டிரைவிங் லைசென்ஸ் எடுப்பது சுலபமாகபோகுது! ஆதார் கார்டு கூட தேவையில்லை!
இந்தியாவில் பொது மக்களுக்கு வழங்கப்படும் ஓட்டுநர் உரிமத்திற்காகக் கொடுக்கப்படும் ஆவணங்களின் எண்ணிக்கையை உயர்த்த மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் பொதுமக்களுக்கு வாகன ஓட்டுநர் உரிமம் வழங்கும் வேலையை மாநில அரசுகள் செய்து வருகின்றன. ஆனால் இந்த மாநில அரசுகளுக்கு ஆவணங்கள் சரிபார்ப்பது முதல் அதற்காகப் பயன்படுத்தப்படும் சாஃப்ட்வேர் உள்ளிட்டவை வரை அனைத்தையும் மத்திய அரசு வழங்கி இந்தியா முழுவதும் ஒருங்கிணைந்த ஓட்டுநர் உரிமம் குறித்த தகவல்களைக் கையாண்டு வருகிறது.

தற்போது இந்தியாவில் ஒருவர் ஒட்டுநர் உரிமம் வாங்க வேண்டும் என்றால் அவரது புகைப்படம் வைத்த அடையாள சான்று, வயது மற்றும் முகவரிக்கான சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும். அதற்காக ஆதார்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை அல்லது பாஸ்போர்ட், ஆகியவற்றை அடையாள சான்றுகளாகப் போக்குவரத்துத் துறை எடுத்துக்கொள்கிறது.
தற்போது புதிதாக லைசென்ஸ் எடுப்பவர்களுக்கு ஏற்றுக்கொள்ளும் வகையில் 30 ஆவணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதன்படி மாநில அரசுகள் கேஸட்டட் அதிகாரிகள் மூலம் வழங்கப்பட்ட ஆவணங்களை ஏற்றுக்கொள்ளலாமா என யோசித்து வருகிறது. அதன்படி புகைப்படம் உள்ள கிஷான் பாஸ்புக், புகைப்படம் உள்ள ரேஷன் கார்டுகள், மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை, திருமண பதிவுச் சான்றிதழ், ஆகியவை அடையாளம், இருப்பிடம் மற்றும் வயதிற்கான சான்றாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என ஆலோசித்து வருகிறது.

இப்படியாக மொத்தம் 30 சான்றுகள் ஏற்றுக்கொள்ளப்படும் என யோசித்து வருகிறது. இதில் மாற்றுப் பாலினத்தவருக்காக வழங்கப்படும் சான்றும் உள்ளடங்கும். இந்த முயற்சியை அரசு மக்களுக்கு ஓட்டுநர் உரிமம் எடுக்கும் வழிமுறையை எளிதாக்கும் வகையில் இதை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளது.
அதே நேரம் ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, மற்றும் பாஸ்போர்ட் பரிந்துரைக்கப்பட்ட ஆவணங்களாகக் குறிப்பிட்டுள்ளது. இந்த ஆவணங்கள் இல்லாதவர்களுக்கு மற்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வாய்ப்பு அளிக்க இந்த நடைமுறையைப் பின்பற்றி வருகிறது.
அதே நேரம் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் ஒருவரின் வயதிற்கான அடையாள சான்றாக எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்குள் நீண்ட கால விசாவிற்குள் வந்திருப்பவர்களும் ஓட்டுநர் உரிமத்தைப் பெற முடியும் என அறிவித்துள்ளது.
குறிப்பாக வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ள சிறுபான்மையினரான சீக்கிய மதத்தவர், இந்துக்கள், ஜெயின் மதத்தவர், புத்த மதத்தவர், பார்சியம் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்தியாவில் இருக்கும் போது அவர்களது வெளிநாட்டு பாஸ்போர்டையே ஆவணமாக வைத்து லைசென்ஸ் வாங்க முடியும் என அறிவித்துள்ளது.
இந்த அவணங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் முடிவிற்கான ஒப்புதல்கள் வந்துவிட்டாலும் அதைச் செயல்படுத்துவதற்கான திட்டங்களை வகுத்து வருகிறது. விரைவில் இது செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கலாம். அப்படி வந்தால் இனி இந்தியாவில் ஓட்டுநர் உரிமம் எடுப்பது சுலபமாக இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மத்திய அரசின் இந்த திட்டம் நிச்சயம் வரவேற்கப்படவேண்டியது தான். மக்கள் பலருக்கு ஆவணங்கள் வழங்குவதில் சிக்கல் இருக்கிறது. இது நடைமுறைக்கு வந்தால் பலர் ஓட்டுநர் உரிமம் எடுப்பார்கள்.


Click it and Unblock the Notifications








