வீட்டு மொட்டை மாடியில் விமானம் தயாரித்த மும்பை விமானிக்கு அடித்தது ரூ. 35,000 கோடி ஜாக்பாட்..!!
ரூ. 35,000 கோடி மதிப்பில் விமான தொழிற்சாலையை தொடங்கும் மும்பை வீட்டு மொட்டை மாடி விமானி.
வீட்டு மொட்டை மாடியில் விமானம் தயாரித்து இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த விமானி அமோல் யாதவிற்கு மஹாராஷ்டிரா அரசு இன்பதிரிச்சியை தரும் அறிவிப்பை வெளியிட்டு அவரை திக்குமுக்காட வைத்துள்ளது.

மும்பையை சேர்ந்த இளைஞர் அமோல் யாதவ், விமான துறை சார்ந்த செயல்பாடுகளில் சிறு வயது முதலே அதிக ஆர்வமுடன் வளர்ந்தார்.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் மூத்த விமானியாக பணியாற்றி வந்த அமோல், விமான துறையில் ஏதேனும் சாதனை படைக்க வேண்டும் என்ற கனவுகள் இருந்தது.

கடந்த 2010ம் ஆண்டில் "Thrust Aircraft Company" என்ற நிறுவனத்தை உருவாக்கி, தன் வீட்டு மொட்டை மாடியிலேயே சிறிய ரக விமானம் தயாரிக்கும் பணிகளை தொடங்கினார்.

கடந்த 2016ம் ஆண்டில் 6 பேர் பயணிக்கும் வகையிலான ஒரு சிறிய ரக விமானத்தை தயாரித்து ஒட்டுமொத்த இந்தியாவின் பார்வையையும் தன் பக்கம் திருப்பினார்.

அமோல் யாதவின் ஆறு ஆண்டுகால கடின உழைப்பை பாராட்டிய ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம் (HAL), அவரது விமானத்திற்கு சான்றிதழ் அளித்து கௌரவப்படுத்தியது.

இதை தொடர்ந்து சமீபத்தில் மத்திய அரசின் விமான போக்குவரத்து ஆணையம் இவரது சிறிய ரக விமானத்திற்கு வானில் பறக்க அனுமதி வழங்கி உற்சாகப்படுத்தியது.

தற்போது இதற்கெல்லாம் மகுடம் வைத்தாற் போல மஹாராஷ்டிரா அரசு அமோல் யாதவின் முயற்சிக்கு பெரிய அங்கீகாரத்தை அளித்துள்ளது.

மஹாராஷ்டிராவில் தற்போது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்து வருகிறது. இந்த நிகழ்வில் தான் அம்மாநில அரசு அமோலிற்கு இன்பதிர்ச்சியை தரும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அமோல் யாதவின் திறமையின் மீது நம்பிக்கை வைத்து சிறியளவிலான விமானங்களை தயாரித்து வழங்க ரூ. 35,000 கோடி மதிப்பில் மஹாராஷ்டிர அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அவரது நிறுவனத்திற்கு அளித்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக மும்பையை அடுத்துள்ள பால்கர் மாவட்டத்தில் சுமார் 157 ஏக்கர் பரபரப்பளவிலான இடத்தை அமோல் நிர்வகித்து வரும் ’திரஸ்ட் ஏர்கிராஃப்ட் நிறுவனம்’ பெற்றுள்ளது.

இங்கு அமையவுள்ள தொழிற்சாலையில் 19 பேர் பயணிக்கும் வகையிலான 1300 சிறிய ரக விமானங்கள் தயாரிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இதன்மூலம் நாட்டிலேயே விமானங்கள் தயாரிப்பில் களமிறங்கும் முதல் மாநிலம் என்ற சிறப்பை மஹாராஷ்டிர அரசு பெற்றுள்ளது.

'மேக் இன் இந்தியா' திட்டத்திற்கு வலுசேர்க்கும் விதமாக பார்க்கப்படும் இந்த உள்நாட்டு விமான தயாரிப்பு நிறுவனம் சுமார் 10,000 பேருக்கு வேலை வாய்ப்பை வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடின உழைப்பால் விமான துறையில் தற்போது சாதனை படைத்துள்ள விமானி அமோல் யாதவ், சொந்தமாக உருவாக்கிய விமானத்தை VT-NMD என்ற பெயரில் பதிவு செய்துள்ளார்.

அதில் NM என்பது பிரதமர் நரேந்திர மோடியையும், D என்பது மஹாராஷ்டிராவின் முதலமைச்சரான தேவேந்திர ஃபட்னாவிஸ்-ஸையும் குறிப்பது குறிப்பிடத்தக்கது.

சாதாரண விமான ஊழியராக தனது வாழ்க்கையை தொடர்ந்து, ஒரு விமானத்தையே சொந்தமாக தயாரிக்கும் நிலை வரை உயர்ந்து, இன்று இந்தியாவில் சாதிக்க துடிக்கும் இளைஞர்கள் பலருக்கு புதிய எட்டுத்துக்காட்டாக மாறியுள்ளார் அமோல் யாதவ்.
வெறும் 1,500 ரூபாயில் வழிகாட்டும் வசதியுடன் பைக் ஹெல்மெட்: மாணவர்கள் அசத்தல்

கார் உள்ளிட்ட நான்குசக்கர வாகனங்களில் ஜிபிஎஸ் வழிகாட்டும் சாதனம் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. திக்கு தெரியாத ஊர்களுக்கு கூட யாருடைய துணையும் இல்லாமல் துல்லியமாக சென்றடைவதற்கு இந்த சாதனங்கள் உதவிகரமாக இருக்கின்றன. ஆனால், பைக் மற்றும் ஸ்கூட்டரில் செல்வோருக்கு வழிகாட்டி சாதனங்களை முழுமையாக பயன்படுத்த இயலாத நிலை இருக்கிறது.

பைக், ஸ்கூட்டர்களில் செல்வோரும் வழிகாட்டி வசதியை பயன்படுத்தும் விதத்தில், இப்போது புதிய ஹெல்மெட் ஒன்றை கர்நாடாகவை சேர்ந்த பொறியியல் பயிலும் மாணவர்கள் இரண்டு பேர் சேர்ந்து உருவாக்கி இருக்கின்றனர்.

குல்பர்காவிலுள்ள பிடிஏ கல்லூரியில் பொறியியல் பயின்று வரும் யோகேஷ் மற்றும் அபிஜித் ஆகிய இரண்டு மாணவர்களும் சேர்ந்து வழிகாட்டி வசதியை அளிக்கும் ஹெல்மெட்டை மிக எளிமையான முறையில் உருவாக்கி இருக்கின்றனர்.

புளுடூத் இணைப்பு வசதி கொண்ட சிறிய ஸ்பீக்கர்களை ஹெல்மெட்டிற்குள் பொருத்தி இருக்கின்றனர். இந்த புளூடூத் ஸ்பீக்கர்கள் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் 6 மணிநேரம் வரை இயங்கும்.

இந்த ஸ்பீக்கர்களை வாகன ஓட்டுபவர் தனது மொபைல்போனுடன் இணைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு, மொபைல்போனில் கூகுள் நிகழ்நேர வரைபடத்தில் செல்லுமிடத்தை பதிவு செய்து வழக்கம்போல் பயன்படுத்தலாம்.

வண்டி செல்கையில் ஹெல்மெட்டில் இருக்கும் ஸ்பீக்கர்கள் மூலமாக, செல்லுமிடத்திற்கான வழியை வாய்மொழி தகவலாக ஸ்பீக்கர்கள் மூலமாக வாகனத்தை ஓட்டுபவர் கேட்டுக் கொண்டே மிக துல்லியமாக செல்லுமிடத்தை அடையலாம்.

இந்த ஹெல்மெட்டில் முன்புற விண்ட்ஷீல்டு கண்ணாடியில் விசேஷ கூலிங் பேப்பரை ஒட்டி இருக்கின்றனர். இது பகலில் குளிர்ச்சியாகவும், இரவு நேரத்தில் தெளிவான பார்வை திறனையும் வழங்கும்.

இதுகுறித்து மாணவர்கள் யோகேஷ் மற்றும் அபிஜித் கூறுகையில்," புதிய இடங்களுக்கு பைக்கில் செல்பவர்கள் செல்லுமிடத்தை தெரிந்து கொள்வதில் பிரச்னை இருந்து வருகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் விதத்தில் இந்த ஹெல்மெட்டை உருவாக்கினோம்," என்று கூறினர்.

கூகுள் மேப் வசதியுடன் செயல்படும் இந்த ஹெல்மெட்டிற்கு ரூ.1,500 விலை மதிப்பு தெரிவித்துள்ளனர். இந்த ஹெல்மெட் பயனுள்ளதாக அமையும் என்பது அவர்களது கருத்தாக இருக்கிறது.
Source: ANI


Click it and Unblock the Notifications








