வாகனம் வைத்திருக்க இப்படியும் கெடுபிடி போடுறாங்க.. விதிமீறிய 100 வாகனங்கள் கொத்தாக பறிமுதல்..
பார்க்கிங் செய்வதற்கான இட வசதி உள்ளது என்பதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்தால் மட்டுமே புதிய வாகனங்களை வாங்க முடியும் என்ற கடுமையான சட்டம் அமலாகவுள்ளது.
பார்க்கிங் செய்வதற்கான இட வசதி உள்ளது என்பதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்தால் மட்டுமே புதிய வாகனங்களை வாங்க முடியும் என்ற கடுமையான சட்டம் அமலாகவுள்ள சூழலில், அனுமதியற்ற இடங்களில் பார்க்கிங் செய்யப்பட்டிருந்த 100 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. 2017-18ம் நிதியாண்டில் மட்டும் நம் நாட்டில், 32,87,965 உள்நாட்டு பயணிகள் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இதற்கு முன்பாக ஒரே நிதியாண்டில் இவ்வளவு அதிக வாகனங்கள் விற்பனையானது இல்லை.

குறிப்பாக சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி, கொல்கத்தா போன்ற பெரு நகரங்களில், வாகனங்களின் எண்ணிக்கை முன் எப்போதையும் விட கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. ஆனால் அதற்கு ஏற்ப சாலைகள் விரிவாக்கம் செய்யப்படுகின்றனவா? புதிய சாலைகள் அமைக்கப்படுகின்றனவா? என்பது கேள்விக்குறியே.

பெரு நகரங்களில் போதிய இட வசதி இல்லாததன் காரணமாக, சாலை ஓரங்களிலேயே சிலர் தங்கள் வாகனங்களை பார்க்கிங் செய்கின்றனர். அவ்வாறு பார்க்கிங் செய்யப்படும் வாகனங்கள் சாலையை அடைத்து விடுவதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இந்த பிரச்னைக்கு முடிவு கட்டுவதற்காக, அதிகாரிகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இதன்படி பார்க்கிங் செய்வதற்கான போதிய இட வசதி இருந்தால் மட்டுமே, புதிய வாகனங்களை ரிஜிஸ்டர் செய்ய முடியும் என்ற சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் இந்த விஷயத்தில் கர்நாடக அரசு நாலு கால் பாய்ச்சலில் சென்று கொண்டிருக்கிறது. ஆம், நாளுக்கு நாள் வேகமாக முன்னேற்றம் கண்டு வரும் அம்மாநில தலைநகர் பெங்களூருவில், போக்குவரத்து நெரிசல் பிரச்னை பூதாகரமாக உருவெடுத்துள்ளது.

வாகனங்களை பார்க்கிங் செய்வதற்கான போதிய இட வசதி உள்ளது என்பதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்தால் மட்டுமே, பெங்களூரு பெரு நகர எல்லையில், புதிய வாகனங்களை சட்டப்பூர்வமாக ரிஜிஸ்டர் செய்ய முடியும். இந்த புதிய சட்டம் 2019ம் ஆண்டு முதல் அங்கு அமலுக்கு வருவது உறுதியாகியுள்ளது.

எனவே பெங்களூரு பெரு நகர எல்லையில், பார்க்கிங் செய்வதற்கான போதிய இட வசதி தங்களிடம் உள்ளது என்பதற்கான உரிய ஆதாரங்களை சமர்ப்பிப்பவர்கள் மட்டுமே புதிய வாகனங்களை வாங்க முடியும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

வருங்காலத்தில் இந்தியா முழுமைக்கும் பொருந்தக்கூடிய வகையில் இந்த சட்டம் அமல் செய்யப்படலாம் என பரவலாக எதிர்பார்க்கப்படும் சூழலில், அனுமதியற்ற இடங்களில் பார்க்கிங் செய்யப்பட்டிருந்த 100 வாகனங்களை பறிமுதல் செய்து அதிரடி காட்டியுள்ளது சண்டிகர் முனிசிபல் கார்ப்பரேஷன் (CMC).

வரையறை செய்யப்படாத இடங்களில் வாகனங்களை பார்க்கிங் செய்வதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து, சண்டிகர் முனிசிபல் கார்ப்பரேஷன் அதிகாரிகளுக்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்து கொண்டே இருந்தன. எனவே அதிகாரிகள், பல்வேறு குழுக்களாக பிரிந்து, தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கீகரிக்கப்படாத இடங்களில் பார்க்கிங் செய்யப்பட்டிருந்த 57 கார்கள் மற்றும் 43 டூவீலர்கள் என மொத்தம் 100 வாகனங்கள் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன் அந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து, அதற்கான ரசீதுகளும் வழங்கப்பட்டன.

அத்துடன் எங்கெல்லாம் வாகனங்களை பார்க்கிங் செய்யக்கூடாது என்பதை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில், நோ பார்க்கிங் போர்டு வைக்கும் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அந்த இடங்களில் இருந்து வாகன உரிமையாளர்கள் விலகி நிற்பதே சிறந்தது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்


Click it and Unblock the Notifications








