செய்வதறியமால் தவிக்கும் வாகன விற்பனையாளர்கள்... போக்குவரத்துத்துறை அமைச்சரின் பதிலால் கவலை..!
போக்குவரத்துத்துறை அமைச்சரின் பதிலால் வாகன விற்பனை நிலையங்கள் செய்வதறியாமல் தவிக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

இந்திய வாகனத்துறை வரலாற்றிலேயே இல்லாத அளவிலான விற்பனை வீழ்ச்சியை கடந்த ஆண்டின் தொடக்கத்தில் சந்தித்தது. யாரும் எதிர்பாராத இந்த வீழ்ச்சி கடந்த ஆண்டின் இறுதி வரை நீடித்தது குறிப்பிடத்தகுந்தது. குறிப்பாக தீபாவளி பண்டிகைக்கு முன்னர் வரை இந்திய வாகனத்துறை கடும் விற்பனைச் சரிவைச் சந்தித்து வந்தது.

இதனால், பெரும்பான்மையான வாகன உற்பத்தி நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியைச் சந்தித்தன.
இதன்காரணமாக உற்பத்தியைக் குறைத்தல், தற்காலிக பணியாளர்களை வேலையைவிட்டு நீக்குதல் மற்றும் உற்பத்தியாலையை தற்காலிகமாக மூடுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு நிதி நெருக்கடியைச் சமன் செய்யும் முயற்சியில் அவை ஈடுபட்டன.

இருப்பினும் அதில் எந்தவொரு பலனும் எட்டவில்லை. தொடர் முயற்சிகளில் அடுத்தடுத்து தோல்விலையைச் சந்தித்து வந்த நிறுவனங்களுக்கு தீபாவளிப் பண்டிகை ஓர் நிவாரணமாக அமைந்தது. தொடர்ந்து அடுத்தடுத்து வந்த பண்டிகைத் தினங்களும் சற்றே கை கொடுத்தன.

அதிலும், வாகன உற்பத்தி நிறுவனங்கள் அறிவித்த அதிரடி சலுகையின் மூலமாகவே, தொடர்ச்சியாக விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்து வந்த நிறுவனங்கள் கணிசமான விற்பனை அதிகரிப்பைப் பெற ஆரம்பித்தன. இருப்பினும், டாடா போன்ற பெரு நிறுவனங்கள் கடந்த காலங்களில் பெற்ற விற்பனையைப் பெற முடியமால் திணறி வருகின்றன.

ஆகையால், பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டும் தோல்வியே பலனாக கிடைத்து வந்ததன் காரணத்தால், இவற்றில் இருந்து மீள்வதற்காக வாகன உற்பத்தி நிறுவனங்கள் மத்திய அரசின் உதவியை நாட ஆரம்பித்தன. ஆனால், அதுவும் கையை விரித்து விட்டது.

இருப்பினும் ஒரு சில மாநில அரசுகள் தங்களின் பங்காக உதவியை வழங்கின. அந்தவகையில், யூனியன் பிரதேசமான கோவா அரசு வாகன விற்பனையை அதிகரிக்கச் செய்யும் விதமாக சாலை வரியை 50 சதவீதம் குறைப்பதாக அறிவித்திருந்தது. இது, 2019ம் ஆண்டு டிசம்பர் 31 வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும் எனவும் அறிவித்தது.

இந்த சிறப்பு சலுகை கடந்த வருடத்தின் இறுதியுடன் முடிந்துவிட்ட நிலையில், அதனை தற்போது நீடித்து வழங்குமாறு வாகன விற்பனை நிறுவனங்கள் கோவா அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால், அரசிடம் இதுகுறித்து எந்தவொரு திட்டமும் இல்லை என அறவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் மவுவின் கோடின்ஹோ, "வாகன விற்பனையை அதிகரிக்கச் செய்யும் விதமாக 50 சதவீத சாலை வரி குறைப்பு வழங்கப்பட்டது. இதனை நீட்டித்து வழங்குமாறு கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருக்கின்றது. ஆனால், அதுகுறித்த எந்தவொரு திட்டமும் அரசிடம் தற்போதைக்கு இல்லை" என உறுதியாக தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து, பிஎஸ்-4 அமலுக்கு முன்பாக ஸ்டாக்கில் உள்ள வாகனங்களை விற்பனைச் செய்ய கணிசமான சலுகைகளை வாகன விற்பனை நிலையங்களே வழங்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
அமைச்சரின் இந்த பதிலால் வாகன விற்பனையாளர்கள் தற்போது கட்டாய சலுகை அறிவிப்பு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஏனெனில் நடப்பாண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் அனைத்து வாகனங்களும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதி தரத்திற்கேற்ப இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆகையால், தற்போது ஸ்டாக்கில் இருக்கும் அனைத்து பிஎஸ்-4 தரத்திலான வாகனங்களும் விற்றுத் தீர்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், அரசும் கைவிட்டு விட்டதால் தங்களின் சார்பாக சலுகையை அறிவித்து வாடிக்கையாளர்களை கவர வேண்டியநிலை வாகன நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

விற்பனையகங்கள் சலுகையை அறிவிக்காவிட்டால் அவை இழுத்து மூடும் நிலைக்கு தள்ளப்படலாம். ஏனெனில், அரசின் சார்பாகவும் சாலை வரி குறைப்பு அறிவிக்கப்படவில்லை. மேலும், விரைவில் பிஎஸ்-6 விதி அமலுக்கு வரவுள்ளது. இது வாகன விற்பனையகங்கள் மற்றும் உற்பத்தி நிலையங்களுக்கு இக்கட்டான சூழலை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








