இனி சாலையிலும் ரயில்கள் பறக்கும்... ஆனால், இது வேற மாதிரியான ரயில்.. மத்திய அரசு புதிய திட்டம்..!
மத்திய அரசு, சாலை ரயில்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் மிகவும் புகழ்வாய்ந்த வர்த்தக போக்குவரத்து வாகனங்களில் ஒன்றாக சாலை ரயில்கள் உள்ளன.
இந்த ரயில்களை இந்தியாவில் நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கான பணிகளை மத்திய அரசு மேற்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை ஆட்டோ எகனாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.

சாலை ரயில் என்றால் சாலையின் குறுக்கே தண்டவாளம் அமைத்து ரயில்களை இயக்கும் முறையல்ல. இது ரயில் பெட்டிகளைப் போன்று ஒரு எஞ்ஜின் கொண்ட லாரியில் அடுத்தடுத்தாக சரக்கு கன்டெய்னர்களை ஏற்றிச் செல்லும் முறையாகும். இந்த முறையில், டிரக்கின் இழுவை திறனை வைத்து குறைந்தது இரண்டிற்கும் மேற்பட்ட கன்டெய்னர்களை ஒரே லாரியில் அனுப்பி வைக்கப்படும்.

இவ்வாறு, ஒரே போக்குவரத்து செலவில் பல மடங்கு சரக்குகள் பரிமாற்றப்படுவதால் அவற்றை கையாளும் தொகை கணிசமாக குறையும் வாய்ப்பு ஏற்படுகின்றது. இதன் எதிரொலியாக ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் விலையும் சற்றே குறைய சூழல் உருவாகின்றது.

இந்த புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவற்கான பணியில் தற்போது மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.
தொடர்ந்து, இந்த சாலை ரயில்கள் எளிதில் பயணிப்பதற்காக, சாலைகளை கூடுதல் வசதியுடையவையாக மாற்றும் பணிகளை அரசு செய்து வருகின்றது.

மேலும், மத்திய அரசு மட்டுமின்றி மாநில அரசுகளும் விரைவில் இந்த பணியை மேற்கொள்ளலாம் என தெரிகின்றது. அதன்படி, வாகனத்தின் உயரம், நீளம் மற்றும் அகலம் உள்ளிட்டவற்றிற்கு ஏற்பவாறு பசுமை எக்ஸ்பிரஸ் சாலைகள் அமைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்காக டெல்லியில் இருந்து மும்பை வரை 2,500 கிமீ அளவில் பசுமை வழி எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டிருக்கின்றது. அதேசமயம், இந்த சாலையை நாட்டில் இயங்கும் முக்கிய உற்பத்தி நிறுவனங்களை இணைக்கும் வகையில் உருவாக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் கூறப்பட்டுள்ளது.

இத்துடன், சாலை ரயில்கள்குறித்த வரைவு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, சாலை ரயில்கள் 25 மீட்டர் கொண்டதாகவும், அதிகபட்சமாக மூன்று கன்டெய்னர்களை மட்டுமே இழுத்துச் செல்லும் வகையில் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் நாட்டில் மேலும் கூடுதலாக லாகிஸ்டிக் ஹப்பிங் பாயிண்டுகள் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதேசமயம், இந்த சாலை ரயில்கள் முக்கியமான இரு முனை பரிமாற்றம் செய்யும் மையங்களுக்கு இடையில் மட்டுமே இயக்கப்பட உள்ளது. பின்னர், ஒரு கார்கோவில் பிற இடங்களுக்கு சிறிய ரக வாகனங்கள் மூலம் உரிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.

இந்த சாலை ரயில்கள் மற்ற நாடுகளில் மிக அதிக நீளம் கொண்டவையாக காணப்படுகின்றன. ஆனால், இந்தியாவின் அதிவேக நெடுஞ்சாலைகளில்கூட போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழல் உள்ளது. ஆகையால், மற்ற நாடுகளைக் காட்டிலும் குறுகிய நீளம் கொண்ட சாலை ரயில்களை பயன்பாட்டில் கொண்டு அரசு திட்டமிட்டுள்ளது.

இத்துடன், போக்குவரத்துத்துரை அமைச்சகம் மற்ற பேருந்து மற்றும் சிறிய ரக வாகனங்களின் பரிமாணங்களை மாற்றியமைக்கவும் பரிந்துரைத்துள்ளது. அந்தவகையில், தற்போதைய 3.8 மீட்டராக உள்ள உயரத்தை 3 மீட்டராக குறைக்க அமைச்சகம் முன்மொழிந்துள்ளது.


Click it and Unblock the Notifications








