இனி 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட வேண்டியதில்லை... 65 ரூபாய் போதும்... அதிரடி காட்ட போகும் ஒன்றிய அரசு!
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஆட்டோமொபைல் நிறுவனங்கள் 100 சதவீத உயிரி எரிபொருட்கள் மூலம் இயங்கும் வாகனங்களை வழங்க வேண்டும் என்பதை அடுத்த 6 மாதங்களில் ஒன்றிய அரசு கட்டாயமாக்கவுள்ளது. சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சரான நிதின் கட்காரி இந்த தகவலை நேற்று (ஆகஸ்ட் 31) தெரிவித்தார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இந்த நடவடிக்கை பயனுள்ளதாக இருக்கும் எனவும் அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார். ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு வாடிக்கையாளர்கள் 110 ரூபாயை செலுத்தும் நிலையில், ஒரு லிட்டர் பயோ எத்தனாலின் விலை 65 ரூபாய் எனும்போது, அது நிச்சயம் பயன் தரும் என்பதையும் அமைச்சர் நிதின் கட்காரி குறிப்பிட்டார்.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் நிதின் கட்காரி, ''ஃப்ளக்ஸ் இன்ஜின் விதிமுறைகளுக்கு ஏற்ற வாகனங்களை வழங்குவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். நாங்கள் முடிவு எடுத்துள்ளோம். அதனை கட்டாயமாக்குவோம். இதன் மூலம் ஃப்ளக்ஸ் இன்ஜின் வாகனங்கள் இங்கே இருக்கும்'' என்றார். அமைச்சர் நிதின் கட்காரியின் இந்த பேச்சு தற்போது கவனம் பெற்றுள்ளது.

உலகிலேயே கச்சா எண்ணெய்யை அதிகமாக இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் இருப்பது அனேகமாக நம் அனைவருக்கும் தெரியும். இது இந்தியாவிற்கு பொருளாதார ரீதியில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. எனவே கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க வேண்டும் என இந்தியா விரும்புகிறது.

இதன் ஒரு பகுதியாகதான் மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை ஒன்றிய அரசு தற்போது ஊக்குவித்து வருகிறது. கரும்பு, உருளை கிழங்கு மற்றும் மக்காச்சோளம் போன்றவற்றில் இருந்து எத்தனால் தயாரிக்கப்படுகிறது. எனவே எத்தனால் பயன்பாட்டை அதிகரிப்பது இந்திய விவசாயிகளுக்கும் நன்மை அளிக்க கூடியதாக இருக்கும்.

இதற்கிடையே இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தியும் வேகமாக அதிகரித்து வருவதாக அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். அடுத்த ஓராண்டில் இந்திய சாலைகளில் எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என மதிப்பிட்டுள்ளதாகவும் அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.

அத்துடன் அடுத்த 5 ஆண்டுகளில் உலகின் முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தி மையமாக இந்தியா மாற வேண்டும் என தான் விரும்புவதாகவும் அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். உலகிற்கு அனைத்து வகையான எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களையும் இந்தியா வழங்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக அமைச்சர் நிதின் கட்காரி கூறியதை போல், இந்திய சாலைகளில் வெகு விரைவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை பெரும் அளவில் உயரும் என நாம் எதிர்பார்க்கலாம். தற்போது ஏராளமான எலெக்ட்ரிக் வாகனங்கள் தொடர்ச்சியாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு வருவதே இதற்கு சாட்சியாக உள்ளது.

கடந்த சில நாட்களில் மட்டும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் என ஏராளமான எலெக்ட்ரிக் வாகனங்கள் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. வரும் காலங்களில் இன்னும் ஏராளமான எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளன.

இதில், டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக், மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக், எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் காரின் சிறிய பேட்டரி பொருத்தப்பட்ட புதிய மாடல் ஆகிய எலெக்ட்ரிக் கார்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. தற்போது அனைத்து நிறுவனங்களும் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து வருகின்றன.

எலெக்ட்ரிக் வாகனங்கள்தான் எதிர்காலம் என்பதே இதற்கு காரணம். ஒன்றிய அரசின் ஃபேம் இந்தியா திட்டம், மாநில அரசுகளின் எலெக்ட்ரிக் வாகன கொள்கைகள் ஆகியவை இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உதவி செய்து வருகின்றன. இதன் மூலம் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும் என்பது கூடுதல் சிறப்பம்சம்.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்னையானது, எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவது தொடர்பாக மக்களை சிந்திக்க வைத்துள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் மானியங்களும் இதற்கு தூண்டுகோலாக அமைந்துள்ளன. மானியங்கள் வழங்குவதுடன் நின்று விடாமல், சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அரசுகள் முயன்று வருகின்றன.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








