல் முறை அமலாக்கப்பட்டு வருகிறது. இதனால் வசூல் ராஜாக்களின் பாடு திண்டாட்டமாகியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளால் விபத்துக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அப்படி விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளை பிடித்து போலீசார் அபராதம் வசூலித்து வருகின்றனர்.

அபராதம் விதித்ததற்கான ரசீது போலீசாரின் கைப்பட எழுதி தரப்பட்டு வருகிறது. ஆனால் இதில் முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன. எனவே விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிக்கும் முறை படிப்படியாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் வாகன தணிக்கையில் ஈடுபடும் போலீசார், விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளிடம், பேடிஎம் மூலமாக அபராதம் வசூலிக்கும் முறை கடந்த சில நாட்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது.

அபராதம் வசூலிக்கும் முறையை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, இ-சலான் சிஸ்டம் விரைவில் நடைமுறைக்கு வருகிறது. இந்த திட்டத்தின்படி வட்டார போக்குவரத்து அலுவலக (ஆர்டிஓ) அதிகாரிகளுக்கு, பாயிண்ட் ஆப் சேல் (POS) இயந்திரம் வழங்கப்பட்டு விடும்.

வாகன தணிக்கையில் ஈடுபடும் அவர்கள், விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளை பிடித்து, பிஓஎஸ் இயந்திரம் மூலமாக அபராத தொகையை வசூலித்து விடுவார்கள். அதிகாரிகளிடம் சிக்கும் வாகன ஓட்டிகள், கிரெடிட் அல்லது டெபிட் கார்டை பயன்படுத்தி, பிஓஎஸ் இயந்திரம் மூலமாக அபராத தொகையை கட்டலாம்.

அதுமட்டுமல்லாமல் இந்த இயந்திரம், சலானையும் வழங்கிவிடும். கேஸ்லெஸ் மற்றும் பண பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காகவே இ-சலான் திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்படுகிறது.

அதிகாரிகளுக்கு வழங்கப்படவுள்ள இயந்திரத்தில், குற்றங்களின் வகைகள் பட்டியலிடப்பட்டு விடும். அதற்கு ஏற்ப அவை சலான்களை வழங்கும். விதிமுறைகளை மீறி, அதிகாரிகளிடம் சிக்கும் வாகன ஓட்டிகளுக்கு 2 வாய்ப்புகள் வழங்கப்படும்.

முதலாவது, சம்பவ இடத்திலேயே கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டை பயன்படுத்தி, பிஓஎஸ் இயந்திரம் மூலமாக அபராத தொகையை செலுத்தலாம். அல்லது வங்கிக்கு சென்று சலான் நம்பரை தெரிவித்து, அபராத தொகையை கட்டலாம்.

தற்போது கோவா மாநிலத்தில் இந்த இ-சலான் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. நடப்பு நிதியாண்டிற்குள்ளாக அங்கு இ-சலான் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு விடும் என உயரதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதற்காக கோவா மாநில போக்குவரத்து துறை, எச்டிஎப்சி வங்கியுடன் டை அப் செய்து கொண்டுள்ளது. எச்டிஎப்சி வங்கிதான் பிஓஎஸ் இயந்திரங்களை வழங்கவுள்ளது. விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதும், இந்த திட்டத்தின் மூலமாக கட்டுக்குள் கொண்டு வரப்படும்.

முன்னதாக தமிழகத்தில் வாகன தணிக்கையில் ஈடுபடும் போலீசார் வசூல் வேட்டையில் களமிறங்கிய சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. இதற்கு எதிராக ஆங்காங்கே பொதுமக்கள் போராட்டங்களிலும் ஈடுபட தொடங்கினர்.

நிலைமை விபரீதமாவதை புரிந்து கொண்ட தமிழக காவல்துறை, சென்னை, கோவை உள்ளிட்ட ஒரு சில இடங்களில், கிரெடிட் அல்லது டெபிட் கார்டை பயன்படுத்தி பிஓஎஸ் இயந்திரம் மூலமாக அபராதம் வசூலிக்கும் முறையை ஏற்கனவே அறிமுகம் செய்து விட்டது.

இந்த திட்டம் படிப்படியாக தமிழகம் முழுவதும் அமலுக்கு கொண்டு வரப்படும் என போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற திட்டங்களின் மூலமாக, அபராத தொகையை போலீசாரின் கையில் கொடுக்க வேண்டியதில்லை. எனவே ஒரு சில வசூல் ராஜாக்களின் பாடு இனி திண்டாட்டம்தான்!!
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்


Click it and Unblock the Notifications








