டோல்கேட் விஷயத்தில் மோடி அரசு எடுத்த அதிரடி முடிவு இதுதான்... எதிர்பாராத அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்
டோல்கேட் விஷயத்தில் யாரும் எதிர்பார்க்காத சில அதிரடியான நடைமுறைகளை மத்திய அரசு வெகு விரைவில் அமலுக்கு கொண்டு வரவுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் டோல்கேட்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் எவ்வித அடிப்படை வசதிகளையும் செய்யாமல், டோல்கேட்களில் கட்டண கொள்ளை அரங்கேற்றப்படுவதாக வாகன ஓட்டிகள் நீண்ட காலமாக பல்வேறு புகார்களை தெரிவித்து வருகின்றனர். அத்துடன் அரசு வகுத்துள்ள விதிமுறைகளும் பின்பற்றப்படுவதில்லை என்ற புகாரும் உள்ளது.

எனவே சுங்கச்சாவடி என்றாலே வாகன ஓட்டிகளுக்கு அதிருப்திதான் நிலவி வருகிறது. சில சமயங்களில் டோல்கேட்களில் கட்டணம் செலுத்தி விட்டு செல்ல நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழலும் ஏற்படும். குறிப்பாக வார விடுமுறை மற்றும் நீண்ட கால பண்டிகை விடுமுறைகள் தொடங்கும் மற்றும் முடியும் சமயங்களில், டோல்கேட்களில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நிற்கும்.

அப்போது கட்டணம் செலுத்தி விட்டு, டோல்கேட்டை கடந்து செல்ல நீண்ட நேரம் ஆகும். இதுவும் கூட வாகன ஓட்டிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. எனவே இந்த பிரச்னையை தவிர்ப்பதற்காக பாஸ்ட்டேக் (Fastag) திட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. பாஸ்ட்டேக் திட்டம் கடந்த 2014ம் ஆண்டு முதல் முறையாக சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டது.

அப்போது குஜராத் மாநிலம் அகமதாபாத் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் பாஸ்ட்டேக் திட்டம் சோதித்து பார்க்கப்பட்டது. இதன்பின் இந்தியா முழுவதும் படிப்படியாக பல்வேறு டோல்கேட்களிலும் பாஸ்ட்டேக் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. டோல்கேட்களை விரைவாக கடந்து செல்ல பாஸ்ட்டேக் உதவுகிறது.

பாஸ்ட்டேக் என்பது ஒரு எலெக்ட்ரானிக் அட்டை ஆகும். இதனை உங்கள் தேவைக்கு ஏற்ப பணம் செலுத்தி நீங்கள் ரீசார்ஜ் செய்து கொள்ள கொள்ளலாம். நீங்கள் ஒவ்வொரு டோல்கேட்டை கடக்கும்போதும், அதற்குரிய கட்டணம் இதில் இருந்து கழித்து கொள்ளப்படும். இதற்கு முதலில் நீங்கள் பாஸ்ட்டேக் அட்டையை வாங்கி, உங்கள் வாகனத்தின் முன்பக்க கண்ணாடியில் பொருத்தி கொள்ள வேண்டும்.

பின்னர் நீங்கள் ஒரு சுங்கச்சாவடியில் நுழையும்போது, அங்குள்ள இயந்திரம் இதனை ஸ்கேன் செய்யும். இதன் மூலம் உங்கள் வருகை பதிவு செய்யப்பட்டு, அதற்குரிய கட்டணம் கழித்து கொள்ளப்படும். இதற்கென டோல்கேட்களில் தனியாக பாஸ்ட்டேக் லேன் வழங்கப்பட்டிருக்கும். நீங்கள் பாஸ்ட்டேக் அட்டையை பெற்றிருந்தால், மற்ற வாகன ஓட்டிகளை போல் கட்டணம் செலுத்த வரிசையில் நிற்க தேவையில்லை.

பாஸ்ட்டேக் லேனில் நுழைந்து சென்று கொண்டே இருக்கலாம். இதன் மூலம் டோல்கேட்களில் நெரிசல் குறையும். அத்துடன் வாகன ஓட்டிகள் கட்டணம் செலுத்த காத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லாமல் போகிறது. எனவே பாஸ்ட்டேக் அட்டையை பயன்படுத்துவதை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ரொக்க பரிவர்த்தனைகளை குறைத்து விட்டு அதற்கு பதிலாக டிஜிட்டல் பரிவர்த்தனைகளைதான் ஊக்குவித்து வருகிறது. பாஸ்ட்டேக் திட்டத்தில் டிஜிட்டல் முறையில் பண பரிவர்த்தனை நடப்பதும் மத்திய அரசு இதனை ஊக்குவிக்க ஒரு காரணம் என்றும் சொல்லலாம்.

பாஸ்ட்டேக் முறையில் நீங்கள் பணம் செலுத்தினால், கையில் ரொக்கம் வைத்திருக்க வேண்டிய அவசியமும் கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது. தேவைப்படும் சமயங்களில் குறைந்தபட்சம் 100 ரூபாய் முதல் அதிகபட்சமாக 1 லட்ச ரூபாய் வரை பாஸ்ட்டேக் அட்டைக்கு நீங்கள் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

தற்போதைய நிலையில் ஒவ்வொரு டோல்கேட்டிலும் 2 பிரத்யேகமான பாஸ்ட்டேக் லேன்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் பாஸ்ட்டேக் முறைக்கு இந்தியாவில் வாகன ஓட்டிகள் பெரிய அளவில் வரவேற்பு வழங்கவில்லை என்பதே உண்மை. தற்போதைய நிலையில் டோல்கேட்களில் நடைபெறும் மொத்த பரிவர்த்தனைகளில் 20 சதவீதத்திற்கும் குறைவாகவே பாஸ்ட்டேக் மூலமாக மேற்கொள்ளப்படுகிறது.

இதன் காரணமாக டோல்கேட்களில் நெரிசலும் எதிர்பார்த்த அளவிற்கு குறைந்தபாடில்லை. எனவே பாஸ்ட்டேக் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு அதிரடியான மாற்றங்களை செய்யவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் ஒரு பகுதியாக ரொக்க பணம் செலுத்தி விட்டு செல்லும் லேன்களின் எண்ணிக்கையை குறைக்க இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே நீங்கள் ரொக்கமாக பணம் செலுத்தி விட்டு டோல்கேட்டை கடப்பவர் என்றால், நீங்கள் காத்திருக்க வேண்டிய நேரம் இன்னும் அதிகமாகும். அதே சமயம் பாஸ்ட்டேக் அட்டையுடன் கூடிய வாகனங்கள் மட்டும் செல்லும் பிரத்யேகமான லேன்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்மூலம் நீங்கள் பாஸ்ட்டேக் திட்டத்தில் இணைந்திருந்தால், நீங்கள் விரைவாக டோல்கேட்டை கடந்து விட முடியும். கிட்டத்தட்ட பாஸ்ட்டேக் திட்டத்தில் இணைந்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் வாகன ஓட்டிகளுக்கு இதன் மூலம் ஏற்படுத்தப்படுகிறது என்றும் கூட சொல்லலாம். அத்துடன் பாஸ்ட்டேக்கை ஊக்குவிப்பதற்காக இன்னும் சில முயற்சிகளும் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிகிறது.

இதன்படி பாஸ்ட்டேக் உள்ள வாகனங்களுக்கு ஒரு வகையான கட்டணமும், பாஸ்ட்டேக் இல்லாத வாகனங்களுக்கு ஒரு வகையான கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ET Auto செய்தி வெளியிட்டுள்ளது. அனேகமாக பாஸ்ட்டேக் உள்ள வாகனங்களுக்கு குறைவான கட்டணமும், பாஸ்ட்டேக் இல்லாத வாகனங்களுக்கு சற்று அதிகமாக கட்டணமும் நிர்ணயம் செய்யப்படலாம்.

இந்தியாவில் உள்ள டோல்கேட்களை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வரும் சூழலில், இப்படியான ஒரு திட்டத்தை கொண்டு வந்தால், அதற்கு எதிர்ப்புகளும் எழும் என்பதை மறுக்க முடியாது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ''விதிகளில் திருத்தம் செய்ய அரசாங்கத்திற்கு அதிகாரம் உள்ளதுதான். ரொக்க பண பரிவர்த்தனைகளை ரத்தும் கூட செய்து விட முடியும்.

ஆனால் ரூபாய் கொடுத்து எந்தவொரு சேவையையும் பெற முடியும் என்பது சட்டப்பூர்வமானது. அப்படி இருக்கையில் இப்படி ஒரு மாற்றத்தை கொண்டு வந்தால், அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. எனவே தற்போது இத்தகைய திட்டங்கள் ஆலோசனை நிலையில் உள்ளன'' என்றனர்.

என்றாலும் இந்த திட்டங்களை அமலுக்கு கொண்டு வருவதில் அரசு மிகவும் ஆர்வத்துடன் இருப்பதாகவே தெரிகிறது. எனவே இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் வாகன ஓட்டிகளுக்கு சற்று அவகாசம் கொடுத்து, அடுத்த மூன்று முதல் நான்கு மாதங்களுக்குள் நடைமுறைக்கு கொண்டு வரப்படலாம் என கூறப்படுகிறது.

டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் பல்வேறு நன்மைகள் இருந்தாலும் கூட, ஒரு சில குளறுபடிகளும் இருக்கவே செய்கின்றன. அத்துடன் பல்வேறு மோசடிகளும் அரங்கேறுகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழகத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் இதற்கு ஓர் உதாரணம். சம்பவத்தன்று பாஸ்ட்டேக் திட்டத்தில் இணைந்திருந்த ஒருவருடைய மூன்று லாரிகள் தமிழகத்தில் நின்று கொண்டிருந்தன.

ஆனால் அவை ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு டோல்கேட்டை கடந்ததாக கூறி, அதன் பாஸ்ட்டேக் கணக்கில் இருந்து கட்டணம் பிடித்தம் செய்யப்பட்டது. இதுவே ரொக்கமாக பணம் செலுத்துவது என்றால், இத்தகைய குளறுபடிகளுக்கு வேலையில்லை. இதுபோன்ற காரணங்களாலும் பாஸ்ட்டேக் திட்டம் வாகன உரிமையாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகிறது என்பதை மறுப்பதற்கில்லை.


Click it and Unblock the Notifications








