கல்யாண ஊர்வலத்துக்கு இப்படி ஒரு வண்டியா? எல்லாரையும் திரும்பி பாக்க வெச்சுட்டீங்க... ஆனா அபராதம் கட்டணுமே!
மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற வித்தியாசமான திருமண ஊர்வலம் கவனம் ஈர்த்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

திருமண நிகழ்ச்சியின்போது, மணமகனை குதிரை மீது அமர வைத்து ஊர்வலம் வருவதை பலரும் வழக்கமாக வைத்துள்ளனர். இன்னும் ஒரு சிலரோ ரோல்ஸ் ராய்ஸ் போன்ற விலை உயர்ந்த கார்களை அலங்கரித்து ஊர்வலர் வருகின்றனர். இதற்காக விலை உயர்ந்த சொகுசு கார்களை வாடகைக்கு எடுப்பவர்களும் கூட உள்ளனர்.

ஆனால் மத்திய பிரதேச மாநிலத்தில் தற்போது வித்தியாசமான நிகழ்வு ஒன்று நடைபெற்றுள்ளது. மணமகன் ஒருவர் குதிரை மற்றும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களுக்கு பதிலாக புல்டோசரில் (Bulldozer) ஊர்வலமாக வந்துள்ளார். அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள இந்த சம்பவம், மத்திய பிரதேச மாநிலம் பெடுல் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.

சிவில் இன்ஜினியரான அங்குஸ் ஜெய்ஸ்வால் என்பவர்தான் குதிரைக்கு பதிலாக புல்டோசரை பயன்படுத்திய மணமகன். புல்டோசரின் முன் பகுதியில் இருக்கும் 'லோடிங் பக்கெட்' (Loading Bucket) பகுதியை அலங்கரித்து, அங்குஸ் ஜெய்ஸ்வால் ஊர்வலமாக வந்துள்ளார். புல்டோசரின் லோடிங் பக்கெட்டில் மணமகன் அங்குஸ் ஜெய்ஸ்வால் தவிர மேலும் ஒரு சிலரும் அமர்ந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புல்டோசரில் திருமண ஊர்வலம் முடிவடைந்த பிறகு, அதன் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவின. இந்த போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் அரசு அதிகாரிகளையும் சென்றடைந்தன. இதன் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணை நடத்தி, தற்போது அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளனர்.

இந்த வினோதமான சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட புல்டோசரின் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்யுமாறு காவல் துறை அதிகாரிகளுக்கு, உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதன்பின் புல்டோசரின் டிரைவர் ரவி பராஸ்கருக்கு 5 ஆயிரம் ரூபாயை அதிகாரிகள் அபராதமாக விதித்தனர். மோட்டார் வாகன சட்டப்படி புல்டோசரை இப்படி பயன்படுத்தியது தவறாகும்.

எனவே மோட்டார் வாகன சட்டத்தின் விதிமுறைகளை மீறியதற்காக புல்டோசரின் டிரைவர் ரவி பராஸ்கருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. புல்டோசர் போன்ற கனரக வாகனங்களை வணிக ரீதியிலான பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். பொதுமக்களின் போக்குவரத்திற்காக அவற்றை பயன்படுத்த முடியாது.

எனவேதான் புல்டோசரின் டிரைவர் ரவி பராஸ்கருக்கு காவல் துறையினர் அதிரடியாக அபராதம் விதித்துள்ளனர். புல்டோசரில் ஊர்வலம் வந்த மணமகன் அங்குஸ் ஜெய்ஸ்வால் சிவில் இன்ஜினியர் ஆவார். இவர் முன்னதாக கட்டுமானம் தொடர்பான நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். அப்போது புல்டோசர்களின் பயன்பாடு அவரது தினசரி பணிகளின் ஒரு அங்கமாக இருந்து வந்துள்ளது.

இதன் காரணமாகவே பாரம்பரியமான குதிரைக்கு பதிலாக புல்டோசரில் அங்குஸ் ஜெய்ஸ்வால் திருமண ஊர்வலத்தை நடத்தியுள்ளார். ஆனால் இந்தியாவில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது இது முதல் முறை கிடையாது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பாகவும் கூட இந்தியாவில் இத்தகைய வினோதமான சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் இதுபோன்றதொரு சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் மணமகனும், மணமகளும் புல்டோசரின் முன் பகுதியில் உள்ள லோடிங் பக்கெட்டில் அமர்ந்து ஊர்வலம் வந்தனர். இதில், மணமகன் ஜேசிபி ஆபரேட்டர் ஆவார். எனவே தன்னுடைய திருமணத்தை தனித்துவமாக காட்டவும், வேலை மீது தான் கொண்டிருக்கும் காதலை வெளிப்படுத்தவும், அவர் திருமண ஊர்வலத்திற்கு புல்டோசரை பயன்படுத்தினார்.

ஆரம்பத்தில் புல்டோசரில் ஊர்வலம் வருவதற்கு மணமகள் பயப்பட்டுள்ளார். ஆனால் மணமகன்தான் அவரை சமாதானம் செய்து, தனது கனவை நிறைவேற்றியுள்ளார். இதுபோன்ற வித்தியாசமான ஆசைகள் பலருக்கும் இருந்தாலும் கூட, இது தவறான ஒரு விஷயமாகும். ஏனெனில் எந்த விதமான பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் புல்டோசரின் லோடிங் பக்கெட்டில் அமர்வது மிகவும் ஆபத்தானது.

இதுபோன்ற வித்தியாசமான செயல்கள் மூலம் தனித்துவமாக காட்ட விரும்புபவர்கள், பாதுகாப்பு குறித்து தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். குறிப்பாக பொது சாலைகளில் இதுபோன்ற சம்பவங்கள் ஆபத்துக்களை ஏற்படுத்தலாம். அத்துடன் காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளதால், கவனமாக இருப்பது சிறந்தது.


Click it and Unblock the Notifications