இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களை பதிவு செய்யும் பணிகள் நிறுத்தம்? அமைச்சர் சொன்ன பதில் இதுதான்!
பெட்ரோல், டீசல் வாகனங்களை பதிவு செய்யும் பணிகளை அரசு நிறுத்த போகிறதா? என்பதற்கு அமைச்சர் நிதின் கட்காரி விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதை அரசு ஊக்குவிக்கும் என ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். அத்துடன் எத்தனால், பயோ-எல்என்ஜி மற்றும் பசுமை ஹைட்ரஜன் ஆகிய மாற்று எரிபொருட்களின் பயன்பாட்டையும் அரசு ஊக்குவிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் இந்த காரணத்திற்காக ஐசி இன்ஜின் (Internal Combustion Engine - ICE) வாகனங்களை பதிவு செய்யும் பணிகள் நிறுத்தப்படாது எனவும் அமைச்சர் நிதின் கட்காரி விளக்கம் அளித்துள்ளார். ஐசிசி (Indian Chamber of Commerce - ICC) ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது அமைச்சர் நிதின் கட்காரி இந்த தகவல்களை தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியின்போது, விமான எரிபொருளில் 50 சதவீதம் எத்தனால் பயன்படுத்துவதற்கும் தான் முயற்சி செய்து வருவதாக நிதின் கட்காரி குறிப்பிட்டார். இதுகுறித்து அமைச்சர் நிதின் கட்காரி கூறுகையில், ''எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதை நாங்கள் ஊக்குவிக்கிறோம். எத்தனால், பயோ-எல்என்ஜி மற்றும் பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட மாற்று எரிபொருட்களின் பயன்பாட்டையும் ஆதரிக்கிறோம்.

ஆனால் எதையும் நாங்கள் நிறுத்த போவதில்லை'' என்றார். இங்கே எதையும் நிறுத்த போவதில்லை என்பதற்கு, ஐசி இன்ஜின் வாகனங்களை நிறுத்த போவதில்லை என்பதுதான் அர்த்தமாகும். இதற்கிடையே மக்கள் நல்ல வரவேற்பை வழங்கி வருவதால், எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை உயர்ந்து வருகிறது எனவும் அமைச்சர் நிதின் கட்காரி குறிப்பிட்டார்.

மேலும் 250 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்கள் தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், இதன் காரணமாக எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை குறையும் எனவும் அமைச்சர் நிதின் கட்காரி கூறினார். எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை குறையும் என்பது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும்.

ஏனெனில் தற்போது பெட்ரோல், டீசல் விலை அதிகமாக இருப்பதால், எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கு பலர் விரும்புகின்றனர். அத்துடன் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கூட எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவதைதான் நோக்கமாக கொண்டுள்ளனர். ஏனெனில் அவை சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.

ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகமாக உள்ளதால், அவற்றை பொதுமக்கள் வாங்குவதில் பிரச்னை ஏற்படுகிறது. எனவே எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை குறைந்தால், இன்னும் அதிகம் பேர் அவற்றை பயன்படுத்துவார்கள். இது இந்தியாவின் காற்று மாசுபாடு பிரச்னை குறைவதற்கும் உதவி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதன் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதியையும் குறைக்க முடியும். வெளிநாடுகளில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்யின் அளவை குறைக்க வேண்டும் என்பதுதான் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமைச்சர் நிதின் கட்காரி போன்றவர்களின் கனவாக உள்ளது. இந்த கனவு நிறைவேற எலெக்ட்ரிக் வாகனங்கள் உதவியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








