ரேபிடோவிற்கு ஆப்பு வைக்க போறாங்க! இனி லைசென்ஸ் எடுத்தாதான் ஆன்லைன் கேப் சேவையை வழங்க முடியும்!
இந்தியாவில் ரேபிடோ பைக் டாக்ஸி அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இது மோட்டார் வாகன சட்டத்திற்கு விரோதமான ஒரு விஷயம். இந்நிலையில் டில்லி அரசு கேப் அக்ரிகேட்டர்களுக்கான புதிய பாலிசியை கொண்டு வரப்போவதாக அம்மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இது குறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் கேப் துறையில் மிகப்பெரிய புரட்சியே நடந்துள்ளது. ஒரு முறைசாரா துறையாகச் செயல்பட்டு வந்த நிலையில் ஓலா, உபேர் போன்ற கார்பரேட் நிறுவனங்கள் களத்தில் இறங்கி இந்த துறையில் தொழிற்நுட்பத்தை புகுத்தி வாடிக்கையாளருக்கும் கேப் வைத்திருப்பவருக்கும் இடையேயான பாலத்தை அமைத்தது. இதன் மூலம் மக்கள் எளிதாக கேப்களை புக் செய்து ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாகச் செல்ல முடிகிறது.

இந்தியாவில் பெரு நகரங்களில் இந்த கேப் சேவை ஒரு முக்கிய அடிப்படைத் தேவையாகவே மாறிவிட்டது. இந்நிலையில் இந்த கேப் சேவையை விடக் குறைவான விலையில் சில நிறுவனங்கள் பைக் டாக்ஸி சேவையை அறிமுகப்படுத்தி வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். ரேபிடோ போன்ற நிறுவனங்கள் இதைச் சிறப்பாகச் செய்துள்ளது. ஆனால் இப்படியாகச் சொந்த பயன்பாட்டிற்காக வாகனங்களைப் பதிவு செய்துவிட்டு அதை வைத்து கேப் சர்வீஸ் போல நடத்திச் சம்பாதிப்பது சட்ட விரோதமாகும்.
இந்நிலையில் டில்லி அரசு அம்மாநில பகுதிகளில் பைக் கேப் சர்வீஸ் நடத்துவது குறித்து சமீபத்தில் ஒரு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ஆனால் அதற்கு பின்னும் டில்லியில் பைக் டாக்ஸி சேவை தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் அம்மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கேலாத் கேப் அக்கிரி கேட்டார்களுக்கான புதிய பாலிசி ஒன்றை உருவாக்க முடிவு செய்துள்ளார்.
இது குறித்து அவர் சமூகவலைத்தளங்களில் செய்த பதிவுகளில் 2,3 மற்றும் 4 சக்கர வாகனங்களுக்கான ஆக்ரிகேட்டர் பாலிசி விரைவாகத் தயாராகி வருகிறது. டில்லியில் அக்ரிகேட்டராக தொழில் நடத்த லைசென்ஸ் பெறும் நடைமுறை புதிய பாலிசியின் கீழ் அமலுக்கு வரவுள்ளது. 2 வீலர்கள் போக்குவரத்து பயன்பாட்டிற்கு அல்லாத வாகனமாகப் பதிவு செய்துவிட்டது. அதை பயணிகளை ஏற்றிச் சென்று கொண்டு விடுவது சட்ட விரோதமானது.
இப்படியான கமர்ஷியல் பயன்பாட்டிற்கு அதைப் பயன்படுத்துவது மோட்டார் வாகன சட்டப்படி சட்ட விரோதமானது. இப்படியாகச் செயல்படும் டூவீலர் உரிமையாளர்களுக்கு ரூ5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் தொடர்ந்து இதே தவற்றைச் செய்தால் ரூ10 ஆயிரம் அபராதம் மற்றும் 1 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் அந்த டூவீலரை ஓட்டி வந்தவரின் லைசென்ஸ் 3 மாதங்களுக்கு சஸ்பென்ட் செய்யப்படும் என தெரிவித்தார்.
இப்படியா பைக் டாக்ஸி மீது நடவடிக்கை எடுத்த மாநிலங்களில் டில்லியும் தற்போது இணைந்துள்ளது. முன்னர் மகாராஷ்டிரா மாநில அரசு ரேபிடோவிற்கு லைசென்ஸ் வழங்குவது குறித்து முடிவு செய்தது. ஆனால் சுப்ரீம் கோர்ட் அந்த விவகாரத்தில் தலையிட்டு மோட்டார் வாகன சட்டத்தில் இல்லாத ஒரு விஷயத்தை மாநில அரசுகள் செய்யக்கூடாது என அதைத் தடுத்து நிறுத்தியது. தற்போது டில்லி அரசும் கிட்டத்தட்ட அதே முயற்சியில் இறங்கியுள்ளது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








