இதுக்குதான் கண்மூடித்தனமா கூகுள் மேப்பை நம்பக்கூடாதுனு சொல்றது- பெண் மருத்துவருக்கு ஏற்பட்ட மறக்க முடியாத நாள்
கூகுள் வரைப்படத்தை பின் தொடர்ந்து சென்று அசம்பாவித சம்பவங்களை சந்தித்த பல்வேறு வாகன ஓட்டிகளை பற்றி இதற்கு முன் பார்த்துள்ளோம். அத்தகைய சம்பவம் ஒன்று கேரளாவில் சமீபத்தில் அரங்கேறியுள்ளது.

கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரளாவின் கோட்டயம் பகுதியில் மருத்துவர் ஒருவர் தனது குடும்பத்துடன் காரில் பயணம் செய்துள்ளார். தற்போதைய நாட்களில் புதிய இடங்களுக்கு காரில் பயணிக்கும் பலரும் தங்களது காரின் டேஸ்போர்டில் காட்டப்படும் வரைப்படத்தை பார்த்துதான் செல்கின்றனர்.

இந்த மருத்துவரும் தனது மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா காரின் இன்ஃபோடெயின்மெண்ட் திரையில் காட்டப்பட்ட வரைப்படத்தை நம்பி பயணம் செய்ய, இரவு நேரத்தில் கார் ஓடை ஒன்றில் இறங்கி விபத்திற்குள்ளாகி உள்ளது. இருப்பினும் அதிர்ஷ்டவசமாக, காருக்குள் இருந்த மருத்துவரும், அவரது குடும்பத்தினரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இணையத்தில் வைரலாகிவரும் இந்த சம்பவம் கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி இரவு 10 மணிக்கு மேல் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் கூகுள் மேப்பை பார்த்து காரை ஓட்டிய மருத்துவரின் பெயர் சோனியா. இவர் தனது தாயார் சோஷாம்மா, உறவினர் அனீஷ் மற்றும் 3 மாத கைக்குழந்தை உடன் எர்ணாகுளத்தில் இருந்து திருவல்லா நோக்கி பயணம் செய்துள்ளனர்.

இந்த பயணத்திற்கு இடையில் தான் இந்த அசம்பாவித சம்பவம் அரங்கேறியுள்ளது. கூகுள் வரைப்பட செயலியின் உதவியுடன் இவர்கள் திருவாத்துக்கல் பகுதியில் இருந்து எம்பி சாலைக்கு செல்ல நாட்டக்கோம் பைபாஸ் வழியாக சென்றதாக தெரிகிறது. அந்த சாலை ஏற்கனவே கனமழை காரணமாக வெள்ளத்தால் மூழ்கியிருந்தது.

ஆனால் கூகுள் வரைப்படத்தில் சாலை மழைநீரால் மூழ்கியுள்ளது எல்லாம் காட்டப்படாது அல்லவா. சோனியா முடிந்தவரை வரைப்படத்தை பின்தொடர்ந்தவாறு சாலையில் காரை இயக்கியுள்ளார். ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் சாலை எங்குள்ளது என்பது தெளிவாக தெரியாமல் போக, சாலைக்கு அருகே இருந்த ஓடைக்குள் கார் இறங்கியது.

சோனியா காரை நிறுத்த முயன்றும் பலனில்லை, அதற்குள் காரின் பாதிக்கு மேலான பகுதி ஓடைக்குள் இறங்கிவிட்டது. இந்த நிலையில், காருக்குள் இருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்கவே, அருகே கடையொன்றில் இருந்தவர் அதை கவனித்துள்ளார். உடனடியாக அவர் உதவிக்கு ஆட்களை கூப்பிட, மருத்துவர் சோனியா மற்றும் கைக்குழந்தை உள்பட அவரது குடும்பத்தினரை ஓடைக்குள் இருந்து மீட்க முடிந்துள்ளது.

பின்னர் கார் ஓடைக்குள் இறங்கியது குறித்து கோட்டயம் மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட, விடிந்த பின்பு போலீஸார் தீயணைப்பு படையினருடன் காரை மீட்கும் பணியை துரிதமாக மேற்கொள்ள துவங்கினர். அதனை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீஸார், கார் ஓட்டுனர் கூகுள் வரைப்படத்தின் உதவியுடன் வாகனத்தை இயக்கியதாகவும், அதுக்காட்டிய வழியில் செல்ல முற்பட்டபோது, கார் ஓடைக்குள் இறங்கியதாகவும் தெரிவித்தனர்.

ஏற்கனவே கூறியதுபோல், கூகுள் மேப் காட்டிய வழியை பின்தொடர்ந்து சென்று அசம்பாவிதங்களை சந்தித்த வாகன ஓட்டிகள் பலர் உள்ளனர். இதேபோன்றதான ஒரு சம்பவம் கடந்த மே மாதம் கேரளாவின் காடுதுருத்தி பகுதியில் நடந்தது. அப்போது கர்நாடகாவை சேர்ந்த ஒரு குடும்பம் மூணாறில் இருந்து ஆலப்புழா செல்வதற்காக கூகுள் மேப் உதவியுடன் காரில் பயணித்தனர்.

அவர்கள் வந்த கார், குருப்பந்தரா என்கிற பகுதியில் இருந்த ஓடைக்குள் இறங்கியது. ஆனால், அது பகல்நேரமாக இருந்ததால் கார் ஓடைக்குள் முழுமையாக இறங்கும் முன்பே அருகில் இருந்தவர்கள் காருக்குள் இருந்தவர்களை எச்சரித்தனர். இதற்காக கூகுள் வரைப்படத்தை பயன்படுத்தவே வேண்டாம் என கூறவில்லை.

எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் அதையே முழுவதுமாக நம்பி செல்ல வேண்டாம் என்றுதான் கூறுகிறோம். நகரங்கள் அல்லாத தொலைத்தூர பகுதிகள் மற்றும் மொபைல் போன் சிக்னல் சரிவர கிடைக்காத பகுதிகளில் கூகுள் வரைப்படம் உதவியுடன் சாலைகளில் பயணம் செய்யும்போது இத்தகைய சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறுவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








