கண்மூடித்தனமாக ஜிபிஎஸ் சிஸ்டத்தை நம்பினால் இதுதான் கதி!
ஜிபிஎஸ் சிஸ்டம் காட்டிய பாதையில் பயணித்தவர் ஆற்றின் மையப்பகுதிக்கு சென்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது குறித்த தகவல்களை காணலாம்.
கண்மூடித்தனமாக ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை நம்பிய ஒருவரை அவரின் கார் ஜிபிஎஸ் சிஸ்டம், சாலையில் இருந்து பிரித்து, ஓடிக்கொண்டிருந்த ஒரு ஆற்றின் நடுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

பொதுவாக அதிகம் பரிச்சயம் அல்லாத புதிய இடங்களுக்கு செல்லும் போது அந்த இடத்தின் சாலைகள் பற்றி அறிந்திருக்காத சூழ்நிலையில் வாகன ஓட்டிகளுக்கு கைகொடுப்பது ‘ஜிபிஎஸ்' எனப்படும் நேவிகேஷன் தொழில்நுட்பம் ஆகும்.

புதிய இடங்களில் சாலைகள், வழித்தடம் உள்ளிட்டவைகளை மொழி தெரியாத நிலையிலும், யாரிடமும் கேட்டுத் தெரிந்துகொள்ள அவசியம் இன்றி செல்ல வேண்டிய இடத்தின் வழித்தடத்தை ஸ்கிரீனில் நம் கண் முன்னே கொண்டுவந்துவிடுகிறது ஜிபிஎஸ்.

ஆனாலும், தொழில்நுட்பங்களை கண்மூடித்தனமாக நம்புவது பல நேரங்களில் ஆபத்திற்கும் கூட்டிச்செல்லும் என்பது தற்போது நடந்துள்ள சம்பவம் மூலம் தெரியவந்துள்ளது.

சீனாவில் உள்ள ஆன்ஹூய் என்ற ஊருக்கு தனது காரில் முதல்முறையாக செல்லத் தீர்மானித்துள்ளார் வாகன ஓட்டி ஒருவர். அந்த ஊர் இவருக்கு புதிது என்பதால் தனது கார் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை நம்பி பயணித்துள்ளார். ஜிபிஎஸ் காட்டிய வழியே சென்ற போது சாலையில் அதிக தண்ணீர் ஓடியுள்ளது.

எனினும், வேறு வழிகளை ஜிபிஎஸ் காட்டாததால் அது காட்டிய பாதையிலேயே தொடர்ந்து பயணித்த அவருக்கு தான் ஒரு ஆற்றின் நடுப்பகுதிக்கு வந்து விட்டோம் என்பதனை வெகு விரைவிலேயே உணர்ந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பின்னர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தன் காரணமாக, புல்டோசர் கொண்டுவரப்பட்டு பல மணிநேர போராட்டத்திற்கு பின்னர் இவரின் கார் ஆற்றின் நடுப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டது.

இதேபோல, கடந்த ஆண்டு கனடாவில் 23 வயது பெண் ஒருவர் தனது கார் ஜிபிஎஸ் காட்டிய வழியில் பயணித்த போது, படகு குழாம் ஒன்றில் போய் விழுந்தது அந்த கார். பின்னர் ஜன்னல் வழியே தப்பித்து 100 மீட்டர்கள் நீந்திக் கரை சேர்ந்து, அங்கிருப்பவர்கள் மூலம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மீட்கப்பட்டது அவரின் கார்.

இதில் மோசமான விளைவை ஏற்படுத்தும் ஆபத்தும் அடங்கியுள்ளது. நீரில் சென்று சிக்கும் போது காரின் மின்சாரம் துண்டிக்கப்படும் நிலையில், காரின் ஜன்னல்களை திறப்பது சாத்தியம் இல்லாததாக மாறிவிடும். நீருக்கடியில் ஜன்னல்களை உடைப்பதும் அவ்வளவு எளிதாக இருக்காது.

இதைப் போன்ற சூழ்நிலையில் உயிரிழப்புகள் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிடுகிறது. ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை கண்மூடித்தனமாக நம்பியிருந்தால் இதைப் போன்று நிலையே ஏற்படும்.

கண்மூடித்தனமாக ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை நம்புவது எவ்வளவு ஆபத்தானது என்பது, இச்சம்பவங்கள் மூலம் தெரியவருகிறது. ஆகவே, இதனை முழுமையாக நம்பாமல் சுய அறிவினையும் உபயோகிப்பதே, பாதுகாப்பான பயணத்திற்கு உதவும் என்பதே உண்மை.


Click it and Unblock the Notifications








