எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நீரில் இயங்காது என்று யாருங்க சொன்னா? ஓலா அதை எல்லாம் பொய் ஆக்கிடுச்சு!!
தமிழ்நாட்டை புயலும் வெள்ளமும் மாறி மாறி தாக்கி வருகின்றன. ஃபெஞ்சல் புயல் ஏற்படுத்திய தாக்கம் வட கடலோர மாவட்டங்களை புரட்டி போட்டுள்ளது. இருப்பினும் சிலர், துன்பங்களுக்கு மத்தியிலும் இன்பம் காண்கின்றனர். அந்த வகையில் ஃபெஞ்சல் புயலினால் வீட்டிற்கு முன்னால் தேங்கியிருந்த மழை நீரில் ஒருவர் தனது பேர குழந்தைகள் உடன் ஜாலியாக விளையாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது. அதில், அந்த அவர் ஓலா (Ola) எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் உதவியுடன் பேர குழந்தைகள் உடன் விளையாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
ஒவ்வொரு வருட இறுதியிலும் நம் தமிழ்நாட்டை புயல், வெள்ளம் தாக்குவது தொடர்கதையாகி வருகிறது. இந்த வருடமும் ஃபெங்கல் புயல் வரும் என எச்சரித்தனர். ஆனால், அதன்பின் அது ஃபெஞ்சல் புயலாக மாறியது. ஃபெஞ்சல் புயலால் பெரியதாக பாதிப்பு இருக்காது என ஆரம்பத்தில் கூறினர். அதற்கு இணங்க புயல் கரையை தொட்ட சமயத்தில், கடந்த காலங்களில் வந்த புயல்கள் அளவிற்கு தாக்கம் இல்லை.

ஆனால், கரையை தொட்ட பின் ஒரே இடத்தில் புயல் நிலைக்கொண்டு இருந்ததால், குறிப்பிட்ட சில பகுதிகள் மட்டும் பலத்த மழை பொழிவையும், சூறைக்காற்றையும் சந்திந்தன. அந்த குறிப்பிட்ட பகுதிக்குள் தலைநகர் சென்னை இல்லையென்றாலும், கடலூர், திண்டிவனம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகள் மோசமான சேதங்களை சந்தித்தன. மேலும், கரையை தொட்ட பின்பும் புயல் வலுவிழக்காமல் இருந்ததால், திருவண்ணாமலை வரையில் கூட அதன் தாக்கத்தை பார்க்க முடிந்தது.
இதனால், ஃபெஞ்சல் புயல் அதிக சேதாரங்களை ஏற்படுத்தாது என நினைத்திருந்த மக்களுக்கு இது நேர்மாறாக அமைந்தது. ஒரு சில கடலோர கிராமங்கள் இன்னமும் புயலின் தாக்கத்தில் இருந்து மீள முடியாமல் உள்ளன. இருப்பினும், மறுப்பக்கம் புயலினால் ஏற்பட்ட கனமழையை குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கும் மக்களும் இருக்கின்றனர். குறிப்பாக, குழந்தைகளுக்கு மழை என்றாலே அப்படியொரு ஆனந்தம் வந்துவிடும்.

அத்தகைய நேரத்தில் அவர்களுடன் பெரியவர்களும் இணைந்துவிட்டால், அவர்களும் குழந்தையாக மாறிவிடலாம். அப்படித்தான் இங்கு ஒரு தாத்தா தனது பேர குழந்தைகள் உடன் மழைநீரில் ஜாலியாக ஆட்டம் போட்டுள்ளார். ஒரு சிறிய பைபர் படகில் தனது இரு பேரக் குழந்தைகளை அமர்த்திய அவர், அந்த படகை கயிறு மூலம் ஓலா எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டருடன் இணைத்துள்ளார்.
பின்னர் அவர், அந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்ட ஆரம்பித்ததும், ஸ்கூட்டருக்கு பின்னால் படகில் அமர்ந்தவாறு அவரது பேரக் குழந்தைகள் ஜாலியாக ஆட்டம் போட்டப்படி பயணம் செய்துள்ளனர். இதனை அங்கிருந்த குழந்தைகளின் தந்தை தனது மொபைல் போனில் காட்சிப்படுத்தி இணையத்தில் வெளியிட, அது வைரலாகி உள்ளது. வீடியோவில், இவர்களது வீட்டின் முன்பகுதி முழுவதும் மழைநீரால் தேங்கி இருப்பதை காண முடிகிறது.

மேலும், இவர்களது மஹிந்திரா தார் வாகனம் ஒன்றும் மழைநீரில் நின்றுக் கொண்டிருப்பதை காணலாம். சிவப்பு நிறத்திலான அந்த தார் வாகனத்துடன் படகில் செல்லும் குழந்தைகள் மோதுவது போல் நெருக்கமாக செல்கின்றனர். இந்த நிகழ்வில், இந்த குடும்பத்தினரின் ஜாலியான விளையாட்டை தாண்டி, ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் தரம் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.
ஏனெனில், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் என்றாலே தண்ணீரில் இயங்காதவை என்கிற கருத்து ஆரம்பத்தில் நம் மக்களிடையே இருந்தது. ஆனால், பெட்ரோல் ஸ்கூட்டர்களை காட்டிலும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் நீரில் சிறப்பாக இயங்குகின்றன. தற்போது நாம் பார்த்துள்ள தாத்தா-பேர பிள்ளைகளின் ஜாலியான பயணம் சென்னையில் நடந்தது. இதே சென்னையில் இன்னொரு ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓட்டி இடுப்பளவு தேங்கிய மழைநீரில் ஸ்கூட்டரை ஓட்டி செல்லும் வீடியோவும் இணையத்தில் வெளியாகி உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெட்ரோல் ஸ்கூட்டராக இருந்தாலும் சரி, எலக்ட்ரிக் ஸ்கூட்டராக இருந்தாலும் சரி நீரில் அதனை ஓட்டி செல்லும்போது உடனடியாக அதனால் ஏற்படும் பாதிப்புகள் தெரிவதில்லை. சில நாட்கள் கழித்த பின்னரே பழுதுகள் ஒன்றன்பின் ஒன்றாக வருகின்றன. ஆதலால், முடிந்தவரையில் மழைநீரில் இரு சக்கர வாகனங்களை ஓட்ட வேண்டாம்.


Click it and Unblock the Notifications









