ஆள் யார்னு தெரியாம வேலையை காட்டிய போலீஸ்! இப்ப ஊரே சிரிக்கற மாதிரி ஆயிருச்சு! எல்லாரும் போட்டு பொளக்கறாங்க!
உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு தற்போது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணத்தை கேட்டால், விழுந்து விழுந்து சிரிப்பீர்கள். ஹெல்மெட் அணியவில்லை என்பதற்காகவே அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் சிரிக்க என்ன இருக்கிறது? என நீங்கள் நினைப்பது புரிகிறது.
பாதிக்கப்பட்ட பெண் ஓட்டியது டூவீலர் அல்ல. கார்! கடந்த ஜூன் 27ம் தேதியன்று நொய்டாவின் ஹோசியர்பூர் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் கார் ஓட்டியதாக கூறி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஷைலஜா சௌத்ரி என்ற பெண்தான், இந்த குளறுபடியால் பாதிக்கப்பட்டவர் ஆவார். இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

கௌதம புத்தா நகர் போக்குவரத்து காவல் துறையிடம் இருந்து 1,000 ரூபாய் அபராதத்திற்கான இ-சலான் இவருக்கு வந்துள்ளது. இங்கே குறிப்பிட வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், ஷைலஜா சௌத்ரியின் பெயரில் டூவீலர் எதுவுமே இல்லை! இ-சலானுக்கான மெசேஜில், ஷைலஜா சௌத்ரியின் காருடைய பதிவு எண் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் பைக் ஒன்றின் புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஷைலஜா சௌத்ரி கூறுகையில், ''போக்குவரத்து காவல் துறையிடம் இருந்து எனது செல்போனுக்கு மெசேஜ் வந்தது. எனது வீட்டிற்கு வந்த உறவினர்கள் யாராவது எனது காரை ஓட்டும்போது போக்குவரத்து விதிமுறைகளை மீறியிருக்கலாம் என்றுதான் முதலில் நினைத்தேன்.

ஆனால் மெசேஜை திறந்து பார்த்தபோது நான் அதிர்ச்சியடைந்தேன். ஏனெனில் எனது காரின் பதிவு எண்ணை குறிப்பிட்டு, ஒரு பைக்கின் புகைப்படம் இணைக்கப்பட்டிருந்தது. அத்துடன் ஜூன் 27ம் தேதி காலை 8.29 மணிக்கு ஹெல்மெட் அணியாமல் கார் ஓட்டியதற்காக அபராதம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இ-சலானில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில், அந்த நேரத்தில் நான் காரையும் ஓட்டவில்லை.
இது முழுக்க முழுக்க போக்குவரத்து காவல் துறையின் தவறு. எனவே எனக்கு விதிக்கப்பட்ட இ-சலானை ரத்து செய்ய வேண்டும்'' என்றார். இதுகுறித்து போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், ''ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை அமைப்பு சில சமயங்களில், வாகனங்களின் பதிவு எண்ணை தவறாக படித்து விடுவதால், இத்தகைய சம்பவங்கள் நிகழ்ந்து விடுகின்றன.
ஆன்லைன் மூலமாகவோ அல்லது எங்களது அலுவலகத்திற்கு நேரடியாக வருவதன் மூலமாகவோ இது தொடர்பான புகார்களை வாகன ஓட்டிகள் பதிவு செய்ய முடியும். இதுபோன்ற தவறுகள் எதிர்காலத்தில் நிகழ கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு எங்களுக்கும் உள்ளது. அதனை நாங்களும் உணர்ந்துள்ளோம்'' என்றார். இந்த சம்பவத்திற்கு சமூக வலை தளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இ-சலான் முறை அமல்படுத்தப்பட்ட பின்பு இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பது என்பது சர்வ சாதாரணமான ஒரு விஷயமாக மாறி விட்டது. ஹெல்மெட் அணியாமல் கார் ஓட்டியதற்காக அபராதம், சீட் பெல்ட் அணியாமல் பைக் ஓட்டியதற்காக அபராதம் என ஏகப்பட்ட குளறுபடிகள் நடைபெறுகின்றன. இதனை போக்குவரத்து காவல் துறையினர் உடனடியாக சரி செய்ய வேண்டும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இங்கே 2 விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும். முதலில் தவறாக இ-சலான் வழங்குவதை தடுக்க போக்குவரத்து காவல் துறையினர் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மற்றொன்று சாலையில் காவல் துறை அதிகாரிகள் யாரும் இல்லை என்பதற்காக போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கானது.
தற்போதைய சூழலில் சாலையில் காவல் துறை அதிகாரிகள் யாரும் இல்லாவிட்டாலும் கூட, கேமராக்கள் உங்களை கண்காணித்து கொண்டுதான் இருக்கும். நீங்கள் விதிமுறைகளை மீறினால், நேரடியாக உங்களுக்கு இ-சலான் வழங்கப்பட்டு விடும். இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களிலும் இந்த நடைமுறை அமலுக்கு வந்து விட்டது என்பதை மனதில் வைத்து கொண்டு செயல்படுங்கள். (குறிப்பு: இந்த செய்தியில் படங்கள் உதாரணத்திற்காக வழங்கப்பட்டவை ஆகும்).


Click it and Unblock the Notifications








