ஆட்டோ ஓட்டுவதா வேண்டாமா... கூகுள் மேப்-ஆல் எத்தனை பிரச்சனை!! காரணம் என்ன தெரியுமா?
கேரளாவில் கூகுள் மேப்பை பயன்படுத்தி சுற்றுலா பயணிகள் சென்ற ஃபோர்டு எண்டேவர் (Ford Endeavour) கார் வழி தெரியாமல் குளத்தில் மூழ்கியுள்ளது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பின்னர் என்ன நடந்தது என்பதை பற்றி வாருங்கள் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கூகுள் மேப்பை பயன்படுத்துவது கடந்த சில வருடங்களில் மக்களிடையே வெகுவாக அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, புது, புது இடங்களுக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ரிப்போர்ட் தெரிவிக்கிறது. மேலும், மற்றவர்களிடத்தில் வழிக்கேட்டு செல்லும் பழக்கமும் மக்கள் மத்தியில் வெகுவாக குறைந்துள்ளதை பார்க்க முடிகிறது.

இதற்கு முக்கிய காரணம், கூகுள் மேப்பின் துல்லிய தன்மை ஆகும். அதாவது, நீங்கள் செல்ல வேண்டிய இடத்தை உள்ளீடு செய்தால் மட்டுமே போதும், உங்களது வாகனத்தில் எந்த வழியில் சென்றால் சரியாக இருக்கும், எவ்வளவு நேரத்தில் சென்றுவிடலாம், இடையில் பெட்ரோல் பங்க் & உணவகங்கள் எங்கே உள்ளன? என எல்லாவற்றிற்கும் பதில் கிடைக்கிறது.
இருப்பினும், கூகுள் மேப் நகரத்திற்குள் பயன்படுத்துவதற்கு வேண்டுமாயின் ஏற்றதாக இருக்கலாம். ஆனால், கடைக்கோடியில் உள்ள கிராமம் மற்றும் காட்டு பகுதிகளுக்கு செல்வதற்கு கூகுள் மேப் ஏற்றதா என கேட்டால், இல்லையென்று தான் சொல்ல வேண்டும். சில சமயங்களில் நகரத்திற்குள் செல்லும்போதே கூகுள் மேப் சொதப்பி விடுகிறது. சமீபத்தில் கூட, மும்பையில் நடிகை ஷில்பா ஷெட்டி கூகுள் மேப்பை பயன்படுத்தி சென்றதால் நோ-எண்ட்ரி சாலைக்கு சென்றுவிட்டதாக கூறியிருந்தார்.

அந்த வரிசையில், ஹைதராபாத்தில் இருந்து கேரளாவுக்கு சென்ற சுற்றுலா பயணிகளின் ஃபோர்டு எண்டேவர் கார் கூகுள் மேப் காட்டிய வழியில் பின்தொடர்ந்து சென்ற போது அங்கிருந்த குளத்தினுள் பாய்ந்துள்ளது. கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள குருப்பந்தாரா என்கிற பகுதியில் கடந்த மே 24ஆம் தேதி இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது.
ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தங்களது ஃபோர்டு காரில் கேரளாவுக்கு சுற்றுலா வந்துள்ளனர். இவர்கள் ஆலப்புழாவை நோக்கி சென்றுக் கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது. கேரளா இயற்கை வளம் மிகுந்த மாநிலம் என்பது நமக்கு தெரியும். இதனால், அவ்வப்போது அங்கு மழை பெய்யும் என்பதும் நமக்கு தெரியும். இதன் காரணமாகவே, கேரளாவில் சில பகுதிகளில் நீர்நிலைகளில் அடிக்கடி நீர் மட்டம் மாறிக் கொண்டே இருப்பது வழக்கம்.

அந்த வகையில், இந்த ஹைதராபாத் குடும்பத்தினர் சென்ற பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கியுள்ளது. இதனால், குருப்பந்தாராவில் உள்ள குளம் நிரம்பி சாலையையும் ஆக்கிரமித்துள்ளது. அதாவது, அங்கு ஒரு சாலை இருந்துள்ளது, அதைதான் கூகுள் மேப் காட்டியுள்ளது. ஆனால், மழை பெய்தது, அதன் காரணமாக நீரால் சாலை மூழ்கடிக்கப்பட்டது எல்லாம் கூகுள் மேப்புக்கு தெரியாது.
கூகுள் மேப் போன்ற டெக்னாலஜிகளில் உள்ள பிரச்சனையே இதுதான். ஏனெனில், பயன்படுத்த, பயன்படுத்தவே அவை அப்டேட் ஆகும். கடந்த காலங்களில் இருந்து, கூகுள் மேப்-ஆல் நடந்த விபத்துகள் ஏராளம். குறிப்பாக, கேரளாவில் கூகுள் மேப் பல இடங்களில் சரியானதாக இல்லை. ஆதலால், கூகுள் மேப்பை கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கூகுள் மேப்பை ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்த வேண்டும். தெரியாத இடங்களுக்கு செல்லும்போது, விரைவாக சென்று விடலாம் என குறுக்கு வழியில் பயணம் செய்ய வேண்டாம். உள்ளூர்வாசிகளிடம் வழி கேட்டு செல்வதும் சிறந்தது. கூகுள் மேப்பை அப்டேட் செய்யும் பணிகளில் கூகுள் நிறுவனம் தொடர்ந்து ஈடுப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications









