துபாயிலிருந்து கொச்சிக்கு மினி கூப்பர் காரில் நூதனமாக 7 கிலோ தங்கம் கடத்தல்!
துபாயிலிருந்து கொச்சி துறைமுகம் வழியாக இறக்குமதி செய்யப்பட்ட மினி கூப்பர் காரில் நூதன முறையில் கடத்தி வரப்பட்ட 7 கிலோ தங்கத்தை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கார் இறக்குமதியில் வழங்கபப்படும் வரிச்சலுகையை பயன்படுத்தி இந்த நூதன கடத்தல் சம்பவத்தை சினிமா பாணியில் அரங்கேறியிருக்கிறது கடத்தல் கும்பல். இந்த சம்பவம் குறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

இறக்குமதி கார்
துபாயிலிருந்து கப்பல் வழியாக கொச்சி துறைமுகத்திற்கு வரும் சொகுசு காரில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, உஷாரான கொச்சி சுங்கத் துறை அதிகாரி கேஎன்.ராகவன் தலைமையிலான குழுவினர் கப்பலில் வந்த மினி கூப்பர் காரை சோதனையிட்டுள்ளனர்.

நூதன ஐடியா
காரை முற்றிலும் சோதனையிட்டுள்ளனர். அப்போது காரின் எரிபொருள் கலனில் 7 கிலோ தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர். அந்த காரை பறிமுதல் செய்து அதிலிருந்து தங்கத்தை வெளியில் எடுத்தனர்.

மதிப்பு
காரின் எரிபொருள் கலனில் 14 தங்கச் சங்கிலிகள் பாலிதீன் கவர்களில் வைத்து மறைத்து வைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு சங்கிலியும் 500 கிராம் எடை கொண்டது. மொத்தம் 7 கிலோ எடை கொண்ட இந்த தங்கத்தின் மதிப்பு ரூ.7 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மங்களூர் ஆசாமி
மங்களூர் அருகேயுள்ள புத்தூர் என்ற இடத்தை சேர்ந்த மொய்தீன் குன்ஹி என்பவரது பெயரில் அந்த கார் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, கடத்தல் ஆசாமிகளை பிடிக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

வரிச்சலுகை
சம்பந்தப்பட்ட மினி கூப்பர் காரை "கார்னெட் டி பேஸேஜ்" என்ற இறக்குமதி விதிகளின்படி கொண்டு வந்துள்ளனர். இந்த விதிகளின்படி இறக்குமதி செய்யப்படும் காரை எந்தவொரு நாட்டிலும் இறக்குமதி வரி செலுத்தாமல் கொண்டு செல்லலாம். அந்த காரை 6 மாதங்கள் வரை சம்பந்தப்பட்ட நாட்டில் பயன்படுத்த சர்வதேச இறக்குமதி விதிமுறை அனுமதிக்கிறது.

உதவியும், உபத்திரமும்
அதாவது, சுற்றுலா மற்றும் தற்காலிக பணிகளுக்காக வேறு நாட்டிற்கு செல்வோர்க்கு தங்களது சொந்த காரை எடுத்துச் செல்வதற்காக இந்த சட்டம் அனுமதிக்கிறது. ஆனால், இதனை பயன்படுத்தி தற்போது தங்கம் கடத்தி வரப்பட்டிருப்பது சுங்கத் துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பல கார்கள்
ஆண்டு தோறும் கொச்சி துறைமுகத்துக்கு 25 முதல் 30 கார்கள் வரை கார்னெட் டி பேஸேஜ் திட்டத்தின் வழியாக இறக்குமதி செய்யப்படுகிறது. எனவே, இதில் பல கார்கள் தங்க கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுகிறது.

தங்க நகரம்
சர்வதேச அளவில் துபாய் தங்க விற்பனையில் முன்னிலை வகிக்கிறது. அதேபோன்று, நாட்டிலேயே தங்க மோகவும், விற்பனையும் அதிகமுள்ள மாநிலங்களில் ஒன்று கேரளா. தங்க வர்த்தகத்திலும் கேரள நிறுவனங்கள் முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.

காரின் மதிப்பு
தங்க கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினி கூப்பர் கார் ரூ.25 லட்சம் மதிப்புடையது.


Click it and Unblock the Notifications








