இனி இது இல்லாம வீட்ல இருந்து வண்டியை எடுத்தராதீங்க! ரோட்ல போலீஸே இல்லனாலும் செல்போன் நம்பருக்கு அபராதம் வரும்!
இந்தியாவில் ஏராளமான வாகனங்கள், போதுமான ஆவணங்கள் இல்லாமல் சாலைகளில் வலம் வந்து கொண்டுள்ளன. உதாரணமாக ஒரு சில வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் (Insurance) இருக்காது. அதேபோல் இன்னும் ஒரு சில வாகனங்களுக்கு பியூசிசி எனப்படும் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் (PUCC - Pollution Under Control Certificate) இருக்காது.
இது போன்ற முக்கியமான ஆவணங்கள் இல்லாமலோ, காலாவதியான நிலையிலோ வாகனங்களை இயக்குவது விதிமுறை மீறல் ஆகும். இந்த விதிமுறை மீறலில் ஈடுபடுபவர்களுக்கு, அதிகாரிகளால் அபராதம் விதிக்க முடியும். இருப்பினும் இதை எல்லாம் பொருட்படுத்தாமல், ஒரு சிலர் தொடர்ந்து இது போன்ற விதிமுறை மீறல்களில் ஈடுபட்டு கொண்டே உள்ளனர்.

ஒரு வேளை காவல் துறை அதிகாரிகளிடம் சிக்கி கொண்டால், லஞ்சம் கொடுத்து விட்டு தப்பி விடலாம் என்பதும் கூட, இந்த அலட்சியத்திற்கு ஒரு காரணமாக உள்ளது. எனவே காவல் துறை அதிகாரிகளின் தலையீடு இல்லாமல், தொழில்நுட்பத்தின் உதவியின் மூலம், இது போன்ற விதிமுறை மீறல்களை கட்டுக்குள் கொண்டு வரும் பணிகளில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கோவா மாநிலத்தில் தற்போது அதிரடியான புதிய திட்டம் ஒன்று அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி, கோவா மாநிலத்திற்கு உள்ளே நுழையும் முக்கியமான செக் போஸ்ட்களில் ஒன்றான மொல்லம் பார்டர் செக் போஸ்ட்டில், அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த செக் போஸ்ட்டின் வழியாக கோவா மாநிலத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களின் நம்பர் பிளேட்களில் உள்ள பதிவு எண்களையும் இந்த கேமராக்கள் ஸ்கேன் செய்யும். பின்னர் இந்த கேமராவுடன் இணைக்கப்பட்டுள்ள டேட்டா பேஸ் மூலமாக, அந்த வாகனங்களின் ஆவணங்களின் நிலை என்ன? என்பதை சோதித்து பார்க்கும்.
அதாவது அந்த வாகனத்திற்கு இன்சூரன்ஸ் உள்ளதா? பியூசிசி உள்ளதா? என்பதையெல்லாம் பரிசோதிக்கும். அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்து விட்டால் ஒரு பிரச்னையும் இல்லை. ஆனால் ஆவணங்கள் சரியாக இல்லை என்றால், வாகனத்தின் உரிமையாளரின் செல்போனுக்கு எஸ்எம்எஸ் மூலமாக அபராத ரசீது அனுப்பி வைக்கப்படும். இவை அனைதையும் ஆட்டோமேட்டிக்காக இந்த சிஸ்டமே செய்து விடும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய திட்டத்தின்படி, இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். அதுவே பியூசிசி இல்லை என்றால், ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். தற்போது மொல்லம் பார்டர் செக் போஸ்ட்டில் மட்டுமே இத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது. ஆனால் வரும் மாதங்களில் கோவா மாநிலத்தின் மற்ற பார்டர் செக் போஸ்ட்களிலும் இத்திட்டத்தை அமலுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஆல் அபோட் பெல்காம் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: காவல் துறை அதிகாரிகளின் நேரடி தலையீடு இல்லை என்பதால், லஞ்சம் போன்ற பிரச்னைகளை, இந்த திட்டம் மூலமாக முடிவுக்கு கொண்டு வர முடியும். ஆனால் முழுக்க முழுக்க தொழில்நுட்பத்தை சார்ந்து இருப்பதால், அபராதம் விதிப்பதில் ஒரு சில தவறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அப்படியான குளறுபடிகள் எதுவும் நடக்காமல் பார்த்து கொண்டால், இது போன்ற திட்டங்கள் உண்மையிலேயே வரவேற்கப்பட வேண்டியவைதான் என்பது எங்கள் கருத்து.
ஆனால் கோவா மட்டுமல்லாது, இந்தியாவின் மற்ற பல்வேறு பகுதிகளிலும் தற்போது இது போன்ற திட்டங்கள் அமலுக்கு வர தொடங்கியுள்ளன. எனவே நாட்டின் அனைத்து பகுதிகளிலும் முறையான ஆவணங்களுடன் வாகனங்களை இயக்குவது நல்லது. இது காவல் துறையின் அபராத நடவடிக்கைகளில் இருந்து உங்களை பாதுகாக்கும்.


Click it and Unblock the Notifications








