இனி வண்டிக்கு இன்சூரன்ஸ் இல்லனா சொத்தையே எழுதி குடுக்கணும்! அபராதம் எக்குதப்பா எகிற போகுது!
இந்திய சாலைகளில் ஏராளமான வாகனங்கள் இன்சூரன்ஸ் (Insurance) இல்லாமல் பயணம் செய்து கொண்டுள்ளன. இன்சூரன்ஸ் இருந்தால், ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும். உதாரணத்திற்கு நிலநடுக்கம் மற்றும் புயல் போன்ற இயற்கை சீற்றங்களால் உங்கள் வாகனங்கள் பாதிக்கப்பட்டால், இன்சூரன்ஸ் மூலம் நீங்கள் பொருளாதார பாதுகாப்பை பெறலாம்.
அதேபோல் வாகனங்கள் திருடப்பட்டாலும் கூட, இன்சூரன்ஸ் மூலமாக நீங்கள் பொருளாதார பாதுகாப்பை பெற முடியும். அத்துடன் வாகனங்கள் விபத்தில் சிக்கினால், அவற்றை சரி செய்வதற்கும் நீங்கள் குறிப்பிட்ட தொகையை பெற முடியும். மேலும் காயங்கள் ஏற்பட்டால், மருத்துவ செலவுகளுக்கான தொகையையும் இன்சூரன்ஸ் மூலம் நீங்கள் பெறலாம்.

மேலும் உங்கள் வாகனத்தால், மற்ற வாகனங்களுக்கு சேதமோ அல்லது மற்ற வாகன ஓட்டிகளுக்கு காயங்களோ ஏற்பட்டாலும் கூட, இன்சூரன்ஸ் மூலமாக பொருளாதார பாதுகாப்பை பெறலாம். ஆனால் இவ்வளவு நன்மைகள் இருந்தாலும் கூட, இன்சூரன்ஸை புதுப்பிக்க ஒரு சில வாகன உரிமையாளர்கள் தவறுகின்றனர்.
இதன் காரணமாக சாலை விபத்துக்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடுகள் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன. எனவே இன்சூரன்ஸ் இல்லாமல் சாலைகளில் பயணம் செய்யும் வாகனங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கடுமையாக்க மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் தற்போது திட்டமிட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கான அபராத தொகையை கடுமையாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் இன்சூரன்ஸ் இல்லாவிட்டால் முதல் முறையாக சிக்குபவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. தொடர்ந்து இதே தவறை செய்தால், 4 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
அத்துடன் 3 மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. ஆனால் இனி முதல் முறை சிக்கினால், வாகனத்தின் அடிப்படை பிரீமியம் கட்டணத்தை விட 3 மடங்கு தொகையை அபராதமாக செலுத்த வேண்டியிருக்கும். அதேபோல் தொடர்ந்து இதே தவறை செய்தால், வாகனத்தின் அடிப்படை பிரீமியம் கட்டணத்தை விட 5 மடங்கு அதிக தொகையை அபராதமாக செலுத்த நேரிடும்.
உதாரணத்திற்கு ஒரு டூவீலருக்கான அடிப்படை பிரீமியம் கட்டணம் ஒரு ஆண்டுக்கு 1,500 ரூபாய் என வைத்து கொள்வோம். அவர்கள் இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனத்தை இயக்கி முதல் முறை சிக்கினால் இனி 4,500 ரூபாய் அபராதம் செலுத்த நேரிடும். இதே தவறை தொடர்ந்து செய்தால், 7,500 ரூபாய் அபராதம் செலுத்த நேரிடலாம்.
மறுபக்கம் சொகுசு வாகனங்களை வைத்திருப்பவர்களுக்கான ஆண்டு பிரீமியம் கட்டணம் சுமார் 50 ஆயிரம் ரூபாய் என வைத்து கொள்வோம். அப்படியானால் அவர்கள் முதல் முறை சிக்கினால், 1.50 லட்ச ரூபாயை அபராதமாக செலுத்த நேரிடும். அவர்கள் தொடர்ந்து இதே தவறை செய்தால், 2.50 லட்ச ரூபாய் வரை அபராதம் செலுத்த நேரிடலாம்.
டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியின்படி, இது மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகத்தால் முன்மொழியப்பட்டுள்ள திட்டம் ஆகும். இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கான அபராத தொகை உயர்வு எப்போது அமலுக்கு வரும்? என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால் கூடிய விரைவில் புதிய அபராத தொகைகள் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் இன்றியமையாத ஒன்றாகும். ஆனால் நிறைய வாகன உரிமையாளர்கள், பிரீமியம் கட்டணம் செலுத்த தயங்கி கொண்டு, இன்சூரன்ஸ் இல்லாமலேயே வாகனங்களை இயக்குகின்றனர். தற்போது முன்மொழியப்பட்டுள்ள புதிய அபராத தொகை அமலுக்கு வந்தால், இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனங்களை இயக்குபவர்களின் எண்ணிக்கை குறையும் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








