இது சூப்பரு... ஸ்கெட்ச் போட்டு சாதித்து காட்டிய ஒன்றிய அரசு... நாமதான் அவசரப்பட்டு தப்பா நெனச்சுட்டோம்!
இந்திய மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

உலகிலேயே சாலை விபத்துக்கள் அதிகமாக நடைபெறும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற தவறுவதுதான் முக்கியமான காரணம். இதுதவிர சாலைகள் மோசமாக இருப்பதையும் சாலை விபத்துக்களுக்கு ஒரு காரணமாக குறிப்பிடலாம்.

ஆனால் இந்தியாவில் நடைபெறும் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு மிகவும் தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தை இதற்கு உதாரணமாக குறிப்பிட முடியும்.

திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டம் கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி அமலுக்கு கொண்டு வரப்பட்டது. போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகை கடுமையாக உயர்த்தப்பட்டிருந்த காரணத்தால், புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. வாகன ஓட்டிகள் மட்டுமல்லாது, பல்வேறு மாநில அரசுகளும் எதிர்ப்பு தெரிவித்தன.

ஆனால் அந்த எதிர்ப்புகளை எல்லாம் ஒன்றிய அரசு பொருட்படுத்தவே இல்லை. இந்தியாவில் போக்குவரத்து விதிமுறை மீறல்களை குறைப்பதும், சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதும்தான் முக்கிய நோக்கம் என்று ஒன்றிய அரசு கூறியது. ஒன்றிய அரசின் இந்த முயற்சிக்கு தற்போது நல்ல பலன் கிடைத்துள்ளது. ஆம், இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளாக சாலை விபத்துக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டு 18 சதவீதம் குறைந்துள்ளது. திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டமே இதற்கு காரணம் என ஒன்றிய அரசு கூறியுள்ளது. இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை குறைந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த 2018ம் ஆண்டு 4.7 லட்சம் சாலை விபத்துக்கள் நடைபெற்றுள்ளன. இந்த எண்ணிக்கை கடந்த 2019ம் ஆண்டில் 4.5 லட்சமாக குறைந்துள்ளது. இதன்பின் வந்த கடந்த 2020ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 3.6 லட்சமாக குறைந்துள்ளது. இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக குறைந்து கொண்டே வருவதை இந்த புள்ளி விபரங்கள் காட்டுகின்றன.

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் இந்த புள்ளி விபரங்களை தற்போது வழங்கியுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருப்பதற்கு கோவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் கடந்த ஆண்டு மிக கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கூட பயணங்களை மேற்கொள்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன. எனவே வாகன போக்குவரத்து வெகுவாக குறைந்தது. இதன் காரணமாக இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துள்ளது.

ஆக மொத்தத்தில் இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதற்கு திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்துடன், ஊரடங்கும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை இந்தியாவில் இன்னும் வெகுவாக குறைப்பதற்கு ஒன்றிய அரசு தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகிறது.

சாலைகளை தரமாக கட்டமைப்பதும் இதில் ஒன்று. எனவே வரும் காலங்களில் இந்தியாவில் தரம் வாய்ந்த சாலைகளை நாம் காண முடியும். ஆனால் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றுவது நம் கைகளில்தான் உள்ளது. அனைத்து போக்குவரத்து விதிமுறைகளையும் ஒழுங்காக பின்பற்றினால், இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை நாம் எதிர்பார்க்கும் அளவிற்கு குறையும்.

இந்தியாவை பொறுத்தவரை இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் பலரும் ஹெல்மெட் அணிவது கிடையாது. இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதிமுறையை அவர்கள் பின்பற்றுவதில்லை. இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்களுக்கு இருக்கும் மிக முக்கியமான பாதுகாப்பு அம்சம் ஹெல்மெட்தான் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

அதேபோல் காரில் பயணம் செய்யும் பலர் சீட் பெல்ட் அணிவதில்லை. காரில் பயணம் செய்யும்போது சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறையை முறையாக பின்பற்றினாலும், சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்கலாம். இவற்றுடன் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பது, வேக வரம்புகளை பின்பற்றுவது ஆகியவற்றின் மூலம் சாலை விபத்துக்களை குறைக்கலாம்.


Click it and Unblock the Notifications








