ரூ. 14 ஆயிரம் கோடியை வாரி வழங்கும் மோடி சர்க்கார்... எதற்கு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க!
மத்திய அரசு ரூ. 14 ஆயிரம் கோடியை உலக வங்கிகளிடம் இருந்து கடன் பெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை எதற்காக பயன்படுத்த இருக்கிறது, இந்த மோடி அரசு என்ற தகவலை இந்த பதிவில் காணலாம்.

நாட்டில், முக்கியமான பிரச்னைகளாக பல இருந்தாலும், தற்போது தலையோங்கி நிற்கும் பிரச்னையாக, போக்குவரத்து விதிமீறல் மற்றும் அதனால் உருவாகும் விபத்து உள்ளிட்டவையே இருக்கின்றன. இது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், நாட்டின் அனைத்து போக்குவரத்து துறைக்கும் பெரும் தலை வலியாக மாறி வருகின்றது.
இதன்காரணமாகவே, இதனைக் கட்டுபடுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், இதன் அடுத்தகட்ட நடிவடிக்கையாக மத்திய அரசு ரூ. 14 ஆயிரம் கோடி செலவில், நாடு முழுவதும் அதிகம் விபத்து நிகழும் இடங்களைக் கண்டறிய திட்டமிட்டுள்ளது. மேலும், இந்த இடத்தில் கூடுதல் பாதுகாப்பை அதிகரிக்கவும் அது திட்டமிடப்பட்டு வருகின்றது. இதற்கான ஒப்புதல் அண்மையில் நடைபெற்ற மக்களவை கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டுவிட்டதாக கூறப்படுகின்றது.

இத்திட்டமானது, தற்போது அதிகரித்து வரும் விபத்தினைக் குறைக்கும் நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் சேதங்களைத் தவிர்க்கவும் இந்த புதிய திட்டத்தினை மத்திய அரசு செயல்படுத்த இருக்கின்றது.

இதுகுறித்த அண்மையில் நடைபெற்ற மக்களவை கூட்டத்தில் சாலை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சரான நிதின் கட்காரி கூறியதாவது,
"இது நமது அரசின் மிகவும் முக்கியமான ஓர் முயற்சியாகும். சாலையில் தற்போது அதிகரித்து வரும் விபத்துகளை இத்திட்டம் குறைக்கும். இதற்காக ரூ. 14 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட உள்ளது. இந்த நிதியின்மூலம் விபத்து நிகழும் இடங்கள் கண்டறியப்பட்டு, அந்த இடங்களில் கூடுதல் பாதுகாப்பு வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்கு நிதி அமைச்சகம் அதன் கொள்கை ரீதியான ஒப்புதலை வழங்கியுள்ளது" என்றார்.

உலகிலேயே இந்தியாவில்தான் வாகனங்களுக்கான சந்தை பரந்து விரிந்து காணப்படுகின்றது. இது, ஒவ்வொரு வருடமும் வளர்ச்சியைக் கண்டுக்கொண்டே இருக்கின்றது. ஆகையால், நாட்டில் இருக்கும் வாகனங்களின் எண்ணிக்கை அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகின்றது.

இதுமட்டுமின்றி, அண்மைக் காலங்களாக, ஏற்கனவே நாட்டில் செயல்பட்டு வரும் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமின்றி, புதிய புதிய நிறுவனங்களும் அதன் தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகின்றன. இதனால், நாட்டில் பயன்பாட்டில் இருக்கும் வாகனங்களின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் வளர்ச்சியைக் கண்டு வருகின்றது. இத்துடன், இதனால் ஏற்படும் பின்விளைவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

உலக நாடுகள் கையாண்டு வரும், பழைய வாகனங்களை ஒழித்துகட்டும் திட்டத்தை இந்தியா கையாண்டிருந்தால், தற்போது மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்திருக்கும், போக்குவரத்து நெரிசல் போன்ற இடர்பாடுகள் கணிசமாக குறைந்திருக்கும் என கூறப்படுகின்றது.

அதேநேரத்தில், சாலையில் வாகனங்களை இயக்கும் பெரும்பாலான வாகன ஓட்டிகள், அவர்களின் வாகனங்களை அதிகவேகமாக இயக்குகின்றனர். இதன் பலனாக விபத்தில் சிக்கி பேரிழப்பைச் சந்திக்கின்றனர்.

அவ்வாறு, நாட்டில் நடக்கும் விபத்து குறித்து தேசிய குற்றப்பிரிவு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2016ம் ஆண்டு வரை, நாடு முழுவதும் 4,80,652 எண்ணிக்கையிலான விபத்துகள் சாலையில் நடைபெற்றிருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, நடைபெற்ற விபத்துகளில் 1,50,785 பேரின் உயிர்கள் பரிபோகியிருப்பதாகவும், மேலும் 4,94,624 பேர் கடுமையான பின் விளைவுகளைச் சந்தித்திருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.

2017-18 முதலான விபத்துகுறித்த புள்ளி விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால், இது கடந்த காலங்களைக் காட்டிலும் அதிகரித்திருக்கலாம் என கூறப்படுகின்றது. அதேசமயம், மேற்கூறிய புள்ளி விவரங்கள் பதிவு செய்யப்பட்ட சம்பவங்களின் தகவலாகும். இதைத்தவிர, பதிவு செய்யப்படாத விபத்துகளும் நாட்டில் அதிகளவில் அரங்கேறியுள்ளன. அவற்றை, புள்ளி விவரங்களுடன் சேர்த்தால், முன்னதாக வெளியாகியிருக்கும் எண்ணிக்கையை அது மிஞ்சுவிடும் என கூறப்படுகின்றது.

இவ்வாறு, விபத்தின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் நிலையில், சாலையில் இயக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையும் தினம் தினம் அதிகரித்து வருகின்றது. ஆகையால், வரும் காலங்களில் விபத்தின் எண்ணிக்கையும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
இதன்காரணமாக, விபத்து நிகழும் இடங்களைக் கண்டறிந்து, அப்பகுதியை கூடுதல் பாதுகாப்பு நிறைந்த பகுதியாக மாற்றும் முயற்சியாக சாலை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சகம் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

இதற்கான நிதியினை உலக வங்கிகளிடம் இருந்து பெற இருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இந்த நிதி சாலையமைக்கும் பட்ஜெட்டுடன் குழப்பத்தை ஏற்படுத்தாது எனவும் அவர் தெரிவித்தார். ஆகையால், இந்த நிதி, விபத்து பகுதிகளை கண்டறிய தனியாக ஒதுக்கப்பட்டு, அந்த இடங்களில் இனி விபத்து நடைபெறாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

நாடு முழுவதிலும் விபத்தினை ஏற்படுத்தும் விதமாக லட்ச கணக்கிலான இடங்கள் இருக்கின்றன. இருப்பினும், முக்கிய நகரங்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட பகுதிகளில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட இருப்பதாக கூறப்படுகின்றது. அதேசமயம், இந்த கறுப்பு இடங்களை எவ்வாறு அடையாளம் கண்டு, அவற்றை எவ்வாறு அரசாங்கம் மேம்படுத்த திட்டமிட்டுள்ளது என்பதுகுறித்த தகவல் இதுவரை தெளிவாக வெளிப்படுத்தவில்லை.


Click it and Unblock the Notifications








