150சிசி-க்கும் குறைவான பைக், ஸ்கூட்டர்களுக்கு தடை விதிக்க அரசு திட்டம்...? வருகிறது புதிய ஆபத்து...!
இந்திய அரசு, 150சிசி-க்கும் குறைவான பைக் மற்றும் ஸ்கூட்டர்களுக்கு தடை விதிக்க இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதுகுறித்த முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.

அண்மைக் காலங்களாக இந்தியாவில் உள்ள பெரும் நகரங்கள் சந்தித்து வரும் முக்கிய பிரச்னைகளில் ஒன்றாக சுற்றுப்புழச் சூழல் மாசு இருந்து வருகின்றது. இதனால், பொதுமக்கள் பல்வேறு பிரச்னைகளைச் சந்திக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆகையால், இதுபோன்ற இன்னல்களைக் கணிசமாக குறைக்கும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

அதனடிப்படையில், 150சிசி-க்கும் குறைவான இருசக்கர வாகனங்களின் உற்பத்திக்கு தடைசெய்ய இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில இணைதயளம் வெளியிட்டுள்ளது. அந்தவகையில், எலக்ட்ரிக் அல்லாத மூன்று சக்கர வாகனங்களை வருகின்ற 2023ஆம் ஆண்டு முதலும், எலக்ட்ரிக் அல்லாத மற்றும் 150 சிசிக்கும் குறைவான திறனைப் பெற்ற பைக் மற்றும் ஸ்கூட்டர்களின் விற்பனையை வருகின்ற 2025ம் ஆண்டு முதல் இந்திய அரசு தடைசெய்ய உள்ளது.

இந்த இரண்டு விதமான வாகனங்கள்தான் தற்போது இந்தியாவில், 2.1 கோடிக்கும் அதிகமான அளவில் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆகையால், இவையே பல்வேறு முக்கியச் சாலைகளில் ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்றன. இதனால், இவற்றின் பயன்பாட்டைக் குறைத்துவிட்டாலே போக்குவரத்து நெரிசல், மாசடைதல் உள்ளிட்ட பெரும்பாலான பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும் என்ற நோக்கில், இந்த புதிய திட்டம் குறித்த ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

ஆனால், இந்த புதிய விதி ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் 150 சிசிக்கும் குறைவான வாகனங்களுக்குப் பொருந்ததாது. அதேபோன்று, இறுதி நாளுக்கு முன்னதாக வாகனங்களை வாங்குபவருக்கும் இந்த புதிய விதி பாதிப்பினை ஏற்படுத்தாது. ஆனால், இந்த காலகெடுவிற்கு பின்னர் மேற்குறிப்பிட்ட வாகனங்களின் விற்பனை மட்டும் முழுமையாக தடுக்கப்படும் என கூறப்படுகிறது.

இந்த புதிய விதி அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வருமேயானால், 2025ம் ஆண்டிற்கு பிறகு பெட்ரோலால் இயங்கும் வாகனங்களின் பயன்பாடு தவிர்க்கப்பட்டு, பேட்டரியால் இயங்கும் பைக், ஸ்கூட்டர், ஆட்டோக்கள் மட்டுமே அதிகம் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, சுற்றுப்புறச் சூழல் மாசினை தவிர்க்கும் விதமாக, பிஎஸ்-6 தரத்திற்கு குறைவான வாகனங்களை உற்பத்தி செய்யவோ, விற்கவோக் கூடாது என்ற விதியை இந்திய அரசு வருகின்ற 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து அமல்படுத்த உள்ளது.

இந்நிலையில், மீண்டும் ஓர் அதிரடி நடவடிக்கையாக 150 சிசி பைக், ஸ்கூட்டர் மற்றும் எலக்ட்ரிக் அல்லாத ஆட்டோக்களுக்கு எதிராக இந்திய அரசு மேற்கொள்ள இருக்கின்றது. இதேபோன்று, நகரப்பேருந்து, பள்ளி மற்றும் கல்லூரிகளில் இயக்கப்படும் எரிபொருள் பேருந்துகளுக்கும் தடை விதிக்கவும் இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால், இவற்றின் பயன்பாட்டிலும் எலக்டிரிக் வாகனங்களின் பயன்பாடு திணிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையில் வாகன உற்பத்தியாளர்களுக்கு எந்தவொரு சலுகையும் வழங்கப்படாது என்ற முடிவில், கராராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், பேட்டரியை தயாரிக்கும் உற்பத்தியாளர்களுக்கு மட்டும் சலுகை வழங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








