திடீரென தீப்பற்றியதால் கப்பல் மூழ்கியது... நாசமான சொகுசு கார்களின் விலை தெரிந்தால் அதிர்ச்சி உறுதி
2,000 விலை உயர்ந்த சொகுசு கார்களை ஏற்றி சென்று கொண்டிருந்த சரக்கு கப்பல் நடுக்கடலில் திடீரென தீப்பற்றியதால் மூழ்கியது.

இத்தாலியை சேர்ந்த க்ரிமால்டி லைன்ஸ் (Grimaldi Lines) என்ற நிறுவனம், கிராண்டி அமெரிக்கா (Grande America) எனும் பெயர் கொண்ட சரக்கு கப்பலை இயக்கி வருகிறது. இந்த சூழலில், கிராண்டி அமெரிக்கா சரக்கு கப்பலானது, ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் இருந்து மொராக்கோவில் உள்ள கசப்ளான்கா (Casablanca) நோக்கி அட்லாண்டிக் கடலில் சென்று கொண்டிருந்தது.

இதில், போர்ஷே நிறுவனத்தின் 37 கார்கள் உள்பட மொத்தம் 2,000 லக்ஸரி கார்கள் கொண்டு செல்லப்பட்டன. போர்ஷே நிறுவனத்தின் 37 கார்களில், நான்கு 911 ஜிடி2 ஆர்எஸ் (Porsche 911 GT2 RS) கார்களும் அடக்கம். ஒரு போர்ஷோ 911 ஜிடி2 ஆர்எஸ் காரின் விலை இந்திய மதிப்பில் சுமார் 2 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

இது லிமிடெட் எடிசன் மாடல் ஆகும். போர்ஷே நிறுவனம் மொத்தம் ஆயிரம் 911 ஜிடி2 ஆர்எஸ் கார்களை மட்டுமே உற்பத்தி செய்தது. இதில், 4 கார்கள்தான் கிராண்டி அமெரிக்கா கப்பலில் சென்று கொண்டிருந்தன. கப்பலில் இருந்த எஞ்சிய கார்கள் ஆடி (Audi) நிறுவனத்தின் பல்வேறு மாடல்கள் ஆகும். இவைதவிர ஊழியர்கள் 27 பேர் கப்பலில் இருந்தனர்.

இந்த சூழலில் பிரான்ஸ் கடல் எல்லையில் சென்று கொண்டிருந்தபோது, கப்பலில் தீடீரென பயங்கரமாக தீ பிடித்தது. இதன் காரணமாக கப்பல் கடலில் மூழ்க தொடங்கியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக கப்பலில் இருந்த 27 ஊழியர்களும் உயிர் தப்பி விட்டனர். பிரிட்டீஸ் கடற்படை மூலம் அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். என்றாலும் ஒரு சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

அவர்கள் பிரான்ஸ் நாட்டின் பிரெஸ்ட் (Brest) எனும் நகரில் உள்ள துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் கார்கள் கடலில் மூழ்கி நாசமாகி விட்டன. இதில், நான்கு போர்ஷோ 911 ஜிடி2 ஆர்எஸ் கார்களும் அடக்கம். ஏற்கனவே குறிப்பிட்டபடி இவை லிமிடெட் எடிசன் மாடல்கள் ஆகும். அவற்றின் உற்பத்தி ஏற்கனவே நிறுத்தப்பட்டு விட்டது.

ஆனால் தற்போது விபத்தில் நாசமானதால், அவற்றை மீண்டும் உற்பத்தி செய்து, சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு வழங்க போர்ஷே நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த நான்கு கார்களும் பிரேசிலை சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு கொண்டு செல்லப்பட்டு கொண்டிருந்தது. தற்போது அவர்களுக்கு போர்ஷே நிறுவனம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

இதில், ''உங்கள் கார்களை ஏற்றி வந்த க்ரிமால்டி குழும கப்பல், தீப்பற்றியதன் காரணமாக, கடந்த மார்ச் 12ம் தேதியன்று கடலில் மூழ்கியது என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். இதன் காரணமாக உங்கள் 911 ஜிடி2 ஆர்எஸ் தற்போது டெலிவரி செய்யப்படாது. 911 ஜிடி2 ஆர்எஸ் காரின் உற்பத்தியை போர்ஷே கடந்த பிப்ரவரி மாதமே நிறுத்தி விட்டது.

என்றாலும் வாடிக்கையாளர்களின் நலன் கருதி 911 ஜிடி2 ஆர்எஸ் காரின் உற்பத்தியை ஜெர்மனியில் மீண்டும் தொடங்க போர்ஷே முடிவு செய்துள்ளது (போர்ஷே நிறுவனத்தின் தலைமையகம் ஜெர்மனியில் உள்ளது). உங்கள் கார் ஏப்ரலில் உற்பத்தி செய்யப்படும். ஜூன் மாதம் டெலிவரி செய்யப்படும்'' என கூறப்பட்டுள்ளது. நடுக்கடலில் கப்பல் தீப்பற்றி எரியும் வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
இதனிடையே கப்பலில் எப்படி தீ பற்றியது? என்பதற்கு உறுதியான காரணம் வெளியாகவில்லை. ஆனால் முதலில் ஒரு காரில் தீப்பற்றி பின்னர் கப்பல் முழுமைக்கும் தீ பரவியிருக்கலாம் என நம்பப்படுகிறது. என்றாலும் தீயின் பிறப்பிடம் எது? என்பதில் இன்னமும் சற்று தெளிவற்ற நிலை காணப்படுவதால், இதுதொடர்பான விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








