இந்த மாதிரி பேரன் கெடைக்க அந்த பாட்டி குடுத்து வெச்சிருக்கணும்! இன்டர்நெட் முழுக்க இப்ப இதை பத்திதான் பேச்சு!
பாட்டி-பேரன் உறவு புனிதமானது. பெற்ற அப்பா, அம்மாவை விட பாட்டி மேல் அதிக பாசம் வைத்திருக்கும் பேரன்கள் இங்கு ஏராளம். அப்படிப்பட்ட ஒரு பேரனின் உணர்வுபூர்வமான கதைதான் இந்த செய்தி. சமூக வலை தளங்களில் தற்போது வைரல் வீடியோ (Viral Video) ஒன்று வேகமாக பரவி வருகிறது.
இந்த வீடியோவில், 15 நாட்களுக்கு ஒரு முறை பாட்டியை காரில் வெளியே அழைத்து செல்லும் பேரனின் கதை சொல்லப்பட்டுள்ளது. பாட்டியை 15 நாட்களுக்கு ஒரு முறை காரில் வெளியே அழைத்து செல்லும் பேரன் வெளியூரில் எங்கேயோ வேலை செய்து வருகிறார். அனேகமாக அது மும்பையாக (Mumbai) இருக்கலாம் என கருதப்படுகிறது.

அந்த பாட்டியோ பெங்களூரில் (Bangalore) வசித்து வருகிறார். ஒவ்வொரு முறை காரில் வெளியே செல்லும்போதும், கடைசி முறை எப்படி 'என்ஜாய்' செய்தாரோ, அதை போலவே பாட்டி பயணத்தை ரசிப்பதாக அந்த பேரன் குறிப்பிட்டுள்ளார். இந்த பயணத்தின்போது பெங்களூரின் பழைய கதைகளை அந்த பாட்டி நினைவு கூறுவாராம்!
சிறு வயதில் இருந்தே தனது வாழ்க்கையில் பாட்டியின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என அந்த பேரன் குறிப்பிட்டுள்ளார். அவரை வளர்த்து ஆளாக்கியதே பாட்டிதானாம்! வீட்டு பாடம், சமையல் என பல்வேறு விதங்களிலும் அந்த பேரனுக்கு பாட்டி உதவி செய்துள்ளார். ஆனால் வேலை காரணமாக பாட்டியுடன் அந்த பேரனால் ஒன்றாக வாழ முடியவில்லை.
இருப்பினும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் இருவரும் தொலைபேசியில் பேசி கொள்வார்களாம். அத்துடன் 15 நாட்களுக்கு ஒரு முறை அந்த பேரன் பெங்களூர் வந்து தனது பாட்டியை காரில் வெளியே அழைத்து சென்று விடுகிறார். இந்த பயணத்தின் மூலம் பாட்டியின் கடந்த காலங்களை எல்லாம் பேரன் முழுமையாக தெரிந்து கொள்கிறார்.
ஒரு பாட்டி என்பதையும் கடந்து, தனது அனுபவங்கள் மற்றும் வெவ்வேறு குணநலன்களையும் பேரனுக்கு அந்த மூதாட்டி தெரிவிக்கிறார். எனவே இந்த பயணங்கள் தங்கள் இருவருக்கும் இடையேயான உறவை இன்னும் அழகாக மாற்றுவதாக பேரன் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் புதிய நினைவுகளை உருவாக்குவதற்கும் இந்த பயணங்கள் உதவி செய்கிறதாம்.
இந்த தருணத்தில் மற்றொரு அழகான பாட்டி-பேரன்கள் கதையையும் நாங்கள் இங்கே உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம். சமீபத்தில் பாட்டி ஒருவர் தனது கணவரின் பழைய ஜாவா (Jawa) பைக்கை புதுப்பித்து, தனது பேரன்களுக்கு பரிசாக வழங்கியுள்ளார். துருப்பிடித்து சிதிலமடைந்து கிடந்த அந்த பைக், ஷோரூம் கண்டிஷனுக்கு கொண்டு வரப்பட்டு, பேரன்களுக்கு பரிசாக வழங்கப்பட்டது.
அதாவது இந்த பேரன்களுக்கு தங்கள் தாத்தாவின் பழைய ஜாவா பைக், பாட்டி மூலமாக, புதிது போல் கிடைத்துள்ளது. இது சுமார் 50 ஆண்டுகளுக்கு முந்தைய ஜாவா பைக் ஆகும். இது தொடர்பான வீடியோ யூடியூப் (YouTube) வெளியாகி சமூக வலை தளங்களை ஆக்ரமித்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பரபரப்பான வாழ்க்கை முறைக்கு இடையே அவ்வப்போது கண்களில் தென்படும் இது போன்ற உணர்வுபூர்வமான பாட்டி-பேரன் உறவுகள் பற்றிய செய்திகள் நம்மை அமைதியாக்குகின்றன. அத்துடன் பாட்டிகள் மற்றும் பேரன்களுடனான கடந்த கால வாழ்க்கையை அனைவருக்கும் நினைவுபடுத்துவதாகவும் இவை உள்ளன.


Click it and Unblock the Notifications








