இந்த வயசுல எங்க பாட்டிலாம் கதை சொல்லீட்டு இருந்தாங்க... உலகையே திரும்பி பார்க்க வைத்த கேரள மூதாட்டி...
இந்திய சாலைகளில் மிகவும் விலை உயர்ந்த கார்களை பார்ப்பது என்பதெல்லாம் தற்போது அரிதான ஒரு விஷயமாக மாறி விட்டது. அவற்றை பெரும்பாலும் இளம் வயதுடைய ஆண்கள் ஓட்டுவதைதான் நாம் பார்த்திருப்போம். ஆனால் தற்போது அரிதான வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
இந்த வைரல் வீடியோவில், மூதாட்டி ஒருவர் மிகவும் விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ இஸட்4 ஸ்போர்ட் காரை (BMW Z4 Sports Car) ஓட்டுவதை நம்மால் பார்க்க முடிகிறது. கேரளா (Kerala) மாநிலத்தை சேர்ந்த இந்த 73 வயது மூதாட்டியின் பெயர் ராதாமணி (Radhamani) என்பதாகும். கொச்சி (Kochi) நகரில் செயல்பட்டு வரும் A2Z டிரைவிங் பயிற்சி பள்ளியின் (A2Z Driving School) உரிமையாளராக இவர் உள்ளார்.

ராதாமணியின் கணவரால், கடந்த 1970ம் ஆண்டு இந்த டிரைவிங் ஸ்கூல் தோற்றுவிக்கப்பட்டது. கடந்த 2004ம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்து ஒன்றில், ராதாமணியின் கணவர் உயிரிழந்து விட்டார். இதை தொடர்ந்து, ராதாமணிதான் இந்த டிரைவிங் ஸ்கூலை தற்போது நடத்தி கொண்டுள்ளார். தற்போது 11 வகையான வாகனங்களை ஓட்டுவதற்கான டிரைவிங் லைசென்ஸ் ராதாமணியிடம் உள்ளது.
இதில், பஸ், லாரி, ரோடு ரோலர், க்ரேன் போன்ற வாகனங்கள் எல்லாம் அடங்கும். 11 வகையான வாகனங்களை ஓட்டுவதற்கான டிரைவிங் லைசென்ஸ் இருந்தாலும் கூட, ராதாமணியின் விருப்பம் எதுவென்றால், டூவீலர்தான். கடந்த 1993ம் ஆண்டு டூவீலர் ஓட்டுவதற்கான டிரைவிங் லைசென்ஸை அவர் பெற்றார்.

கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு அளித்த பேட்டி ஒன்றில், அவரது கணவர் ஸ்கூட்டர் ஒன்றை வாங்கி கொடுத்ததாகவும், அப்போதில் இருந்து எங்கு செல்வதாக இருந்தாலும் அந்த ஸ்கூட்டர்தான், என ராதாமணி கூறியுள்ளார். மிகவும் அவசியம் என்றால் மட்டுமே, அவர் காரை வெளியில் எடுப்பாராம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ராதாமணி உண்மையிலேயே மிகவும் ஆச்சரியமான ஒரு பெண்தான். இந்தியாவில் பெரும்பாலான மூதாட்டிகள் இந்த வயதில், தங்கள் பேர குழந்தைகளுக்கு கதைகளை சொல்லி கொண்டுள்ளனர். ஆனால் ராதாமணியோ மற்றவர்களுக்கு எல்லாம் முன் உதாரணமான காரியத்தை செய்து வருகிறார் என்பது ஆச்சரியப்படுத்துகிறது.
எனவே இதை நாம் நிச்சயமாக பாராட்டியே ஆக வேண்டும். பல்வேறு துறைகளிலும் சாதிக்க துடிக்கும் பெண்களுக்கு ராதாமணி ஒரு ரோல் மாடல் என்பதில் துளியும் சந்தேகமில்லை. சாதனை படைப்பதற்கும், வயதிற்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்பதையும் ராதாமணி அழுத்தம் திருத்தமாக திருத்தியுள்ளார்.
இவரிடம் இந்த கால இளைஞர்கள் கற்று கொள்வதற்கு மற்றொரு முக்கியமான விஷயமும் இருக்கிறது. டிரைவிங் லைசென்ஸ் பெற்று விட்டு வாகனங்களை ஓட்ட வேண்டும் என்பதுதான் அது. இந்தியாவில் உரிய வயதை எட்டுவதற்கு முன்னரே தற்போது பலர் வாகனங்களை ஓட்டி வருகின்றனர். அவர்கள் எல்லாம் தயவு செய்து லைசென்ஸ் பெற்ற பிறகு, வாகனங்களை ஓட்டுங்கள்.


Click it and Unblock the Notifications








