மொத்தமா தூக்க போறாங்க... இந்தியாவின் எந்த மூலையிலும் இனி டோல்கேட்கள் இருக்காது... மத்திய அரசு அதிரடி...
அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவின் எந்த மூலையிலும் டோல்கேட்கள் இருக்காது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள டோல்கேட்கள் என்றாலே வாகன ஓட்டிகளுக்கு அதிருப்தி ஏற்படுகிறது. எவ்வித அடிப்படை வசதிகளையும் செய்து தராமல் டோல்கேட்களில் கட்டண வசூல் நடந்து வருவதாக வாகன ஓட்டிகள் மிக நீண்ட காலமாக புகார் தெரிவித்து வருகின்றனர். மேலும் விதிகளை பின்பற்றாமல், கட்டண கொள்ளை நடக்கிறது என்பதும் அவர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

இதனால் டோல்கேட்களை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கையை முன்வைத்து தமிழகத்தில் பல முறை போராட்டங்களும் நடைபெற்றுள்ளன. எனினும் வாகன ஓட்டிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. ஆனால் அடுத்த இரண்டு ஆண்டுகளில், டோல்கேட்கள் இல்லாத நாடாக இந்தியா உருவெடுக்கப்போகிறது.

ஆம், உண்மைதான். ஆனால் இதற்காக மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்று விடாதீர்கள். டோல்கேட்கள் இல்லாவிட்டாலும் கூட கட்டண வசூல் சரியாக நடக்கும். இன்னும் தெளிவாக சொல்வதென்றால், தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்துவதற்கான கட்டண வசூல் முறையில் மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளன.

இந்தியா முழுவதும் வாகனங்களின் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்வதற்காக ஜிபிஎஸ் (GPS-Global Positioning System) அடிப்படையிலான தொழில்நுட்பத்தை அரசு இறுதி செய்துள்ளதாக, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி நேற்று (டிசம்பர் 17ம் தேதி) தெரிவித்தார்.

இந்த தொழில்நுட்பத்தின் அடிப்படையில் சுங்க கட்டணம் வசூலிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியா அடுத்த 2 ஆண்டுகளில் டோல்கேட்கள் இல்லாத நாடாக உருவெடுப்பதை இந்த ஜிபிஎஸ் தொழில்நுட்பம் உறுதி செய்யும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார். அசோசெம் (ASSOCHAM) அமைப்பின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது அவர் இதனை தெரிவித்தார்.

வாகனங்களின் இயக்கத்தின் அடிப்படையில், வங்கி கணக்கில் இருந்து சுங்க கட்டணம் நேரடியாகவே கழிக்கப்பட்டு விடும் எனவும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி விளக்கம் அளித்துள்ளார். இந்த புதிய தொழில்நுட்பத்தை அரசு தற்போது இறுதி செய்துள்ளது. ரஷ்ய அரசுடன் இணைந்து இந்த புதிய தொழில்நுட்பம் அமலுக்கு கொண்டு வரப்படவுள்ளது.

தற்போதைய நிலையில் அனைத்து வர்த்தக வாகனங்களும் டிராக்கிங் அமைப்புகள் உடன் வருகின்றன. அதே சமயம் பழைய வாகனங்களில் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை இன்ஸ்டால் செய்வதற்கு அரசு புதிதாக ஒரு திட்டத்தை கொண்டு வரும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார். வர்த்தக வாகனங்கள் மட்டுமல்லாது சமீபத்திய பயணிகள் வாகனங்களும் ஜிபிஎஸ் உடன்தான் வருகின்றன.

எனவே பழைய வாகனங்களில் ஜிபிஎஸ் அமைப்புகளை பொருத்துவதற்கும் அரசு வழியை கண்டறியவுள்ளது. தற்போதைய நிலையில் சுங்க கட்டணத்தை ரொக்கமாகவும், பாஸ்டேக் மூலமாகவும் செலுத்த முடியும். முதலில் ரொக்கமாக மட்டுமே சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இதனால் டோல்கேட்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்த பிரச்னையை தவிர்க்கும் வகையில்தான் பின்னர் பாஸ்டேக் கொண்டு வரப்பட்டது. ஆனால் பாஸ்ட்டேக் லேன்களிலும் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டினர். எனினும் அரசின் இந்த புதிய ஜிபிஎஸ் தொழில்நுட்பம் வாகனங்களின் முழுமையான தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








