கூகுள் மேப்ஸில் அட்டகாசமான புதிய வசதி அறிமுகம்... இனி கவலையில்லாமல் ரிலாக்ஸாக பயணம் செய்யுங்கள்
கூகுள் மேப்ஸில் அட்டகாசமான புதிய வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் பெண்கள் அடுப்படியில் முடங்கி கிடந்த காலம் மலையேறி விட்டது. பெண் குழந்தைகளின் கல்விக்கும் தற்போது பெற்றோர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். படித்த முடித்தவுடன் திருமணம் என்றில்லாமல், வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கையும் கூட இந்தியாவில் அதிகரித்து வருகிறது.

அவ்வாறு வேலைக்கு செல்லும் அனைத்து பெண்களிடமும் சொந்த வாகனம் இருப்பதில்லை. டாக்ஸி மற்றும் ஆட்டோ ரிக்ஸா போன்ற பொது போக்குவரத்து வழிகளை பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கை ஏராளம். தற்போது இந்தியாவில் ஓலா மற்றும் உபேர் போன்ற கேப் (Cab) நிறுவனங்களும் விஸ்வரூப வளர்ச்சியை சந்தித்து வருகின்றன.

குறிப்பாக சென்னை, பெங்களூர், டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தா போன்ற நன்கு வளர்ச்சியடைந்த நகரங்களில், மக்களுடன் கேப் நிறுவனங்கள் நன்கு பின்னி பிணைந்து விட்டன. ஆனால் கேப்களில் பயணம் செய்யும் அனைத்து பெண்களுக்கும் உரிய பாதுகாப்பு கிடைக்கிறதா? என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தலைநகர் டெல்லியில் உபேர் டிரைவரால் இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக எழுந்த புகார் நாட்டையே உலுக்கி எடுத்தது. இதுதொடர்பான போலீசாரின் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. இந்த சம்பவம் நாடு முழுக்க கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அத்துடன் தலைநகரிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற தோற்றத்தையும் உண்டாக்கியது. இது போன்ற காரணங்களால், இன்னமும் கூட பெண்கள் கேப்களில் ஒருவித அச்சத்துடன்தான் பயணம் செய்து வருகின்றனர். கேப்களில் பயணம் செய்பவர்களின் பாதுகாப்பை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த சூழலில் கேப்களில் பயணம் செய்பவர்களின் பாதுகாப்பிற்காக கூகுள் மேப்ஸ் அப்ளிகேஷனில் தற்போது புதிய வசதி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்திய பயனர்களுக்கு என அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த வசதிக்கு ‘Stay Safer' என பெயரிடப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் ஆண்ட்ராய்டு பயனர்கள் இந்த வசதியை பயன்படுத்த முடியும்.

ஆனால் ஐஓஎஸ் (iOS) இயங்குதளத்தை பயன்படுத்துபவர்களுக்கு இந்த வசதி தற்போதைக்கு கிடையாது. அவர்களுக்கு இந்த வசதி எப்போது கிடைக்கும்? என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் தற்போதைக்கு வெளியாகவில்லை. நீங்கள் இந்த ‘Stay Safer' வசதியை பயன்படுத்த வேண்டுமென்றால், கூகுள் மேப்ஸின் லேட்டஸ்ட் வெர்ஷனை அப்டேட் செய்ய வேண்டும்.

கூகுள் மேப்ஸ் அப்ளிகேஷனில் நீங்கள் சென்று சேர வேண்டிய இடத்தை 'சர்ச்' செய்த பிறகு, 'Directions' பட்டனை 'க்ளிக்' செய்யுங்கள். அப்போது உங்கள் திரையின் கீழே வலது பக்கத்தில் 'Stay Safer' என்ற புதிய பட்டன் தோன்றும். இதனை நீங்கள் கிளிக் செய்தால், 'share live trip' மற்றும் 'get off-route alerts' என்ற 2 புதிய ஆப்ஷன்கள் உங்களுக்கு வழங்கப்படும்.

இதில், முதல் ஆப்ஷனான 'share live trip' உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் உங்கள் லைவ் லொக்கேஷனை நேரடியாக பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது. மிகவும் புகழ்பெற்ற பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்ற அப்ளிகேஷன்களிலும் லைவ் லொக்கேஷனை பகிர்ந்து கொள்ள முடியும். இரண்டாவது ஆப்ஷன் 'get off-route alerts'.

கூகுள் மேப்ஸ் பரிந்துரைத்த வழியில் இருந்து உங்கள் டிரைவர் 0.5 கிலோ மீட்டருக்கும் மேல் விலகி சென்றால், இது உங்களை எச்சரிக்கும். 'get off-route alerts' ஆப்ஷனை ஆக்டிவேட் செய்வதன் மூலம் நீங்கள் இந்த எச்சரிக்கையை பெறலாம். இந்த எச்சரிக்கை மூலமாக, தற்போது நீங்கள் உள்ள மற்றும் பரிந்துரைத்த வழித்தடத்தை உங்களால் ஒப்பிட்டு பார்த்து கொள்ள முடியும்.

அத்துடன் 'ரூட்' தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் குழப்பம் இருந்தால் உங்கள் டிரைவரிடம் கேட்டு அதனை நிவர்த்தி செய்து கொள்ளலாம். இந்தியாவில் பாதுகாப்பு தொடர்பாக உள்ள கவலைகள் காரணமாக ஏராளமானோர் தங்களின் பயணங்களை சுருக்கி கொள்கின்றனர். அத்தகைய நபர்களுக்கு இந்த வசதி உதவிகரமாக இருக்கும்.

உங்களுக்கு அறிமுகம் இல்லாத பாதையில் நீங்கள் பயணம் செய்யும்போது இந்த வசதி உங்களுக்கு உதவி செய்யும். டிரைவர் பாதை மாறியது தொடர்பாக உங்களுக்கு எச்சரிக்கை கிடைத்தால், உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் போலீசாரை நீங்கள் அலர்ட் செய்ய முடியும். குறிப்பாக தெரியாத ஊரில் பயணம் செய்யும் பெண்களுக்கு இந்த வசதி உதவிகரமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications