மிடில்-கிளாஸ் மக்கள் பழைய காரை கூட வாங்கிவிட கூடாதுனு நினைக்குறாங்களா? ஜிஎஸ்டி ஏறிகிட்டே போகுது!!
இந்தியா, உலகின் மிக பெரிய கார் சந்தை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதேபோல், ஏற்கனவே வேறொருவரால் பயன்படுத்தப்பட்ட யூஸ்டு கார்களை (Used Car) வாங்குவோரின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இதன் மூலமாக, இந்தியாவில் யூஸ்டு-கார் மார்க்கெட் பெரிய அளவில் வளர்ந்துள்ளது. இந்த நிலையில், பயன்படுத்தப்பட்ட காரை வாங்க திட்டமிட்டு வருபவர்களுக்கு பெரிய இடியாக ஒரு செய்தி அரசாங்கத்திடம் இருந்து வெளிவந்துள்ளது. அது வேறு ஒன்றுமில்லை, யூஸ்டு கார்களை விற்பனை செய்வதற்கான ஜிஎஸ்டி (GST) அதிகரிக்கப்பட்டுள்ளது என்பதாகும். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி தொடர்ந்து பார்க்கலாம்.
கார் ஒன்றை வாங்க வேண்டும் என்பது நம் நாட்டில் பலருக்கு வாழ்நாள் இலட்சியமாக உள்ளது. ஆனால், அதனை நிஜமாக்குபவர்கள் சிலர் மட்டுமே ஆகும். ஏனெனில், அந்த அளவிற்கு கார்களின் விலைகள் ஏழை, எளியோருக்கு எட்டா கனியாக உள்ளன. இதனாலேயே எப்படியாவது ஒரு காரை வாங்கிவிட வேண்டும் என நினைப்பவர்கள் யூஸ்டு கார்களின் பக்கம் செல்கின்றனர்.

செல்வந்தர்கள் கூட சொகுசு கார்களை, ஏற்கனவே வேறொருவர் பயன்படுத்தியதையே வாங்க விரும்புகின்றனர். அதற்கு சில காரணங்கள் உள்ளன. ஆனால், தற்போது ஜிஎஸ்டி அதிகரிப்பு என்கிற பெயரில் மத்திய அரசு கை வைத்திருப்பது அளவில் சிறியதான, குறைந்த விலையிலான மற்றும் குறைந்த பவர்ஃபுல்லான யூஸ்டு கார்களை வாங்கும் மக்களின் வயிற்றில் ஆகும்.
ஜிஎஸ்டி எவ்வளவு அதிகரிக்கப்பட்டுள்ளது என்பதை பார்ப்பதற்கு முன், யூஸ்டு கார்களை விற்பனை செய்வதற்கு தற்போது விதிக்கப்படும் ஜிஎஸ்டி எவ்வளவு என்பதை சுருக்கமாக பார்ப்போம். 1200சிசி அல்லது அதற்கும் அதிக பவர்ஃபுல்லான என்ஜினை கொண்ட பெட்ரோல் கார்களுக்கும், 1500சிசி அல்லது அதற்கும் அதிக பவர்ஃபுல்லான என்ஜினை கொண்ட டீசல் கார்களுக்கும் 18% ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.

இந்த 18% ஜிஎஸ்டி ஆனது யூஎஸ்டு கார்களின் நீளம் 4000மிமீ அல்லது அதற்கும் அதிகமான நீளத்தில் இருந்தால் மட்டுமே விதிக்கப்படும். 4000மிமீ, அதாவது 4 மீட்டர்களுக்கும் குறைவான நீளம் கொண்ட யூஸ்டு கார்களுக்கு 12% ஜிஎஸ்டி மட்டுமே விதிக்கப்பட்டு வருகிறது. யூஸ்டு எலக்ட்ரிக் கார்களுக்கும் கூட அவற்றின் நீளம் 4000மிமீ-க்கும் குறைவாக இருந்தால் 12% ஜிஎஸ்டி மட்டுமே விதிக்கப்பட்டு வருகிறது.
இந்த வரி சதவீதங்களை தற்போது ஜிஎஸ்டி கவுன்சில் (Council) எல்லா வாகனங்களுக்கும் ஒரே மாதிரியாக மாற்றியுள்ளது. அதாவது, எந்தவொரு யூஸ்டு காரை விற்பனை செய்வதாக இருந்தாலும், அது எலக்ட்ரிக் காராக இருந்தாலும் சரி அதற்கு 18% ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்பதுதான் அந்த மாற்றம் ஆகும். ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சல்மரில் நடைபெற்றுவரும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான 55வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

யூஸ்டு கார்களுக்கு ஜிஎஸ்டி ஆனது 2017ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த சமயத்தில் புதிய கார்களை வாங்குவோருக்கும், யூஸ்டு காரை வாங்குவோருக்கும் ஒரே அளவில் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டது. அதன்பின், யூஸ்டு கார் வணிகத்தை ஊக்கப்படுத்தும் விதமாக அவற்றிற்கான ஜிஎஸ்டி குறைத்துக் கொள்ளப்பட்டது. தற்போது, அளவில் சிறியதான யூஸ்டு கார்களுக்கான ஜிஎஸ்டி அதிகரிக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: யூஸ்டு கார்களுக்கான ஜிஎஸ்டி அதிகரிக்கப்பட்டு இருப்பது, நிச்சயமாக யூஸ்டு-கார் வணிகத்தை பாதிக்கும். யூஸ்டு-கார் மார்க்கெட்டை நம்பி நிறைய பேர், நிறைய நிறுவனங்கள் வணிகம் செய்து வருகின்றன. குறிப்பாக, எப்படியாவது சில இலட்சங்களை சேர்த்து வைத்து சிறிய அளவிலான யூஸ்டு காரை ஆவது வாங்கிவிட வேண்டும் என விரும்புவோரை தான் ஜிஎஸ்டி கவுன்சிலின் இந்த முடிவு பெரியதாக பாதிக்கும் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications









