மாப்பிள்ளையை பிடித்திருந்த பேயை ஓட ஓட விரட்டிய மாமனார்! செருப்பால அடிச்சதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணமா!
இந்தியாவில் வரதட்சணை (Dowry) கேட்பதும், வாங்குவதும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இன்னமும் கூட இந்தியா முழுவதும் ஆங்காங்கே வரதட்சணை கொடுமைகளுக்கு பெண்கள் ஆளாகி கொண்டேதான் இருக்கின்றனர். உண்மையில் ஒரு சில விஷயங்கள் மட்டுமே வழக்கு, செய்திகள் ஆகியவற்றின் மூலம் நமக்கு தெரியவருகின்றன.
நிறைய பெண்கள் தங்கள் கஷ்டத்தை வெளியில் சொல்லாமல், வாழ்க்கையை அனுசரித்து சென்று கொண்டுள்ளனர். திருமணம் முடிந்த பிறகு, வரதட்சணை கொடுமைகளை அரங்கேற்றுவது ஒரு ரகம் என்றால், திருமண நாளான்று வரதட்சணை கேட்டு அடம் பிடிப்பது ஒரு ரகம். இதில் 2வது ரகத்தை சேர்ந்த ஒரு மணமகனுக்கு தற்போது தக்க பாடம் புகட்டப்பட்டுள்ளது.

சமூக வலை தளங்களில் தற்போது காட்டு தீ போல் பரவி வரும் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தனது மாப்பிள்ளையை, மாமனார் செருப்பால் அடிக்கும் காட்சிகளை இந்த வீடியோவில் நம்மால் காண முடிகிறது. மாப்பிள்ளை வரதட்சணை கேட்டதால்தான், மாமனார் செருப்பால் அடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருமணம் முடிந்த பிறகு, மணப்பெண்ணை, மணமகனுடன் அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை பெண் வீட்டார் செய்துள்ளனர். அப்போது வரதட்சணையாக புதிய பைக் (Bike) வாங்கி கொடுத்தால்தான், உங்கள் பெண்ணை அழைத்து செல்வேன் என மாப்பிள்ளை கூறியுள்ளார். பெண் வீட்டார் சமாதானம் செய்தும், அவர் இறங்கி வரவில்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த மணப்பெண்ணின் தந்தை, செருப்பை கழற்றி, மாப்பிள்ளையை சரமாரியாக அடித்துள்ளார். இதற்கு பிறகுதான், மாப்பிள்ளையை பிடித்திருந்த வரதட்சணை எனும் பேய் ஓடியுள்ளது. சிறிது நேரத்தில், தன்னை செருப்பால் அடிக்க வேண்டாம் என மணமகன் கையெடுத்து கும்பிடுவதையும் இந்த வீடியோவில் நம்மால் காண முடிகிறது.
இந்த சம்பவம் எங்கு நடைபெற்றது? என்பது தெரியவில்லை. எனினும் வட இந்தியாவில் எங்கேயாவது நடைபெற்றிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வரதட்சணை கேட்கலாம் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள் இந்த வீடியோவை பார்த்த பிறகு, தங்கள் முடிவை மாற்றி கொள்வார்கள் என நாம் நம்பலாம்.
வரதட்சணை கேட்டு பெண்ணை கொடுமைப்படுத்திய மாப்பிள்ளை, மாமியார், மாமனார் மீது வழக்கு என்பது போன்ற செய்திகள் இன்னும் வெளியாகி கொண்டிருப்பது வேதனையான ஒரு விஷயம்தான். இவர்களில், கார் (Car) மற்றும் பைக் போன்ற வாகனங்கள் வேண்டும் என அடம்பிடிப்பவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர்.
வாகனங்கள் நமது அன்றாட வாழ்க்கைக்கு மிகவும் அவசியம் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அவற்றை சொந்த உழைப்பில் வாங்க வேண்டும். அதை விடுத்து, வரதட்சணையாக கேட்டு யாரையும் தொந்தரவு செய்ய கூடாது. இந்தியாவில் தற்போது செகண்ட் ஹேண்ட் (Second Hand) வாகன சந்தை மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்து விட்டது.
நடுத்தர வர்க்க மக்கள் மற்றும் இளம் வயதினரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவதால், வரும் ஆண்டுகளில் இந்தியாவின் செகண்ட் ஹேண்ட் வாகன சந்தை இன்னும் பிரம்மாண்டமான வளர்ச்சியை சந்திக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த செகண்ட் ஹேண்ட் வாகன சந்தையில், ஓரளவிற்கு குறைவான விலையிலேயே நல்ல தரமான கார் மற்றும் பைக்குகள் கிடைக்கின்றன.
எனவே நமது பட்ஜெட்டிற்கு ஏற்ற வாகனத்தை எளிதாக தேர்வு செய்யலாம். சொந்த வாகனத்திற்கு இதுபோன்ற வழிகளை பின்பற்றாமல், வரதட்சணை என்ற ஆயுதத்தை கையில் எடுத்தால், சட்டம் சிறை தண்டனை என்ற பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் என்பதை யாரும் எக்காரணத்தை கொண்டும் மறந்து விடக்கூடாது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் திருமணத்தின்போது, ஆடி (Audi), பிஎம்டபிள்யூ (BMW) மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) போன்ற நிறுவனங்களின் மிகவும் விலை உயர்ந்த கார்கள் கூட சீர்வரிசையாக வழங்கப்பட்டுள்ளன. வசதி படைத்தவர்கள், தங்கள் பெண்ணின் மீது உள்ள பாசத்தால், தாமாக முன்வந்து பல லட்ச ரூபாய் மதிப்புள்ள கார்களை கொடுக்கின்றனர். ஆனால் அனைவரிடமும் இதை எதிர்பார்ப்பது தவறு.


Click it and Unblock the Notifications